பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    கண்ணன் என்னும் கருந்தெய்வம்*  காட்சிப் பழகிக் கிடப்பேனைப்* 
    புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்*  புறம் நின்று அழகு பேசாதே* 

    பெண்ணின் வருத்தம் அறியாத*  பெருமான் அரையிற் பீதக- 
    வண்ண ஆடை கொண்டு*  என்னை வாட்டம் தணிய வீசீரே* (2)     


    பால் ஆலிலையில் துயில் கொண்ட*  பரமன் வலைப்பட்டு இருந்தேனை* 
    வேலால் துன்னம் பெய்தாற் போல்*  வேண்டிற்று எல்லாம் பேசாதே* 

    கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்*  குடந்தைக் கிடந்த குடம் ஆடி* 
    நீலார் தண்ணந் துழாய் கொண்டு*  என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே*     


    கஞ்சைக் காய்ந்த கருவில்லி*  கடைக்கண் என்னும் சிறைக்கோலால்* 
    நெஞ்சு ஊடுருவ வேவுண்டு*  நிலையும் தளர்ந்து நைவேனை* 

    அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்*  அவன் மார்வு அணிந்த வனமாலை* 
    வஞ்சியாதே தருமாகில்*  மார்விற் கொணர்ந்து புரட்டீரே* 


    ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்* 
    காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை* 

    ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய* 
    நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே* 


    அழிலும் தொழிலும் உருக் காட்டான்*  அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்* 
    தழுவி முழுசிப் புகுந்து என்னைச்*  சுற்றிச் சுழன்று போகானால்* 

    தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே*  நெடுமால் ஊதி வருகின்ற* 
    குழலின் தொளைவாய் நீர் கொண்டு*  குளிர முகத்துத் தடவீரே*      


    நடை ஒன்று இல்லா உலகத்து*  நந்தகோபன் மகன் என்னும்* 
    கொடிய கடிய திருமாலால்*  குளப்புக்கூறு கொளப்பட்டு* 

    புடையும் பெயரகில்லேன் நான்*  போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்* 
    பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்*  போகா உயிர் என் உடம்பையே*      


    வெற்றிக் கருளக் கொடியான்தன்*  மீமீது ஆடா உலகத்து* 
    வெற்ற வெறிதே பெற்ற தாய்*  வேம்பே ஆக வளர்த்தாளே* 

    குற்றம் அற்ற முலைதன்னைக்*  குமரன் கோலப் பணைத்தோளோடு* 
    அற்ற குற்றம் அவை தீர*  அணைய அமுக்கிக் கட்டீரே*  


    உள்ளே உருகி நைவேனை*  உளளோ இலளோ என்னாத* 
    கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்*  கோவர்த்தனனைக் கண்டக்கால்* 

    கொள்ளும் பயன் ஒன்று இல்லாத*  கொங்கைதன்னைக் கிழங்கோடும்* 
    அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்*  எறிந்து என் அழலைத் தீர்வேனே*.     


    கொம்மை முலைகள் இடர் தீரக்*  கோவிந்தற்கு ஓர் குற்றேவல்* 
    இம்மைப் பிறவி செய்யாதே*  இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?* 

    செம்மை உடைய திருமார்வில்*  சேர்த்தானேனும் ஒரு ஞான்று* 
    மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி*  விடைதான் தருமேல் மிக நன்றே*    


    அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை* 
    வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை* 

    வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்* 
    சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2)