பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)


    ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*
    நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

    பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
    ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே


    பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*
    காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

    ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-
    வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே


    உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்* 
    நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

    செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும் 
    அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே


    கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*
    தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

    விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
    அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்


    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே


    வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
    ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

    பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
    மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே


    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*

    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே


    கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்* 
    எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

    ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்* 
    மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.


    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   


    மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
    பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*

    பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
    அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)


    மலை புரை தோள் மன்னவரும்*  மாரதரும் மற்றும்* 
    பலர் குலைய*  நூற்றுவரும் பட்டழிய*  பார்த்தன்

    சிலை வளையத்*  திண்தேர்மேல் முன்நின்ற*  செங்கண் 
    அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    காயும் நீர் புக்குக்*  கடம்பு ஏறி*  காளியன் 
    தீய பணத்திற்*  சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    இருட்டிற் பிறந்து போய்*  ஏழை வல் ஆயர்* 
    மருட்டைத் தவிர்ப்பித்து*  வன் கஞ்சன் மாளப்-

    புரட்டி*  அந்நாள் எங்கள்*  பூம்பட்டுக் கொண்ட* 
    அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    சேப் பூண்ட*  சாடு சிதறித்*  திருடி நெய்க்கு 
    ஆப்பூண்டு*  நந்தன் மனைவி கடை தாம்பால்*

    சோப்பூண்டு துள்ளித்*  துடிக்கத் துடிக்க*  அன்று 
    ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    செப்பு இள மென்முலைத்*  தேவகி நங்கைக்குச்* 
    சொப்படத் தோன்றி*  தொறுப்பாடியோம் வைத்த* 

    துப்பமும் பாலும்*  தயிரும் விழுங்கிய* 
    அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    தத்துக் கொண்டாள் கொலோ?*  தானே பெற்றாள் கொலோ?* 
    சித்தம் அனையாள்*  அசோதை இளஞ்சிங்கம்*

    கொத்து ஆர் கருங்குழற்*  கோபால கோளரி* 
    அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் 


    கொங்கை வன்*  கூனிசொற் கொண்டு குவலயத்* 
    துங்கக் கரியும்*  பரியும் இராச்சியமும்* 

    எங்கும் பரதற்கு அருளி*  வன்கான் அடை* 
    அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    பதக முதலை*  வாய்ப் பட்ட களிறு* 
    கதறிக் கைகூப்பி*  என் கண்ணா! கண்ணா! என்ன*

    உதவப் புள் ஊர்ந்து*  அங்கு உறுதுயர் தீர்த்த* 
    அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
    வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*

    சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
    வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)


    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
    பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*

    மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
    அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)


    பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்*  வருமளவு இப்பால்* 
    வன் பாரச் சகடம் இறச் சாடி*  வடக்கில் அகம் புக்கு இருந்து*

    மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை*  வேற்றுருவம் செய்து வைத்த* 
    அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்*  குடத் தயிர் சாய்த்துப் பருகி* 
    பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்*  பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*

    இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!*  உன்னை என்மகனே என்பர் நின்றார்* 
    அம்மா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை*  மையன்மை செய்து அவர் பின்போய்* 
    கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று*  குற்றம் பல பல செய்தாய்*

    பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ*  புத்தகத்துக்கு உள கேட்டேன்* 
    ஐயா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு*  தயிரும் விழுங்கி* 
    கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த*  கலத்தொடு சாய்த்துப் பருகி*

    மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல*  விம்மி விம்மி அழுகின்ற* 
    அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்*  கற்றாநிரை மண்டித் தின்ன* 
    விரும்பாக் கன்று ஒன்று கொண்டு*  விளங்கனி வீழ எறிந்த பிரானே!*

    சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்*  சூழ்வலை வைத்துத் திரியும்* 
    அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு*  வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி* 
    சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்*  சுற்றும் தொழ நின்ற சோதி!*

    பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!*  உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு- 
    அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    வாளா ஆகிலும் காணகில்லார்*  பிறர் மக்களை மையன்மை செய்து* 
    தோளால் இட்டு அவரோடு திளைத்து*  நீ சொல்லப் படாதன செய்தாய்*

    கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!*  வாழ்வில்லை*  நந்தன்- 
    காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்*  சோலைத் தடம் கொண்டு புக்கு* 
    முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை*  மூவேழு சென்றபின் வந்தாய்*

    ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*  உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்* 
    அத்தா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 


    காரார் மேனி நிறத்து எம்பிரானைக்*  கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி* 
    ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்*  அம்மம் தாரேன் என்ற மாற்றம்*

    பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்*  இருடிகேசன் அடியாரே*  (2)


    கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
    எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*

    அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)


    நாந்தகம்சங்குதண்டு*  நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்* 
    ஏந்துபெருமை இராமனை*  இருக்குமிடம் நாடுதிரேல்*

    காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்*  கடுஞ்சிலை சென்றிறுக்க* 
    வேந்தர்தலைவன் சனகராசன்தன்*  வேள்வியில் கண்டாருளர். 


    கொலையானைக் கொம்பு பறித்துக்*  கூடலர் சேனை பொருது அழியச்* 
    சிலையால் மராமரம் எய்த தேவனைச்*  சிக்கென நாடுதிரேல்*

    தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று*  தடவரை கொண்டு அடைப்ப* 
    அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை*  அங்குத்தைக் கண்டார் உளர் 


    தோயம்பரந்த நடுவுசூழலில்*  தொல்லை வடிவுகொண்ட* 
    மாயக்குழவியதனை நாடுறில்*  வம்மின்சுவடுஉரைக்கேன்*

    ஆயர்மடமகள் பின்னைக்காகி*  அடல்விடைஏழினையும்* 
    வீயப்பொருது வியர்த்துநின்றானை*  மெய்ம்மையேகண்டார்உளர். 


    நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்*  நான்முகனும் முறையால்* 
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற*  திருமாலைநாடுதிரேல்*

    வாரேறுகொங்கை உருப்பிணியை*  வலியப்பிடித்துக்கொண்டு- 
    தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்*  சிக்கெனக்கண்டார்உளர்.   


    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்

    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  


    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்*  ஏந்துகையன்* 
    உள்ளவிடம்வினவில்*  உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*

    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்*  தேர்மிசைமுன்புநின்று* 
    கள்ளப்படைத்துணையாகிப்*  பாரதம்கைசெய்யக்கண்டார்உளர். 


    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற*  அரசர்கள்தம்முகப்பே* 
    நாழிகைபோகப்படைபொருதவன்*  தேவகிதன்சிறுவன்*

    ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்*  சயத்திரதனதலையை*
    பாழிலுருளப்படைபொருதவன்*  பக்கமேகண்டார்உளர். 


    மண்ணும்மலையும்மறிகடல்களும்*  மற்றும்யாவும்எல்லாம்* 
    திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்*  சிக்கெனநாடுதிரேல்*

    எண்ணற்கரியதோரேனமாகி*  இருநிலம்புக்கிடந்து*
    வண்ணக்கருங்குழல்மாதரோடு*  மணந்தானைக்கண்டாருளர் 


    கரியமுகில்புரைமேனிமாயனைக்*  கண்டசுவடுஉரைத்துப்* 
    புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி*  விளைகழனிப்புதுவைத்*

    திருவிற்பொலிமறைவாணன்*  பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்* 
    பரவும்மனமுடைப்பத்தருள்ளார்*  பரமனடிசேர்வர்களே (2)


    வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
    நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*

    மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
    காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)


    சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்*   சங்கு சக்கரம் ஏந்துகையானே!* 
    பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்*  பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*

    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்*  வேறுஒருவரோடு என் மனம் பற்றாது* 
    உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்*  ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!


    நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்*  நாரணா! என்னும் இத்தனைஅல்லால்* 
    புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்*  புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*

    உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்*  ஓவாதே நமோநாரணா! என்பன்* 
    வன்மைஆவது உன் கோயிலில்வாழும்*  வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.


    நெடுமையால் உலகேழும் அளந்தாய்!*  நின்மலா! நெடியாய்! அடியேனைக்* 
    குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா*  கூறைசோறு இவை வேண்டுவதில்லை*

    அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே*  அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* 
    கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை*  கோத்தவன் தளைகோள் விடுத்தானே!


    தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*  துடவையும் கிணறும் இவைஎல்லாம்* 
    வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே*  வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*

    நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது*  நச்சுவார் பலர் கேழலொன்றாகி* 
    கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!*  குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!


    கண்ணா! நான்முகனைப் படைத்தானே!*  காரணா! கரியாய்! அடியேன் நான்* 
    உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை*  ஓவாதே நமோ நாரணா என்று*

    எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம*  வேத நாள்மலர் கொண்டு உன பாதம்- 
    நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்*  அன்று எனக்கு அவை பட்டினி நாளே.


    வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை*  மெத்தையாக விரித்து*  அதன்மேலே- 
    கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்*  காணலாங்கொல் என்றுஆசையினாலே*

    உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி*  உரோமகூபங்களாய்க்*  கண்ணநீர்கள்- 
    துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்*  சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.


    வண்ணமால் வரையே குடையாக*  மாரிகாத்தவனே! மதுசூதா!* 
    கண்ணனே! கரிகோள்விடுத்தானே!*  காரணா! களிறுஅட்டபிரானே!*

    எண்ணுவார் இடரைக் களைவானே!*  ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* 
    நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்*  நன்மையே அருள்செய் எம்பிரானே!  


    நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்*  நாதனே! நரசிங்கமது ஆனாய்!* 
    உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்*  ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*

    கம்பமா கரிகோள் விடுத்தானே!*  காரணா! கடலைக்கடைந்தானே!* 
    எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!*  ஏழையேன் இடரைக் களையாயே.


    காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
    வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*

    சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
    நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.