பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)


    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*

    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   


    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 

    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.


    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*

    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  


    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.


    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 

    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.


    முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 

    கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        


    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*

    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   


    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,

    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  


    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
    எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 

    மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
    செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 


    திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
    நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

    குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
    உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   


    துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
    குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

    வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
    இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
    போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

    மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
    என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.


    'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
    'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 

    தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
    ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
    காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 

    பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
    ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          


    தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
    வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*

    மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
    என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
    'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 

    களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
    இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
    புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 

    குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
    இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)


    பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
    அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 

    மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
    என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
    என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 

    மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        


    கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
    வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*

    வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
    அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    


    பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
    என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*

    அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
    வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       


    அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
    வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 

    பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
    வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     


    ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
    மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*

    மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
    போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 


    தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
    மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*

    வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
    தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

    வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
    இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    


    அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
    பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*

    மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
    புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
    சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*

    பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
    மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    


    காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
    பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*

    தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
    வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!


    தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*

    காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
    மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)


    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*

    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.


    கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
    நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
    எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.


    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 


    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*

    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.


    வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
    நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
    பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.


    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.


    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 


    வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
    நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*

    சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.


    பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
    நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*

    தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 


    நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
    செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*

    கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)


    பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*

    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
    தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*

    பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
    துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  


    மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*

    சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     


    எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*

    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    


    ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*

    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
    ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*

    வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 


    ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*

    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
    மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச

    சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*

    மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      


    ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
    தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*

    வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
    நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    


    முனி ஆய் வந்து மூவெழுகால்*  முடி சேர் மன்னர் உடல் துணிய* 
    தனி வாய் மழுவின் படை ஆண்ட*  தார் ஆர் தோளான் வார் புறவில்*

    பனி சேர் முல்லை பல் அரும்ப*  பானல் ஒருபால் கண் காட்ட* 
    நனி சேர் கமலம் முகங்காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.


    தெள் ஆர் கடல்வாய் விட வாயச்*  சின வாள் அரவில் துயில் அமர்ந்து* 
    துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்*  இரந்தான் மாவலி மண்*

    புள் ஆர் புறவில் பூங் காவி*  பொலன் கொள் மாதர் கண் காட்ட* 
    நள் ஆர் கமலம் முகம் காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.            


    ஒளியா வெண்ணெய் உண்டான் என்று*  உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்* 
    விளியா ஆர்க்க ஆப்புண்டு*  விம்மி அழுதான் மென் மலர்மேல்*

    களியா வண்டு கள் உண்ண*  காமர் தென்றல் அலர் தூற்ற* 
    நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்*  நறையூர் நின்ற நம்பியே. 


    வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
    கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*

    சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
    நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      


    வள்ளி கொழுநன் முதலாய*  மக்களோடு முக்கணான் 
    வெள்கி ஓட*  விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*

    பள்ளி கமலத்திடைப் பட்ட*  பகு வாய் அலவன் முகம் நோக்கி* 
    நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த*  நறையூர் நின்ற நம்பியே.


    மிடையா வந்த வேல் மன்னர் வீய*  விசயன் தேர் கடவி* 
    குடையா வரை ஒன்று எடுத்து*  ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்

    படையான்*  வேதம் நான்கு ஐந்து வேள்வி*  அங்கம் ஆறு இசை ஏழ்* 
    நடையா வல்ல அந்தணர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.  


    பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி*  கூந்தல் முடிக்க பாரதத்து* 
    கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க*  சங்கம் வாய் வைத்தான்*

    செந்தாமரைமேல் அயனோடு*  சிவனும் அனைய பெருமையோர்* 
    நந்தா வண் கை மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.      


    ஆறும் பிறையும் அரவமும்*  அடம்பும் சடைமேல் அணிந்து*  உடலம் 
    நீறும் பூசி ஏறு ஊரும்*  இறையோன் சென்று குறை இரப்ப*

    மாறு ஒன்று இல்லா வாச நீர்*  வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்* 
    நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  நறையூர் நின்ற நம்பியே 


    நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*

    பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
    மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       


    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)


    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 


    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 

    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   


    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  


    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 

    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 


    நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
    கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

    குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
    அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 

    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*


    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*

    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)


    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*

    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)


    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*

    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*

    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-

    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)


    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*

    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*

    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  


    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*

    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      


    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*

    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே


    புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
    நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*

    வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
    கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 


    மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
    வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*

    கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
    ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)


    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)


    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 


    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)


    மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
    ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*

    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
    தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)


    காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
    மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*

    மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
    பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!


    தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!*  உறி மேலைத் தடாநிறைந்த,*
    வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை*   வாரி விழுங்கி யிட்டு,*

    கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்*  கைஎல்லாம் நெய்,*  வயிறு-
    பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்*  பேதையேன் என்செய்கேனோ!


    மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
    தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*

    பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
    இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!


    தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்*  தோழிமார் ஆரும்இல்லை,* 
    சந்த மலர்க்குழலாள்*  தனியே விளையாடும்இடம் குறுகி,*

    பந்து பறித்து துகில்பற்றிக் கீறி*  படிறன் படிறு செய்யும்,* 
    நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
    அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*

    கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
    என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
    பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*

    போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
    மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 


    தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*

    சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
    பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 


    ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
    ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*

    சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!


    அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
    பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*

    கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
    நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
    பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*

    அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
    மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 


    அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
    உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*

    பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
    நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
    எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*

    அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
    வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
    மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*

    கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
    இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   


    நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
    பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*

    பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
    காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)


    நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
    தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*

    தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
    கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.


    தூயானை*  தூய மறையானை,*  தென்ஆலி 
    மேயானை*  மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட 

    வாயானை*  மாலை வணங்கி*  அவன்பெருமை 
    பேசாதார்*  பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.


    கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
    ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*

    தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
    பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.


    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*

    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.


    கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
    முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*

    புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
    உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.


    கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
    அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-

    சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
    நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.


    வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
    உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட

    சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
    அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.


    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*

    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)


    மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
    கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*

    கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
    ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)