பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்க்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறு ஆயிற்றே. (2)
ஓடுவார் விழுவார்* உகந்து ஆலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குத்தான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே
பேணிச் சீர் உடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத் தாம் புகுவார்* புக்குப் போதுவார்*
ஆண் ஒப்பார்* இவன் நேர் இல்லை காண்* திரு-
வோணத்தான்* உலகு ஆளும் என்பார்களே
உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்*
நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும்
அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே
கொண்ட தாள் உறி* கோலக் கொடுமழுத்*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்* புகுந்து நெய்யாடினார்
கையும் காலும் நிமிர்த்துக்* கடார நீர்*
பைய ஆட்டிப்* பசுஞ் சிறு மஞ்சளால்*
ஐய நா வழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட* மடநல்லார்*
ஆயர் புத்திரன் அல்லன்* அருந்தெய்வம்*
பாய சீர் உடைப்* பண்பு உடைப் பாலகன்*
மாயன் என்று* மகிழ்ந்தனர் மாதரே
பத்து நாளும் கடந்த* இரண்டாம் நாள்*
எத் திசையும்* சயமரம் கோடித்து*
மத்த மா மலை* தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே
கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்.
செந்நெல்லார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்*
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே (2)
மெச்சு ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதிற் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கைசெய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)
மலை புரை தோள் மன்னவரும்* மாரதரும் மற்றும்*
பலர் குலைய* நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன்
சிலை வளையத்* திண்தேர்மேல் முன்நின்ற* செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
காயும் நீர் புக்குக்* கடம்பு ஏறி* காளியன்
தீய பணத்திற்* சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி*
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
இருட்டிற் பிறந்து போய்* ஏழை வல் ஆயர்*
மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப்-
புரட்டி* அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட*
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
சேப் பூண்ட* சாடு சிதறித்* திருடி நெய்க்கு
ஆப்பூண்டு* நந்தன் மனைவி கடை தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித்* துடிக்கத் துடிக்க* அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
செப்பு இள மென்முலைத்* தேவகி நங்கைக்குச்*
சொப்படத் தோன்றி* தொறுப்பாடியோம் வைத்த*
துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய*
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
தத்துக் கொண்டாள் கொலோ?* தானே பெற்றாள் கொலோ?*
சித்தம் அனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*
கொத்து ஆர் கருங்குழற்* கோபால கோளரி*
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
கொங்கை வன்* கூனிசொற் கொண்டு குவலயத்*
துங்கக் கரியும்* பரியும் இராச்சியமும்*
எங்கும் பரதற்கு அருளி* வன்கான் அடை*
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பதக முதலை* வாய்ப் பட்ட களிறு*
கதறிக் கைகூப்பி* என் கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள் ஊர்ந்து* அங்கு உறுதுயர் தீர்த்த*
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த*
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும்
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே (2)
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடைஇட்டு வருவான்*
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு* ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய்வைத்த பிரானே!*
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே* (2)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்* வருமளவு இப்பால்*
வன் பாரச் சகடம் இறச் சாடி* வடக்கில் அகம் புக்கு இருந்து*
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை* வேற்றுருவம் செய்து வைத்த*
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்* குடத் தயிர் சாய்த்துப் பருகி*
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்* பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!* உன்னை என்மகனே என்பர் நின்றார்*
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை* மையன்மை செய்து அவர் பின்போய்*
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று* குற்றம் பல பல செய்தாய்*
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ* புத்தகத்துக்கு உள கேட்டேன்*
ஐயா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப் பருகி*
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல* விம்மி விம்மி அழுகின்ற*
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்* கற்றாநிரை மண்டித் தின்ன*
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு* விளங்கனி வீழ எறிந்த பிரானே!*
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்* சூழ்வலை வைத்துத் திரியும்*
அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு* வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி*
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்* சுற்றும் தொழ நின்ற சோதி!*
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!* உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு-
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
வாளா ஆகிலும் காணகில்லார்* பிறர் மக்களை மையன்மை செய்து*
தோளால் இட்டு அவரோடு திளைத்து* நீ சொல்லப் படாதன செய்தாய்*
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!* வாழ்வில்லை* நந்தன்-
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தாய்மார் மோர் விற்கப் போவர்* தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை* நேர்படவே கொண்டு போதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து* கண்டார் கழறத் திரியும்*
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்* சோலைத் தடம் கொண்டு புக்கு*
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை* மூவேழு சென்றபின் வந்தாய்*
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்* உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்*
அத்தா உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்* கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி*
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்* அம்மம் தாரேன் என்ற மாற்றம்*
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்* இருடிகேசன் அடியாரே* (2)
கதிர் ஆயிரம் இரவி* கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிர் இல் பெருமை இராமனை* இருக்கும் இடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொரு தோள்* இரணியன் ஆகம் பிளந்து* அரியாய்-
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டார் உளர் (2)
நாந்தகம்சங்குதண்டு* நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்*
ஏந்துபெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*
காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்* கடுஞ்சிலை சென்றிறுக்க*
வேந்தர்தலைவன் சனகராசன்தன்* வேள்வியில் கண்டாருளர்.
கொலையானைக் கொம்பு பறித்துக்* கூடலர் சேனை பொருது அழியச்*
சிலையால் மராமரம் எய்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று* தடவரை கொண்டு அடைப்ப*
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை* அங்குத்தைக் கண்டார் உளர்
தோயம்பரந்த நடுவுசூழலில்* தொல்லை வடிவுகொண்ட*
மாயக்குழவியதனை நாடுறில்* வம்மின்சுவடுஉரைக்கேன்*
ஆயர்மடமகள் பின்னைக்காகி* அடல்விடைஏழினையும்*
வீயப்பொருது வியர்த்துநின்றானை* மெய்ம்மையேகண்டார்உளர்.
நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்* நான்முகனும் முறையால்*
சீரேறுவாசகஞ்செய்யநின்ற* திருமாலைநாடுதிரேல்*
வாரேறுகொங்கை உருப்பிணியை* வலியப்பிடித்துக்கொண்டு-
தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்* சிக்கெனக்கண்டார்உளர்.
பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர்முலைவாய்மடுக்க-
வல்லானை* மாமணிவண்ணனை* மருவும்இடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு* பௌவம்எறிதுவரை*
எல்லாரும் சூழச்சிங்காசனத்தே* இருந்தானைக்கண்டாருளர்.
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்* ஏந்துகையன்*
உள்ளவிடம்வினவில்* உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்* தேர்மிசைமுன்புநின்று*
கள்ளப்படைத்துணையாகிப்* பாரதம்கைசெய்யக்கண்டார்உளர்.
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற* அரசர்கள்தம்முகப்பே*
நாழிகைபோகப்படைபொருதவன்* தேவகிதன்சிறுவன்*
ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்* சயத்திரதனதலையை*
பாழிலுருளப்படைபொருதவன்* பக்கமேகண்டார்உளர்.
மண்ணும்மலையும்மறிகடல்களும்* மற்றும்யாவும்எல்லாம்*
திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்* சிக்கெனநாடுதிரேல்*
எண்ணற்கரியதோரேனமாகி* இருநிலம்புக்கிடந்து*
வண்ணக்கருங்குழல்மாதரோடு* மணந்தானைக்கண்டாருளர்
கரியமுகில்புரைமேனிமாயனைக்* கண்டசுவடுஉரைத்துப்*
புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி* விளைகழனிப்புதுவைத்*
திருவிற்பொலிமறைவாணன்* பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்*
பரவும்மனமுடைப்பத்தருள்ளார்* பரமனடிசேர்வர்களே (2)
வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*
நாக்கு நின்னைஅல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2)
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்துகையானே!*
பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறுஒருவரோடு என் மனம் பற்றாது*
உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்* ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனைஅல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மைஆவது உன் கோயிலில்வாழும்* வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.
நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறைசோறு இவை வேண்டுவதில்லை*
அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே* அங்கங்கே அவைபோதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளைகோள் விடுத்தானே!
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை* துடவையும் கிணறும் இவைஎல்லாம்*
வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே* வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது* நச்சுவார் பலர் கேழலொன்றாகி*
கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!* குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை* ஓவாதே நமோ நாரணா என்று*
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம* வேத நாள்மலர் கொண்டு உன பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்* அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை* மெத்தையாக விரித்து* அதன்மேலே-
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்* காணலாங்கொல் என்றுஆசையினாலே*
உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி* உரோமகூபங்களாய்க்* கண்ணநீர்கள்-
துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்* சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.
வண்ணமால் வரையே குடையாக* மாரிகாத்தவனே! மதுசூதா!*
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!* காரணா! களிறுஅட்டபிரானே!*
எண்ணுவார் இடரைக் களைவானே!* ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!*
நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்* நன்மையே அருள்செய் எம்பிரானே!
நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமது ஆனாய்!*
உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்* ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*
கம்பமா கரிகோள் விடுத்தானே!* காரணா! கடலைக்கடைந்தானே!*
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.
காமர் தாதை கருதலர்சிங்கம்* காண இனிய கருங்குழற் குட்டன்*
வாமனன் என்மரகத வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னைச்*
சேமநன்குஅமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*
நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.