பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி* வேல்கணார் கலவியே கருதி*
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்* என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட* பாழியான் ஆழியான் அருளே*
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்* சிக்கெனத் திருவருள் பெற்றேன்*
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்* உடம்பு எலாம் கண்ண நீர் சோர*
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்* நாராயணா என்னும் நாமம்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்* சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்* செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்* மங்கையார் வாள் கலிகன்றி*
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை* இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்* துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்*
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு* நாராயணா என்னும் நாமம் (2)
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிதுஉவந்து
மா தவ மானவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*
மண்மிசைப் பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
வேங்கடத்து அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
வானிடைக் கொண்டு போய் இடவும்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்*
மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு*
வானவர் ஆவியாய் இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அம் கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை*
மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்*
வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்* சிலர் பேசக் கேட்டிருந்தே*
என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்று சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கட மலை கோயில் மேவிய*
ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.
கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்*
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னம் ஆய் நிகழ்ந்த* அமரர் பெருமானைக்*
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி* இன் தமிழால் உரைத்த*
இம் மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே* (2)
இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்* வளைமருப்பினில் அகத்துஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர* பிணி அவிழ் கமலத்துத்*
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே.
வையம் ஏழும் உண்டு ஆல் இலை* வைகிய மாயவன்*
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு* திருவயிந்திரபுரமே.
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்* மார்புஅகம் இரு பிளவாக்*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்*
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை* விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து*
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்*
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்* குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே.
கூன் உலாவிய மடந்தைதன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே.
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே.
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து* அடல் மழைக்கு-
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தித்*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்* விசயனுக்கு ஆய்*
மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால் கொள் கண் கொடி கைஎழ* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே (2)
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார்தொகையே.
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மாவரும்திண் படைமன்னை* வென்றிகொள்வார் மன்னுநாங்கை*
தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்* திருத்தேவனார்தொகையே.
வான்நாடும் மண்நாடும்* மற்றுஉள்ள பல்உயிரும்*
தான்ஆய எம்பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
ஆனாத பெருஞ்செல்வத்து* அருமறையோர் நாங்கைதன்னுள்*
தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே.
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்ரு* அருளூமிடம் எழில்நாங்கை*
சுந்தரநல் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரைமேல்*
திண் திறலார் பயில்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஓடாத ஆளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார்தொகையே.
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார்தொகையே.
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்து* மணம் கமழும் நாங்கைதன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகள* பழனக் கழனி-அதனுள் போய*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம்பூதங்குடி தானே.
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மாவாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
காஆர் தெங்கின் பழம் வீழ* கயல்கள் பாய குருகு இரியும்*
பூஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
மையார் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய்யார் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய்யார் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே.
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம்பூதங்குடி தானே.
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவமணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம்பூதங்குடி தானே.
கற்றா மறித்து காளியன்தன்* சென்னி நடுங்க நடம்பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம்பூதங்குடி தன்மேல*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல்கைக் கலிகன்றி*
சொல்தான் ஈர் ஐந்து இவை பாட* சோர நில்லா துயர் தாமே.
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று* அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து* அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* பெண் அமுது உண்ட எம் பெருமானே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட* தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ* நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி* முத
லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்* சீர் கெழு நான்மறை ஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்* இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
காதல் செய்து இளையவர் கலவி தரும்* வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!* போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்* காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே!
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ்* இவை பாட வல்லார்*
வாமனன் அடி* இணை மருவுவரே*
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே!*
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே!*
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி*
ஊரே உகந்தாயை* உகந்து அடியேனே*.
புள் வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல்மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*
வில் ஏர் நுதல்* நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே *
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக்
கதியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*
அத்தா! அரியே! என்று* உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே! மணி மாணிக்கமே!* முளைக்கின்ற
வித்தே* உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!*
தூயாய்! சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா! அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட
வாயா* உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டு ஆய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம்தமக்கு இல்லை துயரே* (2)
சிலைஇலங்கு பொன்ஆழி* திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,*
மலைஇலங்கு தோள் நான்கே* மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை* முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
செருவரை முன்ஆசுஅறுத்த* சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,*
பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்* ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
துன்னுமா மணிமுடிமேல்* துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,*
மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மாமணி ஆரம்* அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
தார்ஆய தண்துளப* வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்*
போர்ஆனைக் கொம்புஒசித்த* புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
கார்வானம் நின்றுஅதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
அடித்தலமும் தாமரையே* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,*
முடித்தலமும் பொன்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித்தடங்கண் மலரவளோ* வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
பேர்ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்* எண்தோளன் என்கின்றாளால்*
நீர்ஆர் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார்ஆர் வயல் மருவும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!
செவ்அரத்த உடைஆடை* அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்*
அவ்அரத்த அடிஇணையும்* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மைவளர்க்கும் மணிஉருவம்* மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
கொற்றப்புள் ஒன்றுஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன்ஆகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
வண்டுஅமரும் வனமாலை* மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்*
உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று* ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டுஇவரைக் கண்டுஅறிவது* எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி* விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*
போதுஅலர் புன்னை மல்லிகை* மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்* குளிர்தரு சூதம்மாதவியும்*
செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வான்உளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட* கணமுகில் முரசம் நின்றுஅதிர,*
தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்கு-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவ* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*
தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
கலைஉலா அல்குல் காரிகை திறத்து* கடல்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. (2)
ஒருநல் சுற்றம்* எனக்குஉயிர் ஒண்பொருள்*
வரும்நல் தொல்கதி* ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*
கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2)
பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. (2)
வேலை ஆல்இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர்அமுதத்தினை* பைந்துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே
துளக்கம்இல் சுடரை* அவுணன்உடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்புஇல் ஆர்அமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினைச்* சென்று வெள்ளறைக் காண்டுமே.
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு,* என்-
உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே.
வானை ஆர்அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள்வயல்* சேறையில் கண்டுபோய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர்தம்-
கோனை,* யாம் குடந்தைச்சென்று காண்டுமே.
கூந்தலார் மகிழ்* கோவலன்ஆய்* வெண்ணெய்-
மாந்துஅழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே
பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே
கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-
கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*
கொம்புஉலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*
நம்பனைச் சென்று காண்டும்* நாவாயுளே.
பெற்றமாளிகைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை* சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே (2)
குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2)
காரும் வார்பனிக்* கடலும் அன்னவன்,*
தாரும் மார்வமும்* கண்ட தண்டமோ,*
சோரும் மாமுகில்* துளியின் ஊடுவந்து,*
ஈர வாடைதான்* ஈரும் என்னையே!
சங்கும் மாமையும்* தளரும் மேனிமேல்,*
திங்கள் வெம்கதிர்* சீறும் என்செய்கேன்,*
பொங்கு வெண்திரைப்* புணரி வண்ணனார்,*
கொங்குஅலர்ந்ததார்* கூவும் என்னையே!
அங்குஓர் ஆய்க்குலத்துள்* வளர்ந்து சென்று,*
அங்குஓர்* தாய்உருஆகி வந்தவள்,*
கொங்கை நஞ்சுஉண்ட* கோயின்மை கொலோ,*
திங்கள் வெம்கதிர்* சீறுகின்றதே.
அங்குஓர் ஆள்அரிஆய்,* அவுணனை-
பங்கமா* இருகூறு செய்தவன்,*
மங்குல் மாமதி* வாங்கவே கொலோ*
பொங்கு மாகடல்* புலம்பு கின்றதே!
சென்றுவார்* சிலை வளைத்து இலங்கையை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,*
முன்றில் பெண்ணைமேல்* முளரிக் கூட்டகத்து,*
அன்றிலின் குரல்* அடரும் என்னையே!
பூவை வண்ணனார்* புள்ளின் மேல்வர,*
மேவி நின்றுநான்* கண்ட தண்டமோ,*
வீவுஇல்ஐங்கணை* வில்லி அம்புகோத்து,*
ஆவியே இலக்குஆக எய்வதே!
மால் இனம்துழாய்* வரும் என் நெஞ்சகம்,*
மாலின் அம்துழாய்* வந்து என்உள்புக,*
கோல வாடையும்* கொண்டு வந்ததுஓர்*
ஆலி வந்ததால்* அரிது காவலே!
கெண்டை ஒண்கணும் துயிலும்,* என்நிறம்-
பண்டு பண்டு போல்ஒக்கும்,* மிக்கசீர்த்
தொண்டர் இட்ட* பூந்துளவின் வாசமே,*
வண்டு கொண்டு வந்து* ஊதுமாகிலே
அன்று பாரதத்து* ஐவர் தூதனாய்ச்,*
சென்ற மாயனை* செங்கண் மாலினை,*
மன்றில்ஆர் புகழ்* மங்கை வாள்கலி,*
கன்றி சொல்வல்லார்க்கு* அல்லல் இல்லையே (2)