பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
    சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 

    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
    தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
    உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 

    இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
    தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
    நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 

    வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
    சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 

    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
    விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 

    கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
    தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
    தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 

    மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
    காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
    ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 

    வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
    தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
    ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*

    என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
    சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
    அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 

    வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
    பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*


    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 

    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)


    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
    அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*

    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       


    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 

    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*

    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 

    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
    படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*

    வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
    பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 

    ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
    தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 

    எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
    கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  


    தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
    தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 

    பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
    தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 

    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  


    வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
    சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 

    அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
    அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  


    நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
    அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*

    சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*
    எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!


    நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
    இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*

    செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
    கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 


    மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
    நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*

    புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
    எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!


    நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
    என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*

    பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
    எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 


    கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்* 
    புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்* 
    அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!


    உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*
    அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*
    மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!


    சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*
    அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*

    கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*
    இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!


    ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*
    ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!* 

    நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*
    மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!


    புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
    கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*

    நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
    தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    


    தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*

    பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*   இலங்கை
    வவ்விய இடும்பை தீரக்*  கடுங் கணை துரந்த எந்தை* 

    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்*  குங்குமம் கழுவிப் போந்த* 
    தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    மாத்தொழில் மடங்கச் செற்று*  மருது இற நடந்து* வன் தாள் 
    சேத்தொழில் சிதைத்துப்*  பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*

    நாத்தொழில் மறை வல்லார்கள்*  நயந்து அறம் பயந்த வண் கைத்* 
    தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  


    தாங்கு அரும் சினத்து வன் தாள்*  தடக் கை மா மருப்பு வாங்கி* 
    பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து*  எருது அடர்த்த எந்தை*

    மாங்கனி நுகர்ந்த மந்தி*  வந்து வண்டு இரிய*  வாழைத் 
    தீங்கனி நுகரும் நாங்கூர்த்*   திருமணிக்கூடத்தானே.  


    கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*  தன்மேல் 
    வரும்அவள் செவியும் மூக்கும்*  வாளினால் தடிந்த எந்தை*

    பெருமகள் பேதை மங்கை*  தன்னொடும் பிரிவு இலாத* 
    திருமகள் மருவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.    


    கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
    அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 

    ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
    திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.         


    குன்றமும் வானும் மண்ணும்*  குளிர் புனல் திங்களோடு* 
    நின்றவெம் சுடரும் அல்லா*  நிலைகளும் ஆய எந்தை*

    மன்றமும் வயலும் காவும்*  மாடமும் மணங் கொண்டு*  எங்கும் 
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.          


    சங்கையும் துணிவும் பொய்யும்*  மெய்யும் இத் தரணி ஓம்பும்* 
    பொங்கிய முகிலும் அல்லாப்*  பொருள்களும் ஆய எந்தை*

    பங்கயம் உகுத்த தேறல்*  பருகிய வாளை பாய*   
    செங்கயல் உகளும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    பாவமும் அறமும் வீடும்*  இன்பமும் துன்பம் தானும்* 
    கோவமும் அருளும் அல்லாக்*  குணங்களும் ஆய எந்தை*

    'மூவரில் எங்கள் மூர்த்தி*  இவன், என முனிவரோடு* 
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே. 


    திங்கள் தோய் மாட நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானை*    
    மங்கையர் தலைவன் வண் தார்க்*  கலியன் வாய் ஒலிகள் வல்லார்*

    பொங்கு நீர் உலகம் ஆண்டு*  பொன்உலகு ஆண்டு*  பின்னும் 
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்*  விளங்குவாரே.    


    வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
    மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-

    உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
    திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
    விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய

    மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
    சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
    தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*

    கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
    ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
    ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
    மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!


    பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
    ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
    ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
    யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-

    மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
    தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 


    வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
    பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*

    தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
    தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 


    உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
    மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*

    பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
    அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   


    பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
    வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

    சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
    அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
    நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்

    காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
    மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.


    கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
    துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*

    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
    நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    


    முனை ஆர் சீயம் ஆகி*  அவுணன் முரண் மார்வம்* 
    புனை வாள் உகிரால்*  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*

    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்*  குயில் கூவும்* 
    நனை ஆர் சோலை சூழ்ந்து*  அழகு ஆய நறையூரே.   


    ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட* 
    சேனைத் தொகையைச் சாடி*  இலங்கை செற்றான் ஊர்*

    மீனைத் தழுவி வீழ்ந்து எழும்*  மள்ளர்க்கு அலமந்து* 
    நானப் புதலில்*  ஆமை ஒளிக்கும்நறையூரே.             


    உறி ஆர் வெண்ணெய் உண்டு*  உரலோடும் கட்டுண்டு* 
    வெறி ஆர் கூந்தல்*  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*

    பொறி ஆர் மஞ்ஞை*  பூம் பொழில்தோறும் நடம் ஆட* 
    நறு நாள்மலர்மேல்*  வண்டு இசை பாடும் நறையூரே.  


    விடை ஏழ் வென்று*  மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்* 
    நடையால் நின்ற*  மருதம் சாய்த்த நாதன் ஊர்* 

    பெடையோடு அன்னம்*  பெய்வளையார் தம்பின்சென்று* 
    நடையோடு இயலி*  நாணி ஒளிக்கும் நறையூரே.


    பகு வாய் வன் பேய்*  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு* 
    புகு வாய் நின்ற*  போதகம் வீழப் பொருதான் ஊர்*

    நெகு வாய் நெய்தல்*  பூ மது மாந்தி கமலத்தின்* 
    நகு வாய் மலர்மேல்*  அன்னம் உறங்கும் நறையூரே*    


    முந்து நூலும் முப்புரி நூலும்*  முன் ஈந்த* 
    அந்தணாளன் பிள்ளையை*  அஞ்ஞான்று அளித்தான் ஊர்*

    பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி*  புள் ஓடி* 
    நந்து வாரும்*  பைம் புனல் வாவி நறையூரே.     


    வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்*  விறல் வியூகம்* 
    விள்ள சிந்துக்கோன் விழ*  ஊர்ந்த விமலன் ஊர்*

    கொள்ளைக் கொழு மீன்*  உண் குருகு ஓடி பெடையோடும்* 
    நள்ளக் கமலத்*  தேறல் உகுக்கும் நறையூரே.


    பாரை ஊரும் பாரம் தீரப்*  பார்த்தன்தன்* 
    தேரை ஊரும்*  தேவதேவன் சேறும் ஊர்*

    தாரை ஊரும்*  தண் தளிர் வேலி புடை சூழ* 
    நாரை ஊரும்*  நல் வயல் சூழ்ந்த*  நறையூரே. 


    தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 

    காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
    சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      


    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*

    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.


    பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 

    நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
    ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*

    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.


    வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
    அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         


    மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
    நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    


    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.


    நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*

    வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
    சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)


    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*

    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)


    மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*

    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!


    ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
    பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*

    தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!


    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*

    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!


    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*

    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     


    முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*

    எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
    கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  


    கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து*  இலங்கையர் கோனது வரைஆகம்,- 
    மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த*  எம் அடிகளும் வாரானால்,*

    இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்*  விடைமணி அடும்,*  ஆயன்- 
    விலங்கல் வேயினது ஓசையும்ஆய்*  இனி விளைவது ஒன்றுஅறியேனே!  


    முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
    மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*

    ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
    தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!


    கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
    மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*

    சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
    அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   


    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*

    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)


    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*

    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)


    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  

    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 


    காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
    போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்*  பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*

    மாலவன் மாமணி வண்ணன் மாயம்*  மற்றும் உள அவை வந்திடாமுன்,* 
    கோலமயில் பயிலும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*

    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  


    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*

    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
    நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*

    வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
    கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    செங்கண் நெடிய கரியமேனித்*  தேவர் ஒருவர் இங்கே புகுந்து,*  என்-
    அங்கம் மெலிய வளைகழல*  ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*

    ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு*  ஆடும் அதனை அறியமாட்டேன்,* 
    கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   


    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 

    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
    போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-

    மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
    கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-

    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    பூங்கோதை ஆய்ச்சி*  கடைவெண்ணெய் புக்குஉண்ண,* 
    ஆங்குஅவள் ஆர்த்துப்*  புடைக்க புடையுண்டு*

    ஏங்கி இருந்து*  சிணுங்கி விளையாடும்*
    ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி  (2)


    தாயர் மனங்கள் தடிப்ப*  தயிர்நெய்உண்டு 
    ஏய்எம்பிராக்கள்*  இருநிலத்து எங்கள்தம்*

    ஆயர் அழக*  அடிகள்*  அரவிந்த-
    வாயவனே கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி


    தாம்மோர் உருட்டி*  தயிர்நெய் விழுங்கிட்டு* 
    தாமோ தவழ்வர்என்று*  ஆய்ச்சியர் தாம்பினால்*

    தாம்மோதரக்கையால்*  ஆர்க்க தழும்புஇருந்த*
    தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*  தாமரைக் கண்ணனே! சப்பாணி


    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
    உற்றார் ஒருவரும் இன்றி*  உலகினில்,*

    மற்றாரும் அஞ்சப்போய்*  வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
    கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*  கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி   


    சோத்து என நின்னைத்*  தொழுவன் வரம் தர,* 
    பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,*  பெரியன-

    ஆய்ச்சியர்*  அப்பம் தருவர்*  அவர்க்காகச்-
    சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!*  தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி   


    கேவலம் அன்று*  உன்வயிறு வயிற்றுக்கு*
    நான் அவல் அப்பம் தருவன்*  கருவிளைப்-

    பூஅலர் நீள்முடி*  நந்தன்தன் போர்ஏறே,* 
    கோவலனே! கொட்டாய் சப்பாணி!*  குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.  


    புள்ளினை வாய்பிளந்து*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    துள்ளி விளையாடி*  தூங்குஉறி வெண்ணெயை,*

    அள்ளிய கையால்*  அடியேன் முலைநெருடும்*
    பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*  பேய்முலை உண்டானே! சப்பாணி


    யாயும் பிறரும்*  அறியாத யாமத்து,* 
    மாய வலவைப்*  பெண் வந்து முலைதர,*

    பேய்என்று அவளைப்*  பிடித்து உயிர் உண்ட,*
    வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.


    கள்ளக் குழவிஆய்*  காலால் சகடத்தைத்*
    தள்ளி உதைத்திட்டு*  தாய்ஆய் வருவாளை,*

    மெள்ளத் தொடர்ந்து*  பிடித்து ஆர்உயிர்உண்ட,*
    வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி 


    கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
    பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*

    சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
    தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)


    மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*

    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
    வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)


    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.


    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.


    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே


    வண்ணக் கருங்குழல்*  ஆய்ச்சியால் மொத்துண்டு,* 
    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் காண்ஏடீ,*

    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் ஆகிலும்,* 
    எண்ணற்கு அரியன்*  இமையோர்க்கும் சாழலே.     


    கன்றப் பறைகறங்க*  கண்டவர்தம் கண்களிப்ப,* 
    மன்றில் மரக்கால்*  கூத்துஆடினான் காண் ஏடீ,*

    மன்றில் மரக்கால்*  கூத்து ஆடினான் ஆகிலும்,* 
    என்றும் அரியன்*  இமையோர்க்கும் சாழலே.  


    கோதைவேல் ஐவர்க்குஆய்*  மண்அகலம் கூறுஇடுவான்,* 
    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் காண்ஏடீ,*

    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் ஆகிலும்,* 
    ஓதநீர் வையகம்*  முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே. 


    பார்மன்னர் மங்கப்*  படைதொட்டு வெம்சமத்துத்,* 
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*

    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,* 
    தார்மன்னர் தங்கள்*  தலைமேலான் சாழலே. 


    கண்டார் இரங்க*  கழியக் குறள்உருஆய்,* 
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் காண்ஏடீ,*

    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் ஆகிலும்* 
    விண்டுஏழ் உலகுக்கும்*  மிக்கான் காண் சாழலே


    கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
    வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*

    வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
    உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)