பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா * ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!* பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி* செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்* குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!*
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி* மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்* கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!* நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்-
தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்* தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்*
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்* விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!*
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள* வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!*
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்* கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்* என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்* வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி* ஒருங்கு-
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை* ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்* முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!* கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே*
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!* துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை* அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!*
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்* தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய*
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய* நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்* தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய* என்-
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்- சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்* பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர*
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்* கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக*
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே* நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ*
ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்* சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்* அரையிற்-
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்* பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்* மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக*
எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்* ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று*
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு* ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து* சுரி குழல் மடந்தையர்திறத்துக்*
காதலே மிகுத்து கண்டவா* திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்* வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து* பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன் தமர் பற்றி எற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை* பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து* திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்* உணர்விலேன் ஆதலால் நமனார்*
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்* பரமனே! பாற்கடல் கிடந்தாய்!*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்* நீதி அல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே* துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா* வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி* உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
தான் உடைக் குரம்பை பிரியும்போது* உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்*
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!* திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!*
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மதுவார் தண் அம் துழாயான்* முது வேத முதலவனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆள் செய்யும் ஈடே
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.
அணங்கு என ஆடும் என் அங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே*
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.
அமுதம் அமரர்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர் திரை நீள் கடலானே.
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்* தோள்கள் தலை துணிசெய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள்கள் தலைக்கழிமின்னே.
கழிமின் தொண்டீர்கள் கழித்துத்* தொழுமின் அவனை தொழுதால்*
வழி நின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.
தரும அரும் பயன் ஆய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினை கடிவாரே.
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடு புள் உயர்த்த* வடிவு ஆர் மாதவனாரே.
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.