பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மாணிக்கம் கட்டி* வயிரம் இடை கட்டி*
ஆணிப் பொன்னால் செய்த* வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி உனக்குப்* பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே தாலேலோ*
வையம் அளந்தானே தாலேலோ (2)
உடையார் கனமணியோடு* ஒண் மாதுளம்பூ*
இடை விரவிக் கோத்த* எழிற் தெழ்கினோடும்*
விடை ஏறு காபாலி* ஈசன் விடுதந்தான்*
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ*
உலகம் அளந்தானே! தாலேலோ
என்தம்பிரானார்* எழிற் திருமார்வற்குச்*
சந்தம் அழகிய* தாமரைத் தாளற்கு*
இந்திரன் தானும்* எழில் உடைக் கிண்கிணி*
தந்து உவனாய் நின்றான் தாலேலோ*
தாமரைக் கண்ணனே! தாலேலோ
சங்கின் வலம்புரியும்* சேவடிக் கிண்கிணியும்*
அங்கைச் சரிவளையும்* நாணும் அரைத்தொடரும்*
அங்கண் விசும்பில்* அமரர்கள் போத்தந்தார்*
செங்கண் கருமுகிலே! தாலேலோ*
தேவகி சிங்கமே! தாலேலோ
எழில் ஆர் திருமார்வுக்கு* ஏற்கும் இவை என்று*
அழகிய ஐம்படையும்* ஆரமும் கொண்டு*
வழு இல் கொடையான்* வயிச்சிரவணன்*
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ*
தூமணி வண்ணனே தாலேலோ
ஓதக் கடலின்* ஒளிமுத்தின் ஆரமும்*
சாதிப் பவளமும்* சந்தச் சரிவளையும்*
மா தக்க என்று* வருணன் விடுதந்தான்*
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ*
சுந்தரத் தோளனே! தாலேலோ
கானார் நறுந்துழாய்* கைசெய்த கண்ணியும்*
வானார் செழுஞ்சோலைக்* கற்பகத்தின் வாசிகையும்*
தேனார் மலர்மேல்* திருமங்கை போத்தந்தாள்*
கோனே! அழேல் அழேல் தாலேலோ*
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ
கச்சொடு பொற்சுரிகை* காம்பு கனகவளை*
உச்சி மணிச்சுட்டி* ஒண்தாள் நிரைப் பொற்பூ*
அச்சுதனுக்கு என்று* அவனியாள் போத்தந்தாள்*
நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
நாராயணா! அழேல் தாலேலோ
மெய் திமிரும் நானப்* பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங்கண்ணுக்கு* அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* கொண்டு உவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ*
அரங்கத்து அணையானே! தாலேலோ
வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லை இடர்தானே (2)
வெண்ணெய் அளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணென இவ் இரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ணல் அரிய பிரானே!* நாரணா! நீராட வாராய் (2)
கன்றுகள் ஓடச் செவியிற்* கட்டெறும்பு பிடித்து இட்டால்*
தென்றிக் கெடும் ஆகில்* வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
நின்ற மராமரம் சாய்த்தாய்!* நீ பிறந்த திருவோணம்*
இன்று நீ நீராட வேண்டும்* எம்பிரான்! ஓடாதே வாராய்
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு* பின்னையும் நில்லாது என்நெஞ்சம்*
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி* அழைக்கவும் நான் முலை தந்தேன்*
காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்*
வாய்த்த புகழ் மணிவண்ணா!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கஞ்சன் புணர்ப்பினில் வந்த* கடிய சகடம் உதைத்து*
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச* வாய் முலை வைத்த பிரானே!*
மஞ்சளும் செங்கழுநீரின்* வாசிகையும் நறுஞ்சாந்தும்*
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்* அழகனே! நீராட வாராய்
அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலிற் கலந்து*
சொப்பட நான் சுட்டு வைத்தேன்* தின்னல் உறுதியேல் நம்பி!*
செப்பு இள மென்முலையார்கள்* சிறுபுறம் பேசிச் சிரிப்பர்*
சொப்பட நீராட வேண்டும்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
எண்ணெய்க் குடத்தை உருட்டி* இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்*
கண்ணைப் புரட்டி விழித்துக்* கழகண்டு செய்யும் பிரானே!*
உண்ணக் கனிகள் தருவன்* ஒலிகடல் ஓதநீர் போலே*
வண்ணம் அழகிய நம்பீ!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கறந்த நற்பாலும் தயிரும்* கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*
பிறந்ததுவே முதலாகப்* பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்* என்பதனால் பிறர் முன்னே*
மறந்தும் உரையாட மாட்டேன்* மஞ்சனம் ஆட நீ வாராய்
கன்றினை வால் ஓலை கட்டி* கனிகள் உதிர எறிந்து*
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்* பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்*
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!* நீ பிறந்த திரு நன்னாள்*
நன்று நீ நீராட வேண்டும்* நாரணா! ஓடாதே வாராய்
பூணித் தொழுவினிற் புக்குப்* புழுதி அளைந்த பொன்-மேனி*
காணப் பெரிதும் உகப்பன்* ஆகிலும் கண்டார் பழிப்பர்*
நாண் இத்தனையும் இலாதாய்!* நப்பின்னை காணிற் சிரிக்கும்*
மாணிக்கமே! என்மணியே!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கார் மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*
வார் மலி கொங்கை யசோதை* மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
சீர் மலி செந்தமிழ் வல்லார்* தீவினை யாதும் இலரே (2)
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்* தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி*
குழல்களும் கீதமும் ஆகி* எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி* மங்கைமார் சாலக வாசல் பற்றி*
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்* உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு* வசை அறத் திருவரை விரித்து உடுத்து*
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி* பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே*
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்* எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*
சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்* மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட*
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி* ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்* மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்* அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்* கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்*
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு* கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு*
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்* கண்டறியேன் ஏடி! வந்து காணாய்*
ஒன்றும்நில்லா வளை கழன்று* துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.*
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்* சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே* பாடவும் ஆடக் கண்டேன்* அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்* மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்*
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்* கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்* திருத்திய கோறம்பும் திருக்குழலும்*
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்* வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை* அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்*
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்* தன் திருமேனிநின்று ஒளி திகழ*
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து* பல் ஆயர் குழாம் நடுவே*
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்* குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு-
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*
சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்* திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்*
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை* அழகிய நேத்திரத்தால் அணிந்து*
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை* எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன*
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்* துகிலொடு சரிவளை கழல்கின்றதே.
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து* மல்லிகை வனமாலை மௌவல் மாலை*
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்* தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி*
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை* அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.*
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ* மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு* இளஆய்க் கன்னிமார் காமுற்ற-
வண்ணம்* வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
நாவகாரியம்சொல்இலாதவர்* நாள்தொறும்விருந்துஓம்புவார்*
தேவகாரியம்செய்து* வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
மூவர்காரியமும்திருத்தும்* முதல்வனைச்சிந்தியாத* அப்-
பாவகாரிகளைப்படைத்தவன்* எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)
குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்* குருக்களுக்குஅனுகூலராய்*
செற்றம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*
துற்றிஏழ்உலகுஉண்ட* தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்*
பெற்றதாயர்வயிற்றினைப்* பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி* நிழல்எழும்-
திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த்* திருமாலவன்திருநாமங்கள்*
எண்ணக்கண்டவிரல்களால்* இறைப்போதும்எண்ணகிலாதுபோய்*
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்* கவளம்உந்துகின்றார்களே.
உரகமெல்அணையான்கையில்* உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*
நிரைகணம்பரந்துஏறும்* செங்கமலவயற் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாம்கொலோ!
ஆமையின்முதுகத் திடைக்குதிகொண்டு* தூமலர்சாடிப்போய்த்*
தீமைசெய்து இளவாளைகள்* விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*
நேமிசேர்தடங்கையினானை* நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை*
பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.
பூதம்ஐந்தொடு வேள்விஐந்து* புலன்கள்ஐந்துபொறிகளால்*
ஏதம்ஒன்றும்இலாத* வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
நாதனை நரசிங்கனை* நவின்றுஏத்துவார்கள்உழக்கிய*
பாததூளிபடுதலால்* இவ்உலகம்பாக்கியம்செய்ததே.
குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று* கூடிஆடிவிழாச்செய்து*
திருந்துநான்மறையோர்* இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*
கருந்தடமுகில்வண்ணனைக்* கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*
இருந்தஊரில்இருக்கும்மானிடர்* எத்தவங்கள்செய்தார்கொலோ!
நளிர்ந்தசீலன்நயாசலன்* அபிமானதுங்கனை* நாள்தொறும்-
தெளிந்தசெல்வனைச்* சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*
குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்* குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்*
விளைந்ததானியமும் இராக்கதர்* மீதுகொள்ளகிலார்களே.
கொம்பின்ஆர்பொழில்வாய்க்* குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
செம்பொன்ஆர்மதில்சூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
நம்பனைநரசிங்கனை* நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தனசின்னங்கள்* இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே .
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*
கேசவா! புருடோத்தமா!* கிளர்சோதியாய்! குறளா! என்று*
பேசுவார்அடியார்கள்* எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
சீதநீர்புடைசூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
ஆதியான்அடியாரையும்* அடிமையின்றித்திரிவாரையும்*
கோதில்பட்டர்பிரான்* குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*
ஏதம்இன்றிஉரைப்பவர்* இருடீகேசனுக்குஆளரே (2)
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)
பறவையேறு பரமபுருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளீஇவேகின்றதால்*
அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடைய நாயகனே!*
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில் ஆர்பெறுவார்?
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள்பாய்ந்தனவே.
கடல்கடைந்து அமுதம்கொண்டு * கலசத்தைநிறைத்தாற்போல்*
உடலுருகிவாய்திறந்து* மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்*
கொடுமை செய்யும்கூற்றமும்* என்கோலாடிகுறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழவுரைத்தாற்போல்*
உன்னைக்கொண்டு என்நாவகம்பால்* மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*
என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க்காவலனே!
உன்னுடைய விக்கிரமம்* ஒன்றோழியாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*
மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட* இராமநம்பீ!*
என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே?
பருப்பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே*
உருப்பொலிந்தநாவினேனை* உனக்கு உரித்தாக்கினையே. (2)
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து* என்-
மனந்தனுள்ளே வந்துவைகி* வாழச்செய்தாய்எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்* நேமி நெடியவனே!
பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல* மாயமணாளநம்பீ!*
தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*
உனக்கிடமாய்யிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே.
தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள்துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகைகொண்டனையே. (2)
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)