பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
அலம்பாவெருட்டாக்* கொன்றுதிரியும் அரக்கரை*
குலம்பாழ்படுத்துக்* குலவிளக்காய் நின்றகோன்மலை*
சிலம்பார்க்கவந்து* தெய்வமகளிர்களாடும்சீர்*
சிலம்பாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2)
வல்லாளன்தோளும்* வாளரக்கன்முடியும்* தங்கை-
பொல்லாதமூக்கும்* போக்குவித்தான்பொருந்தும்மலை*
எல்லாஇடத்திலும்* எங்கும்பரந்து பல்லாண்டுஒலி-
செல்லாநிற்கும் சீர்த்* தென்திருமாலிருஞ்சோலையே.
தக்கார்மிக்கார்களைச்* சஞ்சலம்செய்யும்சலவரை*
தெக்காநெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
எக்காலமும்சென்று* சேவித்திருக்கும் அடியரை*
அக்கான்நெறியைமாற்றும்* தண் மாலிருஞ்சோலையே.
ஆனாயர்கூடி* அமைத்தவிழவை* அமரர்தம்-
கோனார்க்கொழியக்* கோவர்த்தனத்துச்செய்தான்மலை*
வான்நாட்டினின்று* மாமலர்க்கற்பகத்தொத்துஇழி*
தேனாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே.
ஒருவாரணம் பணிகொண்டவன்* பொய்கையில் கஞ்சன்தன்-
ஒருவாரணம் உயிர்உண்டவன்* சென்றுறையும்மலை*
கருவாரணம்* தன்பிடிதுறந்துஓடக்* கடல்வண்ணன்-
திருவாணைகூறத்திரியும்* தண் மாலிருஞ்சோலையே.
ஏவிற்றுச்செய்வான்* ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்*
சாவத்தகர்த்த* சாந்தணிதோள்சதுரன்மலை*
ஆவத்தனமென்று* அமரர்களும்நன்முனிவரும்*
சேவித்திருக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே.
மன்னர்மறுக* மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*
முன்னங்குநின்று* மோழைஎழுவித்தவன் மலை*
கொன்னவில்கூர்வேற்கோன்* நெடுமாறன்தென்கூடற்கோன்*
தென்னன்கொண்டாடும்* தென்திருமாலிருஞ்சோலையே
குறுகாதமன்னரைக்* கூடுகலக்கி* வெங்கானிடைச்-
சிறுகால்நெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
அறுகால்வரிவண்டுகள்* ஆயிரநாமம்சொல்லிச்*
சிறுகாலைப்பாடும்* தென்திருமாலிருஞ்சோலையே.
சிந்தப்புடைத்துச்* செங்குருதிகொண்டு* பூதங்கள்-
அந்திப்பலிகொடுத்து* ஆவத்தனம்செய் அப்பன்மலை*
இந்திரகோபங்கள்* எம்பெருமான் கனிவாய்ஒப்பான்*
சிந்தும்புறவிற்* தென்திருமாலிருஞ்சோலையே
எட்டுத் திசையும்* எண்- இறந்த பெருந் தேவிமார்*
விட்டு விளங்க* வீற்றிருந்த விமலன் மலை*
பட்டிப்பிடிகள்* பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-
தெட்டித்திளைக்கும்* தென்திருமாலிருஞ் சோலையே.
மருதப்பொழிலணி* மாலிருஞ்சோலைமலைதன்னைக்*
கருதி உறைகின்ற* கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை*
விரதம்கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்*
கருதியுரைப்பவர்* கண்ணன்கழலிணை காண்பர்களே (2)
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக்காளியன் பண அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த* உம்பர்கோன் உறைகோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட*
வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்குஅவை காட்ட* வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு* எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்* வன்சாபம் மற்றுஅதுநீங்க*
மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த* எம்முகில் வண்ணன் உறைகோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண்பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனைத் தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
வல்லி சேர் நுண் இடை* ஆய்ச்சியர் தம்மொடும்,*
கொல்லைமை செய்து* குரவை பிணைந்தவர்,*
நல் அடிமேல் அணி* நாறு துழாய் என்றே
சொல்லுமால்,* சூழ் வினையாட்டியேன் பாவையே.
பா இயல் வேத* நல் மாலை பல கொண்டு,*
தேவர்கள் மா முனிவர்* இறைஞ்ச நின்ற*
சேவடிமேல் அணி* செம் பொன் துழாய் என்றே
கூவுமால்,* கோள் வினையாட்டியேன் கோதையே.
கோது இல வண்புகழ்* கொண்டு சமயிகள்,*
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன்,*
பாதங்கள் மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* ஊழ்வினையேன்* தடந் தோளியே.
தோளி சேர் பின்னை பொருட்டு* எருது ஏழ் தழீஇக்
கோளியார்* கோவலனார்* குடக் கூத்தனார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
நாளும்நாள்,* நைகின்றதால்* என்தன் மாதரே
மாதர் மா மண்மடந்தைபொருட்டு* ஏனம் ஆய்,*
ஆதி அம் காலத்து* அகல் இடம் கீண்டவர்,*
பாதங்கள்மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* எய்தினள் என் தன் மடந்தையே.
மடந்தையை* வண் கமலத் திருமாதினை,*
தடம் கொள் தார் மார்பினில்* வைத்தவர் தாளின்மேல்,*
வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே* இவள்
மடங்குமால்* வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே.
கொம்பு போல் சீதைபொருட்டு* இலங்கை நகர்*
அம்பு எரி உய்த்தவர்* தாள் இணைமேல் அணி,*
வம்பு அவிழ் தண் அம் துழாய்* மலர்க்கே இவள்-
நம்புமால்,* நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும்* ஓர் பெண் பெற்று நல்கினீர்,*
எங்ஙனே சொல்லுகேன்* யான் பெற்ற ஏழையை,*
சங்கு என்னும் சக்கரம் என்னும்* துழாய் என்னும்,*
இங்ஙனே சொல்லும்* இராப் பகல் என்செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை* என் கோமளம்,*
என் சொல்லும்* என் வசமும் அல்லள் நங்கைமீர்,*
மின் செய் பூண் மார்பினன்* கண்ணன் கழல் துழாய்,*
பொன் செய்பூண்* மென்முலைக்கு என்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)