பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    பொன் இயல் கிண்கிணி*  சுட்டி புறங் கட்டித்* 
    தன் இயல் ஓசை*  சலன்-சலன் என்றிட*

    மின் இயல் மேகம்*  விரைந்து எதிர் வந்தாற்போல்* 
    என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  (2)


    செங்கமலப் பூவிற்*  தேன் உண்ணும் வண்டே போல்* 
    பங்கிகள் வந்து*  உன் பவளவாய் மொய்ப்ப*

    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரம் ஏந்திய* 
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
     ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சனவண்ணனே!  அச்சோ அச்சோ* 
     ஆயர் பெருமானே!  அச்சோ அச்சோ


    நாறிய சாந்தம்*  நமக்கு இறை நல்கு என்னத்*
    தேறி அவளும்*  திருவுடம்பிற் பூச*

    ஊறிய கூனினை*   உள்ளே ஒடுங்க*  அன்று_
    ஏற உருவினாய்!  அச்சோ அச்சோ* 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  


    கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி*
    எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*

    சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை*
    அழல விழித்தானே!  அச்சோ அச்சோ*
    ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ


    போர் ஒக்கப் பண்ணி*   இப் பூமிப்பொறை தீர்ப்பான்* 
    தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 

    கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
     ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ 


    மிக்க பெரும்புகழ்*  மாவலி வேள்வியிற்*
    தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 

    சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
    சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
     சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ


    என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
    முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

    மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
    மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
     வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  


    கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
    முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 

    இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
    மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
     மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ 


    துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
    மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  

    பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
    அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
     அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ      


    நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
    அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 

    மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
    நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)


    வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
    கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*

    புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
    அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  


    வருக வருக வருக இங்கே*  வாமன நம்பீ!  வருக இங்கே* 
    கரிய குழல் செய்ய வாய் முகத்து*  எம்  காகுத்த நம்பீ!  வருக இங்கே*

    அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!*  அஞ்சனவண்ணா*  அசலகத்தார்* 
    பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்*  பாவியேனுக்கு இங்கே போதராயே  


    திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு*  தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்* 
    உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்*  உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்* 

    அருகு இருந்தார் தம்மை அநியாயம்  செய்வதுதான்*  வழக்கோ? அசோதாய்!* 
    வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்*  வாழ ஒட்டான் மதுசூதனனே


    கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
    தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 

    உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
    கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே


    பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
    மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 

    சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
    ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  


    போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
    ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 

    கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
    வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே


    செந்நெல் அரிசி சிறு பருப்புச்*  செய்த அக்காரம் நறுநெய் பாலால்* 
    பன்னிரண்டு திருவோணம் அட்டேன்*  பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்* 

    இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி*  எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    கேசவனே!  இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
    நேசம் இலாதார் அகத்து இருந்து*  நீ விளையாடாதே போதராயே*

    தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்*  தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
    தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்*  தாமோதரா!  இங்கே போதராயே 


    கன்னல் இலட்டுவத்தோடு சீடை*  காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு* 
    என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்*  இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்* 

    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்*  பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    சொல்லில் அரசிப் படுதி நங்காய்!*  சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்*  கையில் வளையைக் கழற்றிக்கொண்டு* 

    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற*  அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து* 
    நல்லன நாவற் பழங்கள் கொண்டு*  நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே 


    வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
    பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 

    கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
    எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 


    என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
    தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*

    வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
    எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 


    என் வில் வலி கண்டு*  போ என்று எதிர்வந்தான்* 
    தன் வில்லினோடும்*  தவத்தை எதிர்வாங்கி* 

    முன் வில் வலித்து*  முதுபெண் உயிருண்டான்* 
    தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற* 
    தாசரதி தன்மையைப் பாடிப் பற.*


    உருப்பிணி நங்கையைத்*  தேர் ஏற்றிக் கொண்டு* 
    விருப்புற்று அங்கு ஏக*  விரைந்து எதிர் வந்து* 

    செருக்கு உற்றான்*  வீரம் சிதையத்*  தலையைச்- 
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற* 
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*


    மாற்றுத்தாய் சென்று*  வனம்போகே என்றிட* 
    ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து*  எம்பிரான்! என்று அழ* 

    கூற்றுத் தாய் சொல்லக்*  கொடிய வனம் போன* 
    சீற்றம் இலாதானைப் பாடிப் பற* 
    சீதை மணாளனைப் பாடிப் பற.*


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற* 
    அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*


    முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 
    அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 

    படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*


    காளியன் பொய்கை*  கலங்கப் பாய்ந்திட்டு*  அவன்- 
    நீள்முடி ஐந்திலும்*  நின்று நடம்செய்து*

    மீள அவனுக்கு*  அருள்செய்த வித்தகன்* 
    தோள்-வலி வீரமே பாடிப் பற* 
    தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*


    தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
    நூற்றவள்*  சொற்கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 

    சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
    ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
    அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*


    மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
    ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 


    காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
    ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 

    நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
    ஆராவமுதனைப் பாடிப் பற* 
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*


    நந்தன் மதலையைக்*  காகுத்த னைநவின்று* 
    உந்தி பறந்த*  ஒளியிழை யார்கள்சொல்* 

    செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டு சித்தன்சொல்* 
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2)


    மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*

    திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
    உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)


    தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
    என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 

    மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
    என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)


    கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
    உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 

    இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
    அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
    அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 

    புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
    பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.


    ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
    நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 

    சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
    பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.


    மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
    உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 

    பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
    சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.


    குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
    இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 

    எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
    சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.


    உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
    சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*

    உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
    வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.


    தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
    மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 

    சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
    பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.


    செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
    ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 

    இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
    திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.


    கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
    தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 

    மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
    எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)