பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி* அன்னை அத்தன் என் புத்திரர்பூமி*
வாசவார் குழலாள் என்றுமயங்கி* மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழல்ஆகியகேடிலீ! என்றும்*
பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2)
சீயினால் செறிந்துஏறிய புண்மேல்* செற்றல்ஏறிக் குழம்புஇருந்து* எங்கும்-
ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி* எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*
வாயினால் நமோநாரணா என்று* மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்*
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்* சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து*
ஆர்வினவிலும் வாய் திறவாதே* அந்தகாலம் அடைவதன்முன்னம்*
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து* மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி*
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து* மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்*
காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை* மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி*
வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்* விண்ணகத்தினில் மேவலும்மாமே.
மடிவழி வந்து நீர்புலன்சோர* வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே*
கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
தொடைவழி உம்மை நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்*
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்* இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.
அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை*
சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்* பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*
வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனை மார்பில்-
தங்க விட்டு வைத்து* ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு* என்றும் சாதிக்கலாமே.
தென்னவன் தமர் செப்பம்இலாதார்* சேவதக்குவார் போலப்புகுந்து*
பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்* பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*
இன்னவன் இனையான் என்றுசொல்லி* எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி*
மன்னவன் மதுசூதனன் என்பார்* வானகத்துமன்றாடிகள்தாமே.
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*
பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு* நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*
கோடி மூடிஎடுப்பதன் முன்னம்* கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு*
கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.
வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப* வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற*
தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்* தாரமும் ஒருபக்கம் அலற்ற*
தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
மாய்* ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
செத்துப்போவதோர் போதுநினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*
பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* இலங்கை
வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை*
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
மாத்தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* வன் தாள்
சேத்தொழில் சிதைத்துப்* பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத்தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* தன்மேல்
வரும்அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெருமகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்றவெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங்கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
'மூவரில் எங்கள் மூர்த்தி* இவன், என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன்உலகு ஆண்டு* பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே.
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்* உறை மார்பினன்,*
செய்ய கோலத் தடங் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேன்,*
வெய்ய நோய்கள் முழுதும்* வியன் ஞாலத்து வீயவே.
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,*
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மேவி நின்று தொழுவார்* வினை போக மேவும் பிரான்,*
தூவி அம் புள் உடையான்* அடல் ஆழி அம்மான் தன்னை,
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி* நண்ணப் பெற்றேன்,*
ஆவி என் ஆவியை* யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,* அமரர்தம்-
ஏற்றை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,*
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி* நாளும் மகிழ்வு எய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினை நோய்கள் கரியவே.
கரிய மேனிமிசை* வெளிய நீறு சிறிதே இடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேற்கு,*
அரியது உண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனி என்றுமே?
என்றும் ஒன்று ஆகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு -
இன்றி நின்றானை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதி எய்தினம்* என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தண் தாமரை-
சுமக்கும்* பாதப் பெருமானை* சொல்மாலைகள் சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண் திசையும் தவிராது* நின்றான் தன்னை,*
கூனல் சங்கத் தடக்கையவனை* குடம் ஆடியை
வானக் கோனை,* கவி சொல்ல வல்லேற்கு* இனி மாறுஉண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்* கிடந்தும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்* மணம் கூடியும்,*
கண்ட ஆற்றால் தனதே* உலகு என நின்றான் தன்னை,*
வண் தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்ப மாரியே.
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.