பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
பொன் இயல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்*
தன் இயல் ஓசை* சலன்-சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற்போல்*
என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ (2)
செங்கமலப் பூவிற்* தேன் உண்ணும் வண்டே போல்*
பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய*
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சனவண்ணனே! அச்சோ அச்சோ*
ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ
நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்னத்*
தேறி அவளும்* திருவுடம்பிற் பூச*
ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க* அன்று_
ஏற உருவினாய்! அச்சோ அச்சோ*
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ
கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*
சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோ அச்சோ*
ஆழி அங் கையனே! அச்சோ அச்சோ
போர் ஒக்கப் பண்ணி* இப் பூமிப்பொறை தீர்ப்பான்*
தேர் ஒக்க ஊர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*
கார் ஒக்கு மேனிக்* கரும் பெருங் கண்ணனே!*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ*
ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ
மிக்க பெரும்புகழ்* மாவலி வேள்வியிற்*
தக்கது இது அன்று என்று* தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத்* துரும்பாற் கிளறிய*
சக்கரக் கையனே! அச்சோ அச்சோ*
சங்கம் இடத்தானே! அச்சோ அச்சோ
என் இது மாயம்?* என் அப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே* கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை* வானிற் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோ அச்சோ*
வேங்கடவாணனே! அச்சோ அச்சோ
கண்ட கடலும்* மலையும் உலகு ஏழும்*
முண்டத்துக்கு ஆற்றா* முகில்வண்ணா ஓ! என்று*
இண்டைச் சடைமுடி* ஈசன் இரக்கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ*
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ
துன்னிய பேரிருள்* சூழ்ந்து உலகை மூட*
மன்னிய நான்மறை* முற்றும் மறைந்திடப்*
பின் இவ் உலகினில்* பேரிருள் நீங்க* அன்று-
அன்னமது ஆனானே! அச்சோ அச்சோ*
அருமறை தந்தானே! அச்சோ அச்சோ
நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன*
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே (2)
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு* அதன் ஓசை கேட்கும்*
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்* காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை* புரை புரையால் இவை செய்ய வல்ல*
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய் (2)
வருக வருக வருக இங்கே* வாமன நம்பீ! வருக இங்கே*
கரிய குழல் செய்ய வாய் முகத்து* எம் காகுத்த நம்பீ! வருக இங்கே*
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!* அஞ்சனவண்ணா* அசலகத்தார்*
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்* பாவியேனுக்கு இங்கே போதராயே
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு* தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்*
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்* உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்*
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான்* வழக்கோ? அசோதாய்!*
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்* வாழ ஒட்டான் மதுசூதனனே
கொண்டல்வண்ணா! இங்கே போதராயே* கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே*
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே*
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்* பல்வளையாள் என்மகள் இருப்ப*
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று* இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்*
சாளக்கிராமம் உடைய நம்பி* சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்*
ஆலைக் கரும்பின் மொழி அனைய* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்* போதரேன் என்னாதே போதர் கண்டாய்*
ஏதேனும் சொல்லி அசலகத்தார்* ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்*
கோதுகலம் உடைக்குட்டனேயோ!* குன்று எடுத்தாய்! குடம் ஆடு கூத்தா!*
வேதப் பொருளே! என் வேங்கடவா!* வித்தகனே! இங்கே போதராயே
செந்நெல் அரிசி சிறு பருப்புச்* செய்த அக்காரம் நறுநெய் பாலால்*
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்* பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்*
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி* எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
கேசவனே! இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
நேசம் இலாதார் அகத்து இருந்து* நீ விளையாடாதே போதராயே*
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்* தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்* தாமோதரா! இங்கே போதராயே
கன்னல் இலட்டுவத்தோடு சீடை* காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு*
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்* இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்*
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்* பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
சொல்லில் அரசிப் படுதி நங்காய்!* சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்* கையில் வளையைக் கழற்றிக்கொண்டு*
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற* அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து*
நல்லன நாவற் பழங்கள் கொண்டு* நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (2)
என் நாதன் தேவிக்கு* அன்று இன்பப்பூ ஈயாதாள்*
தன் நாதன் காணவே* தண்பூ மரத்தினை*
வன் நாதப் புள்ளால்* வலியப் பறித்திட்ட*
என் நாதன் வன்மையைப் பாடிப் பற*
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2)
என் வில் வலி கண்டு* போ என்று எதிர்வந்தான்*
தன் வில்லினோடும்* தவத்தை எதிர்வாங்கி*
முன் வில் வலித்து* முதுபெண் உயிருண்டான்*
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற*
தாசரதி தன்மையைப் பாடிப் பற.*
உருப்பிணி நங்கையைத்* தேர் ஏற்றிக் கொண்டு*
விருப்புற்று அங்கு ஏக* விரைந்து எதிர் வந்து*
செருக்கு உற்றான்* வீரம் சிதையத்* தலையைச்-
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற*
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*
மாற்றுத்தாய் சென்று* வனம்போகே என்றிட*
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து* எம்பிரான்! என்று அழ*
கூற்றுத் தாய் சொல்லக்* கொடிய வனம் போன*
சீற்றம் இலாதானைப் பாடிப் பற*
சீதை மணாளனைப் பாடிப் பற.*
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற*
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*
முடி ஒன்றி* மூவுலகங்களும் ஆண்டு* உன்-
அடியேற்கு அருள் என்று* அவன்பின் தொடர்ந்த*
படியில் குணத்துப்* பரத நம்பிக்கு* அன்று-
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற*
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*
காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்-
நீள்முடி ஐந்திலும்* நின்று நடம்செய்து*
மீள அவனுக்கு* அருள்செய்த வித்தகன்*
தோள்-வலி வீரமே பாடிப் பற*
தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*
தார்க்கு இளந்தம்பிக்கு* அரசு ஈந்து* தண்டகம்-
நூற்றவள்* சொற்கொண்டு போகி* நுடங்கு இடைச்-
சூர்ப்பணகாவைச்* செவியொடு மூக்கு* அவள்-
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற*
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*
மாயச் சகடம் உதைத்து* மருது இறுத்து*
ஆயர்களோடு போய்* ஆநிரை காத்து* அணி-
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற*
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.*
காரார் கடலை அடைத்திட்டு* இலங்கை புக்கு*
ஓராதான் பொன்முடி* ஒன்பதோடு ஒன்றையும்*
நேரா அவன்தம்பிக்கே* நீள் அரசு ஈந்த*
ஆராவமுதனைப் பாடிப் பற*
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*
நந்தன் மதலையைக்* காகுத்த னைநவின்று*
உந்தி பறந்த* ஒளியிழை யார்கள்சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை* விட்டு சித்தன்சொல்*
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு* அல்லல் இல்லையே.* (2)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட* திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று*
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட* ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)
தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற்கன்றியும்* மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)
கருளுடைய பொழில்மருதும்* கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்*
உருளுடைய சகடரையும் மல்லரையும்* உடையவிட்டு ஓசைகேட்டான்*
இருளகற்றும் எறிகதிரோன்* மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி*
அருள்கொடுத்திட்டு அடியவரை* ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்*
அதில் நாயகராகி வீற்றிருந்த* மணவாளர் மன்னுகோயில்*
புதுநான் மலர்க்கமலம்* எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்*
பொதுநாயகம் பாவித்து* இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*
சேமமுடை நாரதனார்* சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்*
பூமருவிப் புள்ளினங்கள்* புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.
மைத்துனன்மார் காதலியை* மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட* உயிராளன் உறையும்கோயில்*
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்*
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்* திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.
குறட்பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி*
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை* கொடுத்துகந்த எம்மான்கோயில்*
எறிப்புடைய மணிவரைமேல்* இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.
உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி*
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்* தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.
தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அறியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்*
சேவலொடு பெடையன்னம்* செங்கமல மலரேறி ஊசடிலாப்*
பூவணைமேல் துதைந்தெழு* செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச்செய்யும் நாந்தகமென்னும்*
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கையாளன்*
இரவாளன் பகலாளன் எனையாளன்* ஏழுலகப் பெரும் புரவாளன்*
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.
கைந்நாகத்திடர் கடிந்த* கனலாழிப் படையுயான் கருதும்கோயில்*
தென்நாடும் வடநாடும் தொழநின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்* விரித்ததமிழ் உரைக்கவல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்* இணைபிரியாது இருப்பர் தாமே.(2)