2 எண்ணிக்கை பாடல் பாட

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)

ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 
வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      

குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       

மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)

கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)

முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.

வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 
கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 

ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)

ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      

அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)

செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 

பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)

செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   

தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 

கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 

கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 
விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   

காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 
வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)

அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.

நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)

பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       

படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  

நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)

ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 
கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  

கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 
வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       

திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   

'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 
மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        

திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 
எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     

சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        

மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)      

இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   

மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 
மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)

ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  

ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 

செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 
அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    

தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 
தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)

மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 
கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)

கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    

என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    

தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)

நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)

சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)

சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)

திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)

சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)    

போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 

கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   

பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    

அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.

தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)

சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*

தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.

தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 
மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    

மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 
பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    

கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.

நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)

கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)

நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 
எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்

ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்*  பார் இடந்து எயிற்றினில் கொண்டு* 
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற*  திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்*  ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)      

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    

தாம்*  தம் பெருமை அறியார்*  
தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்*  கூடலூரே.

காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
மேவித் திகழும்*  கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
பாவைப் பாட*  பாவம் போமே.

வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.

வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          

மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 

உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          

அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 
நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.

வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!

சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.

கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 
எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.

பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  

சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        

ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.

கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*
செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      

வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       

தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)

வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     

பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 
பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
வாமனன் அடி*  இணை மருவுவரே* 

பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி
அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    

தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      

துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 

தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 
கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.

கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         

கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    

தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 
காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    

நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       

மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     

பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)

மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  

பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 

குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         

திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      

கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

கல் ஆர் மதிள் சூழ்*  கச்சி நகருள் நச்சி*  பாடகத்துள் 
எல்லா உலகும் வணங்க*  இருந்த அம்மான்*  இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்*  முனிந்த எந்தை*  விபீடணற்கு 
நல்லானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று*  நறையூர் நெடுமாலை* 
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு*  நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்*  கலியன் ஒலி மாலை* 
மேவிச் சொல்ல வல்லார் பாவம்*  நில்லா வீயுமே.        

கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*

வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 
தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
 

புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    

நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)

சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)

தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)

கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*

பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.

தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.

நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)

சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     

பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   

திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.

திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)

அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)

பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)

கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)

சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)

கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)

சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*  காதலால் கலி கன்றி உரைசெய்த* 
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை*  வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்*  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!*  நின் தனக்கும் குறிப்புஆகில்-  கற்கலாம்*  கவியின் பொருள் தானே*   (2)

சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)

தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!
துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)

அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)

கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)

கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)

தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)

விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)

வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)

தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)

வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)

தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)

வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)

வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)

ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-
கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)

மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)

வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)

மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்
ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)

கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 
எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)

மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)

செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)

வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே
தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 

பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)

அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)

தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)

காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)

வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)

பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)

தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)

சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-
மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)

செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)

அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)

சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)

தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)

முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)

வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)

மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)

புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  

நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)

வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)

தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  

ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)

ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)

பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)

பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)

இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)

அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)

ஏத்துகின்றோம் நாத்தழும்ப*  இராமன் திருநாமம்* 
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!*  உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை*  உங்கள் வானரம் கொல்லாமே* 
கூத்தர் போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே   (2)

வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)

சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)

இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)

பூங்கோதை ஆய்ச்சி*  கடைவெண்ணெய் புக்குஉண்ண,* 
ஆங்குஅவள் ஆர்த்துப்*  புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து*  சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி  (2)

கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)

எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 

மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)

அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   

காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   

அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 

புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)

வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 

திருத்தாய் செம்போத்தே,!*  
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்*  மாதவனை வர*  
திருத்தாய் செம்போத்தே!  (2)

சொல்லாய் பைங்கிளியே,* 
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்*  வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே!  (2) 

இன்னார் என்றுஅறியேன்,* 
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன்.   (2)  

தொண்டீர் பாடுமினோ,* 
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,* 
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ  (2)

குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-
வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)

குன்றம் எடுத்து மழைதடுத்து*  இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்*  என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்*  கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்*  பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ!   (2)

வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2) 

மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)

பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)

நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)

கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)

மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)

தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)

நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)

தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)

மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)

மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         

வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)

அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)

நந்தா நரகத்து அழுந்தா வகை,*  நாளும்- 
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு*  இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!*  தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு*  அருளாய் உன்அருளே  (2)

குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)

அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)

அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)

அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2) 

இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.

சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.

உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே.