பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
சீதக் கடலுள்* அமுது அன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்து உண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே*
பவள வாயீர் வந்து காணீரே (2)
முத்தும் மணியும்* வயிரமும் நன்பொன்னும்*
தத்திப் பதித்துத்* தலைப்பெய்தாற் போல்* எங்கும்
பத்து விரலும்* மணிவண்ணன் பாதங்கள்*
ஒத்திட்டு இருந்தவா காணீரே*
ஒண்ணுதலீர்! வந்து காணீரே
பணைத்தோள் இள ஆய்ச்சி* பால் பாய்ந்த கொங்கை*
அணைத்து ஆர உண்டு* கிடந்த இப் பிள்ளை*
இணைக்காலில்* வெள்ளித் தளை நின்று இலங்கும்*
கணைக்கால் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
உழந்தாள் நறுநெய்* ஒரோர் தடா உண்ண*
இழந்தாள் எரிவினால்* ஈர்த்து எழில் மத்தின்*
பழந்தாம்பால் ஓச்ச* பயத்தால் தவழ்ந்தான்**
முழந்தாள் இருந்தவா காணீரே*
முகிழ்முலையீர் வந்து காணீரே
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான் போலே* கிடந்த இப்பிள்ளை*
மறம் கொள் இரணியன்* மார்வை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
மத்தக் களிற்று* வசுதேவர் தம்முடைச்*
சித்தம் பிரியாத* தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தாம் நாள்* தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவா காணீரே*
முகிழ்நகையீர் வந்து காணீரே
இருங்கை மதகளிறு* ஈர்க்கின்றவனைப்*
பருங்கிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெருங்கு பவளமும்* நேர்நாணும் முத்தும்*
மருங்கும் இருந்தவா காணீரே*
வாணுதலீர் வந்து காணீரே
வந்த மதலைக்* குழாத்தை வலிசெய்து*
தந்தக் களிறு போல்* தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு* நன்றும் அழகிய*
உந்தி இருந்தவா காணீரே*
ஒளியிழையீர்! வந்து காணீரே
அதிருங் கடல்நிற வண்ணனை* ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி* வஞ்சித்து வைத்துப்*
பதறப் படாமே* பழந் தாம்பால் ஆர்த்த*
உதரம் இருந்தவா காணீரே*
ஒளிவளையீர் வந்து காணீரே
பெருமா உரலிற்* பிணிப்புண்டு இருந்து* அங்கு
இரு மா மருதம்* இறுத்த இப் பிள்ளை*
குருமா மணிப்பூண்* குலாவித் திகழும்*
திருமார்வு இருந்தவா காணீரே*
சேயிழையீர் வந்து காணீரே
நாள்கள் ஓர் நாலைந்து* திங்கள் அளவிலே*
தாளை நிமிர்த்துச்* சகடத்தைச் சாடிப்போய்*
வாள் கொள் வளைஎயிற்று* ஆருயிர் வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே*
சுரிகுழலீர் வந்து காணீரே
மைத்தடங்கண்ணி* யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீல நிறத்துச்* சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும்* சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்து காணீரே*
கனங்குழையீர் வந்து காணீரே
வண்டு அமர் பூங்குழல்* ஆய்ச்சி மகனாகக்*
கொண்டு வளர்க்கின்ற* கோவலக் குட்டற்கு*
அண்டமும் நாடும்* அடங்க விழுங்கிய*
கண்டம் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
எம் தொண்டை வாய்ச் சிங்கம்* வா என்று எடுத்துக்கொண்டு*
அந் தொண்டை வாய்* அமுது ஆதரித்து* ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால்* தருக்கிப் பருகும்* இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
நோக்கி யசோதை* நுணுக்கிய மஞ்சளால்*
நாக்கு வழித்து* நீராட்டும் இந் நம்பிக்கு*
வாக்கும் நயனமும்* வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவா காணீரே*
மொய்குழலீர் வந்து காணீரே
விண்கொள் அமரர்கள்* வேதனை தீர* முன்
மண்கொள் வசுதேவர்* தம் மகனாய் வந்து*
திண்கொள் அசுரரைத்* தேய வளர்கின்றான்*
கண்கள் இருந்தவா காணீரே*
கனவளையீர் வந்து காணீரே
பருவம் நிரம்பாமே* பாரெல்லாம் உய்யத்*
திருவின் வடிவு ஒக்கும்* தேவகி பெற்ற*
உருவு கரிய* ஒளி மணிவண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே*
பூண்முலையீர்! வந்து காணீரே
மண்ணும் மலையும்* கடலும் உலகு ஏழும்*
உண்ணுந் திறத்து* மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*
வண்ணம் எழில்கொள்* மகரக்குழை இவை*
திண்ணம் இருந்தவா காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
முற்றிலும் தூதையும்* முன்கைமேல் பூவையும்*
சிற்றில் இழைத்துத்* திரிதருவோர்களைப்*
பற்றிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெற்றி இருந்தவா காணீரே*
நேரிழையீர்! வந்து காணீரே
அழகிய பைம்பொன்னின்* கோல் அங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை* கலந்து எங்கும் ஆர்ப்ப*
மழ கன்றினங்கள்* மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவா காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
சுருப்பார் குழலி* யசோதை முன் சொன்ன*
திருப் பாதகேசத்தைத்* தென்புதுவைப் பட்டன்*
விருப்பால் உரைத்த* இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய்* வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
முதுகு பற்றிக் கைத்தலத்தால்* முன் ஒரு கோல் ஊன்றி*
விதிர் விதிர்த்து கண் சுழன்று* மேல் கிளைகொண்டு இருமி*
இது என் அப்பர் மூத்த ஆறு என்று* இளையவர் ஏசாமுன்*
மது உண் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து* ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி*
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று* நடுங்காமுன்*
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்* ஆயிரம் நாமம் சொலி*
வெறி கொள் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
பீளை சோரக் கண் இடுங்கி* பித்து எழ மூத்து இருமி*
தாள்கள் நோவத் தம்மில் முட்டி* தள்ளி நடவாமுன்*
காளை ஆகி கன்று மேய்த்து* குன்று எடுத்து அன்று நின்றான*
வாளை பாயும் தண் தடம் சூழ்* வதரி வணங்குதுமே.
பண்டு காமர் ஆன ஆறும்* பாவையர் வாய் அமுதம்*
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி*
தண்டு காலா ஊன்றி ஊன்றி* தள்ளி நடவாமுன்*
வண்டு பாடும் தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி* இருமி இளைத்து*
உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்* பேசி அயராமுன்*
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி* ஆழ் கடலைக் கடைந்த*
மைத்த சோதி எம்பெருமான்* வதரி வணங்குதுமே.
பப்ப அப்பர் மூத்த ஆறு* பாழ்ப்பது சீத் திரளை*
ஒப்ப ஐக்கள் போத உந்த* உன் தமர் காண்மின் என்று*
செப்பு நேர் மென் கொங்கை நல்லார்* தாம் சிரியாத முன்னம்*
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்* வதரி வணங்குதுமே.
ஈசி போமின் ஈங்கு இரேல்மின்* இருமி இளைத்தீர்*
உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்* குவளை அம் கண்ணியர்பால்*
நாசம் ஆன பாசம் விட்டு* நல் நெறி நோக்கல் உறில்*
வாசம் மல்கு தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
புலன்கள் நைய மெய்யில் மூத்து* போந்து இருந்து உள்ளம் எள்கி*
கலங்க ஐக்கள் போத உந்தி* கண்ட பிதற்றாமுன்*
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு* ஆயிரம் நாமம் சொலி*
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்* வதரி வணங்குதுமே
வண்டு தண் தேன் உண்டு வாழும்* வதரி நெடு மாலைக்*
கண்டல் வேலி மங்கை வேந்தன்* கலியன் ஒலி மாலை*
கொண்டு தொண்டர் பாடி ஆடக்* கூடிடில் நீள் விசும்பில்*
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு* ஓர் ஆட்சி அறியோமே.
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
எளிவரும் இயல்வினன்* நிலை வரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரும் முழு நலம்* முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.
அமைவு உடை அறநெறி* முழுவதும் உயர்வு அற உயர்ந்து*
அமைவு உடை முதல் கெடல்* ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
அமைவு உடை அமரரும்* யாவையும் யாவரும் தான் ஆம்*
அமைவு உடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு அரிய எம் பெருமான்*
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு எளிய எம் பெருமான்*
பேரும் ஓர் ஆயிரம்* பிறபல உடைய எம் பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளது இல்லை இலது இல்லை பிணக்கே.
பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறி உள்ளி உரைத்த*
கணக்கு அறு நலத்தனன்* அந்தம் இல் ஆதி அம் பகவன்*
வணக்கு உடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின், பசை அற!* அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று* உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை*
உணர்ந்து உணர்ந்து உணரிலும்* இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* அரி அயன் அரன் என்னும் இவரை*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.
ஒன்று எனப் பல என* அறிவு அரும்வடிவினுள் நின்ற*
நன்று எழில் நாரணன்* நான்முகன் அரன் என்னும் இவரை*
ஒன்ற நும் மனத்து வைத்து* உள்ளி நும் இரு பசை அறுத்து*
நன்று என நலம் செய்வது* அவனிடை நம்முடை நாளே.
நாளும் நின்று அடு நம பழமை* அம் கொடுவினை உடனே
மாளும்* ஓர் குறைவு இல்லை;* மனன் அகம் மலம் அறக் கழுவி*
நாளும் நம் திரு உடை அடிகள் தம்* நலம் கழல் வணங்கி*
மாளும் ஓர் இடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த* நல் உலகமும் தானும்
புலப்பட* பின்னும் தன் உலகத்தில்* அகத்தனன் தானே
சொலப் புகில்* இவை பின்னும் வயிற்று உள;* இவை அவன் துயக்கே.
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
மயக்கு உடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
புயல் கரு நிறத்தனன்;* பெரு நிலங் கடந்த நல் அடிப் போது*
அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.
அமரர்கள் தொழுது எழ* அலை கடல் கடைந்தவன் தன்னை*
அமர் பொழில் வளங் குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில் சென்று* அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)