பிரபந்த தனியன்கள்
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.
குருகூரன் மாறன் பேர் கூறு.
பாசுரங்கள்
அடர்பொன் முடியானை* ஆயிரம் பேரானை
சுடர்கொள் சுடர்ஆழி யானை,* -இடர்கடியும்-
மாதா பிதாவாக* வைத்தேன் எனதுஉள்ளே*
யாதுஆகில் யாதே இனி?
இனிநின்று நின்பெருமை* யான்உரைப்பது என்னே,*
தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,* -பனிநீர்-
அகத்துஉலவு* செஞ்சடையான் ஆகத்தான்,* நான்கு-
முகத்தான் நின்உந்தி முதல்.
முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,* ஒன்றே-
முதல்ஆகும்* மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-
நிகர்இலகு கார்உருவா!* நின்அகத்தது அன்றே,*
புகர்இலகு தாமரையின் பூ?
பூவையும் காயாவும்* நீலமும் பூக்கின்ற,*
காவி மலர்என்றும் காண்தோறும்,* -பாவியேன்-
மெல்ஆவி* மெய்மிகவே பூரிக்கும்,* அவ்வவை-
எல்லாம் பிரான்உருவே என்று.
என்றும் ஒருநாள்* ஒழியாமை யான்இரந்தால்,*
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-
குடைஆக* ஆகாத்த கோவலனார்,* நெஞ்சே!-
புடைதான் பெரிதே புவி.
புவியும் இருவிசும்பும் நின்அகத்த,* நீஎன்-
செவியின் வழிபுகுந்து* என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-
யான்பெரியன் நீபெரியை* என்பதனை யார்அறிவார்,*
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
உள்ளிலும் உள்ளம் தடிக்கும்* வினைப்படலம்,*
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,* -உள்ள-
உலகுஅளவும் யானும்* உளன்ஆவன் என்கொல்*
உலகுஅளந்த மூர்த்தி! உரை.
உரைக்கில்ஓர் சுற்றத்தார்* உற்றார் என்றுஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,* -உரைப்புஎல்லாம்-
நின்அன்றி* மற்றுஇலேன் கண்டாய்,* எனதுஉயிர்க்குஓர்-
சொல்நன்றி ஆகும் துணை.
துணைநாள் பெருங்கிளையும்* தொல்குலமும்,* சுற்றத்து-
இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,* கணைநாணில்-
ஓவாத் தொழில்சார்ங்கன்* தொல்சீரை நல்நெஞ்சே,*
ஓவாத ஊணாக உண்.
உள்நாட்டுத் தேசுஅன்றே!* ஊழ்வினையை அஞ்சுமே,*
விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-
ஆர்ஆகி* எவ்இழிவிற்று ஆனாலும்,* ஆழிஅங்கைப்-
பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?
பிறப்பு இறப்பு மூப்புப்* பிணிதுறந்து,* பின்னும்-
இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-
ஏதமே* என்றுஅல்லால் எண்ணுவனே,* மண்அளந்தான்-
பாதமே ஏத்தாப் பகல்?
பகல்இரா என்பதுவும்* பாவியாது,* எம்மை-
இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-
தொழும்பர் இவர் சீர்க்கும்* துணைஇலர் என்றுஓரார்,*
செழும்பரவை மேயார் தெரிந்து.
தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்* தீவினையேன்,* வாளா-
இருந்தொழிந்தேன்* கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-
அம்மானை* அந்நான்று பின்தொடர்ந்த* ஆழிஅங்கை-
அம்மானை ஏத்தாது அயர்த்து.
அயர்ப்பாய் அயராப்பாய்* நெஞ்சமே! சொன்னேன்*
உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-
அல்லவே செய்கிறுதி* நெஞ்சமே! அஞ்சினேன்*
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
வாழ்த்தி அவன்அடியைப்* பூப்புனைந்து,* நின்தலையைத்-
தாழ்த்து* இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*
எங்குஉற்றாய் என்றுஅவனை* ஏத்தாதுஎன் நெஞ்சமே,*
தங்கத்தான்ஆ மேலும் தங்கு.
தங்கா முயற்றியஆய்* தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,*
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-
தண்அம்பால்* வேலைவாய்க் கண்வளரும்,* என்னுடைய-
கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?
கார்கலந்த மேனியான்* கைகலந்த ஆழியான்,*
பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-
சொல்நினைந்து போக்காரேல்* சூழ்வினையின் ஆழ்துயரை,*
என்நினைந்து போக்குவர் இப்போது? (2)
இப்போதும் இன்னும்* இனிச்சிறிது நின்றாலும்*
எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-
கைகழலா நேமியான்* நம்மேல் வினைகடிவான்*
மொய்கழலே ஏத்த முயல் (2)