பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்க்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறு ஆயிற்றே. (2)
ஓடுவார் விழுவார்* உகந்து ஆலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குத்தான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே
பேணிச் சீர் உடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத் தாம் புகுவார்* புக்குப் போதுவார்*
ஆண் ஒப்பார்* இவன் நேர் இல்லை காண்* திரு-
வோணத்தான்* உலகு ஆளும் என்பார்களே
உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்*
நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும்
அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே
கொண்ட தாள் உறி* கோலக் கொடுமழுத்*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்* புகுந்து நெய்யாடினார்
கையும் காலும் நிமிர்த்துக்* கடார நீர்*
பைய ஆட்டிப்* பசுஞ் சிறு மஞ்சளால்*
ஐய நா வழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட* மடநல்லார்*
ஆயர் புத்திரன் அல்லன்* அருந்தெய்வம்*
பாய சீர் உடைப்* பண்பு உடைப் பாலகன்*
மாயன் என்று* மகிழ்ந்தனர் மாதரே
பத்து நாளும் கடந்த* இரண்டாம் நாள்*
எத் திசையும்* சயமரம் கோடித்து*
மத்த மா மலை* தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே
கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்.
செந்நெல்லார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்*
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே (2)
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி* வேல்கணார் கலவியே கருதி*
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்* என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட* பாழியான் ஆழியான் அருளே*
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்* சிக்கெனத் திருவருள் பெற்றேன்*
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்* உடம்பு எலாம் கண்ண நீர் சோர*
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்* நாராயணா என்னும் நாமம்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்* சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்* செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்* மங்கையார் வாள் கலிகன்றி*
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை* இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்* துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்*
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு* நாராயணா என்னும் நாமம் (2)
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)