பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா * ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!* பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி* செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்* குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!*
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி* மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்* கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!* நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்-
தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்* தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்*
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்* விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!*
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள* வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!*
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்* கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்* என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்* வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி* ஒருங்கு-
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை* ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்* முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!* கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே*
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!* துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை* அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!*
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்* தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய*
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய* நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்* தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய* என்-
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்- சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்* பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர*
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்* கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக*
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே* நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ*
ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்* சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்* அரையிற்-
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்* பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்* மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக*
எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்* ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று*
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு* ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.
வேலிக் கோல் வெட்டி* விளையாடு வில் ஏற்றி*
தாலிக் கொழுந்தைத்* தடங்கழுத்திற் பூண்டு*
பீலித் தழையைப்* பிணைத்துப் பிறகிட்டு*
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா!
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.
கறுத்திட்டு எதிர்நின்ற* கஞ்சனைக் கொன்றான்*
பொறுத்திட்டு எதிர்வந்த* புள்ளின் வாய் கீண்டான்*
நெறித்த குழல்களை* நீங்க முன் ஓடிச்*
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா!
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
ஒன்றே உரைப்பான்* ஒரு சொல்லே சொல்லுவான்*
துன்று முடியான்* துரியோதனன் பக்கல்*
சென்று அங்குப் பாரதம்* கையெறிந்தானுக்குக்*
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.
சீர் ஒன்று தூதாய்த்* திரியோதனன் பக்கல்*
ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்*
பார் ஒன்றிப் பாரதம்* கைசெய்து பார்த்தற்குத்*
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
ஆலத்து இலையான்* அரவின் அணை மேலான்*
நீலக் கடலுள்* நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே* பார்த்தற்கு அருள்செய்த*
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
பொற்றிகழ்* சித்திரகூடப் பொருப்பினில்*
உற்ற வடிவில்* ஒரு கண்ணும் கொண்ட* அக்
கற்றைக் குழலன்* கடியன் விரைந்து உன்னை*
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா!
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!
மின்னிடைச் சீதை பொருட்டா* இலங்கையர்*
மன்னன் மணிமுடி* பத்தும் உடன் வீழத்*
தன் நிகர் ஒன்று இல்லாச்* சிலை கால் வளைத்து இட்ட*
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
தென் இலங்கை மன்னன்* சிரம் தோள் துணிசெய்து*
மின் இலங்கும் பூண்* விபீடண நம்பிக்கு*
என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.
அக்காக்காய்! நம்பிக்குக்* கோல் கொண்டு வா என்று*
மிக்காள் உரைத்த சொல்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
ஒக்க உரைத்த* தமிழ் பத்தும் வல்லவர்*
மக்களைப் பெற்று* மகிழ்வர் இவ் வையத்தே.
நாவலம் பெரிய தீவினில் வாழும்* நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்*
தூ வலம்புரி உடைய திருமால்* தூய வாயிற் குழல்-ஓசை வழியே*
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப* உடல் உள் அவிழ்ந்து* எங்கும்-
காவலும் கடந்து கயிறுமாலை* ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)
இட அணரை இடத் தோளொடு சாய்த்து* இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்*
குடவயிறு பட வாய் கடைகூடக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
மட மயில்களொடு மான்பிணை போலே* மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி* ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*
வான் இளவரசு வைகுந்தக் குட்டன்* வாசுதேவன் மதுரைமன்னன்* நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி* மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்*
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்* சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்* தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்*
கானகம் படி உலாவி உலாவிக்* கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது*
மேனகையொடு திலோத்தமை அரம்பை* உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி*
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி* ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a
முன் நரசிங்கமது ஆகி* அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்-
மன்னர் அஞ்சும்* மதுசூதனன் வாயிற்* குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்பு உடைய தும்புருவோடு* நாரதனும் தம் தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம் தம்* கின்னரம் தொடுகிலோம் என்றனரே*
செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்* தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்* கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்* அமுத கீத வலையால் சுருக்குண்டு*
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி* நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்* பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத* அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*
அவியுணா மறந்து வானவர் எல்லாம்* ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து* கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்* செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக*
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து* வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்*
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்* கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.*
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்* செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே*
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்* ஊதுகின்ற குழல்-ஓசை வழியே*
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து* மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர*
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா* எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து* கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை*
அருங்கல உருவின் ஆயர் பெருமான்* அவனொருவன் குழல் ஊதின போது*
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்* மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்*
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி* அவை செய்யும் குணமே.*
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்* கோவிந்தனுடைய கோமள வாயிற்*
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்* கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்*
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்* விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்*
குழலை வென்ற குளிர் வாயினராகிச்* சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)
காசும் கறைஉடைக் கூறைக்கும்* அங்குஓர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்குஅவத்தப் பேர்இடும்* ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு* நீங்கள் தேனித்துஇருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள் (2)
அங்குஒருகூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*
மங்கிய மானிடசாதியின்* பேர்இடும் ஆதர்காள்!*
செங்கண்நெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*
பிச்சைபுக்குஆகிலும்* எம்பிரான் திருநாமமே-
நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*
மானிட சாதியின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*
மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
நாடும் நகரும் அறிய* மானிடப் பேர்இட்டு*
கூடிஅழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு-
எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*
கண்ணுக்குஇனிய* கருமுகில் வண்ணன் நாமமே-
நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்
நம்பி பிம்பிஎன்று* நாட்டு மானிடப் பேர்இட்டால்*
நம்பும் பிம்பும்எல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந்தாமரைக் கண்ணன்* பேர்இட்டுஅழைத்தக்கால்*
நம்பிகாள் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
ஊத்தைக்குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-
மூத்திரப்பிள்ளையை* என் முகில்வண்ணன் பேர் இட்டு*
கோத்துக் குழைத்துக்* குணாலம்ஆடித் திரிமினோ*
நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
சீர்அணி மால்* திருநாமமே இடத்தேற்றிய*
வீர்அணி தொல்புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்* ஒன்பதோடுஒன்றும் வல்லவர்*
பேர்அணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2)