பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வட்டு நடுவே* வளர்கின்ற* மாணிக்க-
மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்*
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)
கிண்கிணி கட்டிக்* கிறி கட்டிக் கையினிற்*
கங்கணம் இட்டுக்* கழுத்திற் தொடர் கட்டித்*
தன் கணத்தாலே* சதிரா நடந்து வந்து*
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கத்தக் கதித்துக்* கிடந்த பெருஞ்செல்வம்*
ஒத்துப் பொருந்திக்கொண்டு* உண்ணாது மண் ஆள்வான்*
கொத்துத் தலைவன்* குடிகெடத் தோன்றிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்
நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்*
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண்தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடிக்*
கண் பல பெய்த* கருந்தழைக் காவின் கீழ்ப்*
பண் பல பாடிப்* பல்லாண்டு இசைப்ப* பண்டு-
மண் பல கொண்டான் புறம்புல்குவான்* வாமனன் என்னைப் புறம்புல்குவான்
சத்திரம் ஏந்தித்* தனி ஒரு மாணியாய்*
உத்தர வேதியில்* நின்ற ஒருவனைக்*
கத்திரியர் காணக்* காணி முற்றும் கொண்ட*
பத்திராகாரன் புறம்புல்குவான்* பார் அளந்தான் என் புறம்புல்குவான்
பொத்த உரலைக் கவிழ்த்து* அதன்மேல் ஏறி*
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆழியான் என்னைப் புறம்புல்குவான்
மூத்தவை காண* முது மணற்குன்று ஏறிக்*
கூத்து உவந்து ஆடிக்* குழலால் இசை பாடி*
வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்-
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்*
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்* உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்* புறம்புல்கிய*
வேய்த் தடந்தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து*
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்*
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே (2)
ஆற்றில் இருந்து* விளையாடுவோங்களைச்*
சேற்றால் எறிந்து* வளை துகிற் கைக்கொண்டு*
காற்றிற் கடியனாய்* ஓடி அகம் புக்கு*
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்*
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)
குண்டலம் தாழ* குழல் தாழ நாண் தாழ*
எண் திசையோரும்* இறைஞ்சித் தொழுது ஏத்த*
வண்டு அமர் பூங்குழலார்* துகிற் கைக்கொண்டு*
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்*
வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
தடம் படு தாமரைப்* பொய்கை கலக்கி*
விடம் படு நாகத்தை* வால் பற்றி ஈர்த்து*
படம் படு பைந்தலை* மேல் எழப் பாய்ந்திட்டு*
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்*
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
தேனுகன் ஆவி செகுத்துப்*
பனங்கனி தான் எறிந்திட்ட* தடம் பெருந்தோளினால்*
வானவர் கோன் விட* வந்த மழை தடுத்து*
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
ஆய்ச்சியர் சேரி* அளை தயிர் பால் உண்டு*
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்* பிடியுண்டு*
வேய்த் தடந்தோளினார்* வெண்ணெய் கோள் மாட்டாது*
அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்*
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்
தள்ளித் தளர் நடை யிட்டு* இளம் பிள்ளையாய்*
உள்ளத்தின் உள்ளே* அவளை உற நோக்கிக*
கள்ளத்தினால் வந்த* பேய்ச்சி முலை உயிர்*
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்*
துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்
மாவலி வேள்வியில்* மாண் உருவாய்ச் சென்று*
மூவடி தா என்று* இரந்த இம் மண்ணினை*
ஒரடி இட்டு* இரண்டாம் அடிதன்னிலே*
தாவடி இட்டானால் இன்று முற்றும்*
தரணி அளந்தானால் இன்று முற்றும்
தாழை தண்-ஆம்பற்* தடம் பெரும் பொய்கைவாய்*
வாழும் முதலை* வலைப்பட்டு வாதிப்பு உண்*
வேழம் துயர் கெட* விண்ணோர் பெருமானாய்*
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்*
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
வானத்து எழுந்த* மழை முகில் போல்*
எங்கும் கானத்து மேய்ந்து* களித்து விளையாடி*
ஏனத்து உருவாய்* இடந்த இம் மண்ணினைத்*
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும்
அங் கமலக் கண்ணன்தன்னை* அசோதைக்கு*
மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*
அங்கு அவர் சொல்லைப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே* (2)
நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின் அடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச் சனகன்* சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
அறிந்து அரசு களைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்கச்*
செறிந்த சிலைகொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓர் அடையாளம்* (2)
அல்லியம்பூ மலர்க்கோதாய்!* அடிபணிந்தேன் விண்ணப்பம்*
சொல்லுகேன் கேட்டருளாய்* துணைமலர்க் கண் மடமானே!*
எல்லியம் போது இனிதிருத்தல்* இருந்தது ஓர் இட வகையில்*
மல்லிகை மா மாலைகொண்டு* அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*
கலக்கிய மா மனத்தனளாய்க்* கைகேசி வரம் வேண்ட*
மலக்கிய மா மனத்தனனாய்* மன்னவனும் மறாது ஒழியக்*
குலக்குமரா! காடு உறையப் போ என்று* விடை கொடுப்ப*
இலக்குமணன் தன்னொடும்* அங்கு ஏகியது ஓர் அடையாளம்*
வார் அணிந்த முலை மடவாய்!* வைதேவீ! விண்ணப்பம்*
தேர் அணிந்த அயோத்தியர்கோன்* பெருந்தேவீ! கேட்டருளாய்*
கூர் அணிந்த வேல் வலவன்* குகனோடும் கங்கைதன்னிற்*
சீர் அணிந்த தோழமை* கொண்டதும் ஓர் அடையாளம்*
மான் அமரும் மென்நோக்கி!* வைதேவீ! விண்ணப்பம்*
கான் அமரும் கல்-அதர் போய்க்* காடு உறைந்த காலத்துத்*
தேன் அமரும் பொழிற் சாரல்* சித்திரகூடத்து இருப்பப்*
பால்மொழியாய்! பரதநம்பி* பணிந்ததும் ஓர் அடையாளம*
சித்திரகூடத்து இருப்பச்* சிறுகாக்கை முலை தீண்ட*
அத்திரமே கொண்டு எறிய* அனைத்து உலகும் திரிந்து ஓடி*
வித்தகனே! இராமாவோ!* நின் அபயம் என்று அழைப்ப*
அத்திரமே அதன்கண்ணை* அறுத்ததும் ஓர் அடையாளம்*
மின் ஒத்த நுண்- இடையாய்!* மெய்- அடியேன் விண்ணப்பம்*
பொன் ஒத்த மான் ஒன்று* புகுந்து இனிது விளையாட*
நின் அன்பின் வழிநின்று* சிலை பிடித்து எம்பிரான் ஏகப்*
பின்னே அங்கு இலக்குமணன்* பிரிந்ததும் ஓர் அடையாளம்*
மைத் தகு மா மலர்க்குழலாய்!* வைதேவீ விண்ணப்பம்*
ஒத்த புகழ் வானரக்கோன்* உடன் இருந்து நினைத் தேட*
அத்தகு சீர் அயோத்தியர்கோன்* அடையாளம் இவை மொழிந்தான்*
இத் தகையால் அடையாளம்* ஈது அவன் கைம் மோதிரமே*
திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*
மிக்க பெரும் சபை நடுவே* வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-
வைத்துக்கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே (2)
வார் ஆரும் முலை மடவாள்* வைதேவி தனைக் கண்டு*
சீர் ஆரும் திறல் அனுமன்* தெரிந்து உரைத்த அடையாளம்*
பார் ஆரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
ஏர் ஆரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே* (2)
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும்* புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்* எற்றிநமன்தமர் பற்றும்போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்* சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்*
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
ஒற்றைவிடையனும் நான்முகனும்* உன்னையறியாப் பெருமையோனே!*
முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி* அஞ்சநமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
பையரவினனைப் பாற்கடலுள்* பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!*
உய்யஉலகு படைக்கவேண்டி* உந்தியிற் தோற்றினாய் நான்முகனை*
வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்*
ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
தண்ணெனவில்லை நமன்தமர்கள்* சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற* தேவர்கள்நாயகனே! எம்மானே!*
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!* ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்* வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது*
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்* நமன்தமர்பற்றி நலிந்திட்டு*
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது* அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
வானேய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!* என்-
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்றறுதியாக* ஆதியஞ்சோதி மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனாகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)