பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
நாவகாரியம்சொல்இலாதவர்* நாள்தொறும்விருந்துஓம்புவார்*
தேவகாரியம்செய்து* வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
மூவர்காரியமும்திருத்தும்* முதல்வனைச்சிந்தியாத* அப்-
பாவகாரிகளைப்படைத்தவன்* எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)
குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்* குருக்களுக்குஅனுகூலராய்*
செற்றம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*
துற்றிஏழ்உலகுஉண்ட* தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்*
பெற்றதாயர்வயிற்றினைப்* பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி* நிழல்எழும்-
திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த்* திருமாலவன்திருநாமங்கள்*
எண்ணக்கண்டவிரல்களால்* இறைப்போதும்எண்ணகிலாதுபோய்*
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்* கவளம்உந்துகின்றார்களே.
உரகமெல்அணையான்கையில்* உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*
நிரைகணம்பரந்துஏறும்* செங்கமலவயற் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாம்கொலோ!
ஆமையின்முதுகத் திடைக்குதிகொண்டு* தூமலர்சாடிப்போய்த்*
தீமைசெய்து இளவாளைகள்* விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*
நேமிசேர்தடங்கையினானை* நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை*
பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.
பூதம்ஐந்தொடு வேள்விஐந்து* புலன்கள்ஐந்துபொறிகளால்*
ஏதம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
நாதனை நரசிங்கனை* நவின்றுஏத்துவார்கள்உழக்கிய*
பாததூளிபடுதலால்* இவ்உலகம்பாக்கியம்செய்ததே.
குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று* கூடிஆடிவிழாச்செய்து*
திருந்துநான்மறையோர்* இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*
கருந்தடமுகில்வண்ணனைக்* கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*
இருந்தஊரில்இருக்கும்மானிடர்* எத்தவங்கள்செய்தார்கொலோ!
நளிர்ந்தசீலன்நயாசலன்* அபிமானதுங்கனை* நாள்தொறும்-
தெளிந்தசெல்வனைச்* சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*
குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்* குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்*
விளைந்ததானியமும் இராக்கதர்* மீதுகொள்ளகிலார்களே.
கொம்பின்ஆர்பொழில்வாய்க்* குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
செம்பொன்ஆர்மதில்சூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
நம்பனைநரசிங்கனை* நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தனசின்னங்கள்* இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே .
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*
கேசவா! புருடோத்தமா!* கிளர்சோதியாய்! குறளா! என்று*
பேசுவார்அடியார்கள்* எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
சீதநீர்புடைசூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
ஆதியான்அடியாரையும்* அடிமையின்றித்திரிவாரையும்*
கோதில்பட்டர்பிரான்* குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*
ஏதம்இன்றிஉரைப்பவர்* இருடீகேசனுக்குஆளரே (2)
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்* மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி* கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து* இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட* பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்* இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு* பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி* அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ* மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே*
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி* வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட* கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்* எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை* கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப* மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்*
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி* ஆடவரை மட மொழியார் முகத்து* இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்* அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன* இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்* மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்* பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு* மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த* குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு* திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நிலமடந்தைதனை இடந்து புல்கிக்* கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்*
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்* ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி* எண் திசையும் மண்டலமும் மண்டி*
அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்* முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து* ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்* கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி* சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
பெய்வளைக் கைகளைக் கூப்பி* 'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,*
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,* 'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,*
நையும் கண்ணீர் மல்க நின்று* 'நாரணன்' என்னும் அன்னே,* என்
தெய்வ உருவில் சிறுமான்* செய்கின்றது ஒன்று அறியேனே.
அறியும் செந்தீயைத் தழுவி* 'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தழுவி* 'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
வெறிகொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறிவளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
ஒன்றிய திங்களைக் காட்டி* 'ஒளிமணி வண்ணனே' என்னும்*
நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்* நாரணன் வந்தான் என்று ஆலும்,*
என்று இன மையல்கள் செய்தான்* என்னுடைக் கோமளத்தையே?
கோமள வான் கன்றைப் புல்கி* கோவிந்தன் மேய்த்தன' என்னும்,*
போம் இள நாகத்தின் பின்போய்* அவன் கிடக்கை ஈது என்னும்,*
ஆம் அளவு ஒன்றும் அறியேன்* அருவினையாட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால் செய்து செய்கின்ற கூத்தே.
கூத்தர் குடம் எடுத்து ஆடில்* 'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,*
வாய்த்த குழல் ஓசை கேட்கில்* 'மாயவன்' என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்* அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு* என் பெண்கொடி ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
திரு உடை மன்னரைக் காணில்,* திருமாலைக் கண்டேனே என்னும்,*
உரு உடை வண்ணங்கள் காணில்* 'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்* 'கடல்வண்ணன் கோயிலே' என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகவரைக் காணில்* 'வியல் இடம் உண்டானே!' என்னும்,*
கரும் பெரு மேகங்கள் காணில்* 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
பெரும் புல ஆ நிரை காணில்* 'பிரான் உளன்' என்று பின் செல்லும்,*
அரும் பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றானே!
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி* அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப* வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,*
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,* பெருமானே! வா! என்று கூவும்,*
மயல் பெருங் காதல் என் பேதைக்கு* என்செய்கேன் வல்வினையேனே!
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)