பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கலையும் கரியும் பரிமாவும்* திரியும் கானம் கடந்துபோய்*
சிலையும் கணையும் துணையாகச்* சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி* மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்து உகந்தான்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
கடம் சூழ் கரியும் பரிமாவும்* ஒலி மாத் தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை* பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்* இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
உலவு திரையும் குல வரையும்* ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்*
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளையத்*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற* அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்*
விளங்கு சுடர் ஆழி* விண்ணோர் பெருமான் நண்ணார்முன்*
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்* கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாய் ஆய் வந்த பேய் உயிரும்* தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்*
தூய வரி உருவின் குறளாய்ச் சென்று* மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தா என்று* உலகு ஏழும் தாயான்*
காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்* அரி ஆய் பரிய இரணியனை*
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த* ஒருவன் தானே இரு சுடர் ஆய்*
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்* மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்*
தான் ஆய் தானும் ஆனான் தன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
வெந்தார் என்பும் சுடு நீறும்* மெய்யில் பூசி கையகத்து*
ஓர் சந்து ஆர் தலைகொண்டு* உலகு ஏழும் திரியும்* பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன* இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
சந்து ஆர் பொழில் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தொண்டு ஆம் இனமும் இமையோரும்* துணை நூல் மார்வின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று* அணையும் கோயில் அருகு எல்லாம்*
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத்*
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே*
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* உலகு உய்ய நின்றானை*
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில்*
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்* தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை* அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
குடம்ஆடு கூத்தன் தன்னை* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ* பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி* கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை* பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனம்ஆகி* இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்*
பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை* பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை*
ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை* பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யம்என்னும்* தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி*
எண்ணானை எண்இறந்த புகழினானை* இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
கண்ணாரக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை* படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
தென்இலங்கை அரக்கர்வேந்தை* விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு*
பண்டுஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
தொண்டனேன் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே!
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே!
நீடு பல்மலர் மாலைஇட்டு* நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா!*
பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து* பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே!
கந்த மாமலர் எட்டும்இட்டு* நின்காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே!
உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த*
அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின்மிசை*
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே!
சங்கு தங்கு தடங் கடல் கடல்* மல்லையுள் கிடந்தாய்*
அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்*
இளந்தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே!
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு*
ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*
நீதி ஆகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!* அணி ஆலி அம்மானே!
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* இலங்கை
வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை*
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
மாத்தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* வன் தாள்
சேத்தொழில் சிதைத்துப்* பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத்தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* தன்மேல்
வரும்அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெருமகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்றவெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங்கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
'மூவரில் எங்கள் மூர்த்தி* இவன், என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன்உலகு ஆண்டு* பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே.
வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்* வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட-
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்*
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்* மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்* மராமரம் ஏழ்எய்த வென்றிச்
சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
மான் ஆய மென் நோக்கி* வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்* பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர்! மதிக்கிலேனே!
பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்* நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம்' என்னும்* பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்* மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற-
தூதாளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்* ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த-
தேராளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* விண்ணோர்தங்கள
அறவாளன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
பந்தோடு கழல் மருவாள்* பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்* வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* இமையோர்
துளங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே.
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே.
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்*
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும்நறையூரே.
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள்மலர்மேல்* வண்டு இசை பாடும் நறையூரே.
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே.
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்*
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்தி கமலத்தின்*
நகு வாய் மலர்மேல்* அன்னம் உறங்கும் நறையூரே*
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி* புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே.
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம்*
விள்ள சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்*
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே.
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன்தன்*
தேரை ஊரும்* தேவதேவன் சேறும் ஊர்*
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே.
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை*
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே.
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ நள் இருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள பாரதத்து-
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவதேவன் ஊர்போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐஇரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே*.
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
பகலும் இரவும் தானே ஆய்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர்போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
ஏடு இலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
மாலைப் புகுந்து மலர்அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து* என்-
நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*
வேலைக் கடல்போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே*
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-
நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்* ஆடகத்தின்-
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்த* போன புனிதர் ஊர்போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்ல பாவம் நில்லாவே*. (2)
தந்தை காலில் விலங்குஅற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்று* திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்* அவைசுட அதனோடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2)
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்வில்,*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்புஇயங்கும்,*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே!
ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்* வளைகளும் இறைநில்லா,*
பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை* இணைமுலை வேகின்றதால்,*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!
கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்* தழல் முகந்து இளமுலைமேல்,*
இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை* எனக்குஎனப் பெறலாமே!
ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-
ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகல்எல்லை கழிகின்றதால்,*
தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை* சுடர்படு முதுநீரில்,*
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்* அந்தி வந்து அடைகின்றதே!
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்குஅழல் எரிஅம்பின்,*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*
எரியும் வெம்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும்ஆறு அறியேனே!
கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து* இலங்கையர் கோனது வரைஆகம்,-
மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*
இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி அடும்,* ஆயன்-
விலங்கல் வேயினது ஓசையும்ஆய்* இனி விளைவது ஒன்றுஅறியேனே!
முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவுஎய்த,*
மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*
ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம்சிறைகோலித்,*
தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்* கொடுவினை அறியேனே!
கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*
மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி* என் வளைநெக இருந்தேனை,*
சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*
அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே!
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து* கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள* ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
பெருமணி வானவர் உச்சிவைத்த* பேர்அருளாளன் பெருமைபேசி,*
குருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
திண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*
பண்டைய அல்ல இவை நமக்கு* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
எல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*
நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*
கொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
செங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-
அங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*
கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கேவலம் அன்று கடலின் ஓசை* கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-
ஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*
ஏவலம் காட்டி இவன்ஒருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*
கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
சோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
செற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணெய் புக்குஉண்ண,*
ஆங்குஅவள் ஆர்த்துப்* புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2)
தாயர் மனங்கள் தடிப்ப* தயிர்நெய்உண்டு
ஏய்எம்பிராக்கள்* இருநிலத்து எங்கள்தம்*
ஆயர் அழக* அடிகள்* அரவிந்த-
வாயவனே கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
தாம்மோர் உருட்டி* தயிர்நெய் விழுங்கிட்டு*
தாமோ தவழ்வர்என்று* ஆய்ச்சியர் தாம்பினால்*
தாம்மோதரக்கையால்* ஆர்க்க தழும்புஇருந்த*
தாமோதரா! கொட்டாய் சப்பாணி!* தாமரைக் கண்ணனே! சப்பாணி
பெற்றார் தளைகழலப்* பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
உற்றார் ஒருவரும் இன்றி* உலகினில்,*
மற்றாரும் அஞ்சப்போய்* வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!* கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
சோத்து என நின்னைத்* தொழுவன் வரம் தர,*
பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,* பெரியன-
ஆய்ச்சியர்* அப்பம் தருவர்* அவர்க்காகச்-
சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!* தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி
கேவலம் அன்று* உன்வயிறு வயிற்றுக்கு*
நான் அவல் அப்பம் தருவன்* கருவிளைப்-
பூஅலர் நீள்முடி* நந்தன்தன் போர்ஏறே,*
கோவலனே! கொட்டாய் சப்பாணி!* குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.
புள்ளினை வாய்பிளந்து* பூங்குருந்தம் சாய்த்து,*
துள்ளி விளையாடி* தூங்குஉறி வெண்ணெயை,*
அள்ளிய கையால்* அடியேன் முலைநெருடும்*
பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!* பேய்முலை உண்டானே! சப்பாணி
யாயும் பிறரும்* அறியாத யாமத்து,*
மாய வலவைப்* பெண் வந்து முலைதர,*
பேய்என்று அவளைப்* பிடித்து உயிர் உண்ட,*
வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.
கள்ளக் குழவிஆய்* காலால் சகடத்தைத்*
தள்ளி உதைத்திட்டு* தாய்ஆய் வருவாளை,*
மெள்ளத் தொடர்ந்து* பிடித்து ஆர்உயிர்உண்ட,*
வள்ளலே! கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
கார்ஆர் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*
பேராளன் நெஞ்சில்* பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!* தடமார்வா கொட்டாய் சப்பாணி. (2)
மான்அமரும் மென்நோக்கி* வைதேவிஇன் துணையா,*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்த பொன்அடிக்கள்,*
வானவர்-தம் சென்னி* மலர்கண்டாய் சாழலே (2)
தந்தை தளைகழலத்* தோன்றிப்போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் காண்ஏடீ,*
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தைகாண் எந்தை* பெருமான் காண் சாழலே.
ஆழ்கடல்சூழ் வையகத்தார்* ஏசப்போய்,* ஆய்ப்பாடித்-
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்டான் காண்ஏடீ,*
தாழ்குழலார் வைத்த* தயிர்உண்ட பொன்வயிறு,* இவ்-
ஏழ்உலகும் உண்டும்* இடம்உடைத்தால் சாழலே.
அறியாதார்க்கு* ஆன்ஆயன் ஆகிப்போய்,* ஆய்ப்பாடி-
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்தான் காண்ஏடீ*
உறிஆர் நறுவெண்ணெய்* உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*
எறிநீர் உலகுஅனைத்தும்* எய்தாதால் சாழலே
வண்ணக் கருங்குழல்* ஆய்ச்சியால் மொத்துண்டு,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் காண்ஏடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் ஆகிலும்,*
எண்ணற்கு அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கன்றப் பறைகறங்க* கண்டவர்தம் கண்களிப்ப,*
மன்றில் மரக்கால்* கூத்துஆடினான் காண் ஏடீ,*
மன்றில் மரக்கால்* கூத்து ஆடினான் ஆகிலும்,*
என்றும் அரியன்* இமையோர்க்கும் சாழலே.
கோதைவேல் ஐவர்க்குஆய்* மண்அகலம் கூறுஇடுவான்,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் காண்ஏடீ,*
தூதன்ஆய் மன்னவனால்* சொல்லுண்டான் ஆகிலும்,*
ஓதநீர் வையகம்* முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே.
பார்மன்னர் மங்கப்* படைதொட்டு வெம்சமத்துத்,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*
தேர்மன்னற்குஆய்* அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,*
தார்மன்னர் தங்கள்* தலைமேலான் சாழலே.
கண்டார் இரங்க* கழியக் குறள்உருஆய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காண்ஏடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டுஏழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே
கள்ளத்தால் மாவலியை* மூவடி மண் கொண்டு அளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காண்ஏடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே. (2)