பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மாணிக்கம் கட்டி*  வயிரம் இடை கட்டி* 
    ஆணிப் பொன்னால் செய்த*  வண்ணச் சிறுத்தொட்டில்*

    பேணி உனக்குப்*  பிரமன் விடுதந்தான்* 
    மாணிக் குறளனே தாலேலோ* 
    வையம் அளந்தானே தாலேலோ (2)


    உடையார் கனமணியோடு*  ஒண் மாதுளம்பூ* 
    இடை விரவிக் கோத்த*  எழிற் தெழ்கினோடும்*

    விடை ஏறு காபாலி*  ஈசன் விடுதந்தான்* 
    உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
    உலகம் அளந்தானே! தாலேலோ


    என்தம்பிரானார்*  எழிற் திருமார்வற்குச்*
    சந்தம் அழகிய*  தாமரைத் தாளற்கு*

    இந்திரன் தானும்*  எழில் உடைக் கிண்கிணி* 
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ* 
    தாமரைக் கண்ணனே! தாலேலோ


    சங்கின் வலம்புரியும்*  சேவடிக் கிண்கிணியும்* 
    அங்கைச் சரிவளையும்*  நாணும் அரைத்தொடரும்*

    அங்கண் விசும்பில்*  அமரர்கள் போத்தந்தார்* 
    செங்கண் கருமுகிலே! தாலேலோ* 
     தேவகி சிங்கமே! தாலேலோ   


    எழில் ஆர் திருமார்வுக்கு*  ஏற்கும் இவை என்று*
    அழகிய ஐம்படையும்*  ஆரமும் கொண்டு*

    வழு இல் கொடையான்*  வயிச்சிரவணன்* 
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ* 
    தூமணி வண்ணனே தாலேலோ


    ஓதக் கடலின்*  ஒளிமுத்தின் ஆரமும்* 
    சாதிப் பவளமும்*  சந்தச் சரிவளையும்*

    மா தக்க என்று*  வருணன் விடுதந்தான்* 
    சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
    சுந்தரத் தோளனே! தாலேலோ


    கானார் நறுந்துழாய்*  கைசெய்த கண்ணியும்* 
    வானார் செழுஞ்சோலைக்*  கற்பகத்தின் வாசிகையும்*

    தேனார் மலர்மேல்*  திருமங்கை போத்தந்தாள்* 
    கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
     குடந்தைக் கிடந்தானே! தாலேலோ


    கச்சொடு பொற்சுரிகை*  காம்பு கனகவளை*
    உச்சி மணிச்சுட்டி*  ஒண்தாள் நிரைப் பொற்பூ*

    அச்சுதனுக்கு என்று*  அவனியாள் போத்தந்தாள்*
    நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
    நாராயணா! அழேல் தாலேலோ


    மெய் திமிரும் நானப்*  பொடியொடு மஞ்சளும்*
    செய்ய தடங்கண்ணுக்கு*  அஞ்சனமும் சிந்துரமும்*

    வெய்ய கலைப்பாகி*  கொண்டு உவளாய் நின்றாள்*
    ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
     அரங்கத்து அணையானே! தாலேலோ


    வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
    அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*

    செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
    எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)


    வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
    திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*

    எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
    நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)


    கன்றுகள் ஓடச் செவியிற்*  கட்டெறும்பு பிடித்து இட்டால்* 
    தென்றிக் கெடும் ஆகில்*  வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*

    நின்ற மராமரம் சாய்த்தாய்!*  நீ பிறந்த திருவோணம்* 
    இன்று நீ நீராட வேண்டும்*  எம்பிரான்! ஓடாதே வாராய்


    பேய்ச்சி முலை உண்ணக் கண்டு*  பின்னையும் நில்லாது என்நெஞ்சம்* 
    ஆய்ச்சியர் எல்லாரும் கூடி*  அழைக்கவும் நான் முலை தந்தேன்*

    காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்* 
    வாய்த்த புகழ் மணிவண்ணா!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கஞ்சன் புணர்ப்பினில் வந்த*  கடிய சகடம் உதைத்து* 
    வஞ்சகப் பேய்மகள் துஞ்ச*  வாய் முலை வைத்த பிரானே!*

    மஞ்சளும் செங்கழுநீரின்*  வாசிகையும் நறுஞ்சாந்தும்* 
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன்*  அழகனே! நீராட வாராய்


    அப்பம் கலந்த சிற்றுண்டி*  அக்காரம் பாலிற் கலந்து* 
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்*  தின்னல் உறுதியேல் நம்பி!*

    செப்பு இள மென்முலையார்கள்*  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்* 
    சொப்பட நீராட வேண்டும்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    எண்ணெய்க் குடத்தை உருட்டி*  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்* 
    கண்ணைப் புரட்டி விழித்துக்*  கழகண்டு செய்யும் பிரானே!*

    உண்ணக் கனிகள் தருவன்*  ஒலிகடல் ஓதநீர் போலே* 
    வண்ணம் அழகிய நம்பீ!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கறந்த நற்பாலும் தயிரும்*  கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* 
    பிறந்ததுவே முதலாகப்*  பெற்றறியேன் எம்பிரானே!*

    சிறந்த நற்றாய் அலர் தூற்றும்*  என்பதனால் பிறர் முன்னே* 
    மறந்தும் உரையாட மாட்டேன்*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கன்றினை வால் ஓலை கட்டி*  கனிகள் உதிர எறிந்து* 
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்*  பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்* 

    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!*  நீ பிறந்த திரு நன்னாள்* 
    நன்று நீ நீராட வேண்டும்*  நாரணா! ஓடாதே வாராய்


    பூணித் தொழுவினிற் புக்குப்*  புழுதி அளைந்த பொன்-மேனி* 
    காணப் பெரிதும் உகப்பன்*  ஆகிலும் கண்டார் பழிப்பர்*

    நாண் இத்தனையும் இலாதாய்!*  நப்பின்னை காணிற் சிரிக்கும்* 
    மாணிக்கமே! என்மணியே!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
    வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*

    பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)


    தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
    குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 

    மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
    நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)


    வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு*  வசை அறத் திருவரை விரித்து உடுத்து* 
    பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி*  பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே* 

    முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    எல்லியம் போதாகப் பிள்ளை வரும்*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*


    சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்*  மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட* 
    ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி*  ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*

    வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*  மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்* 
    அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்*  அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*


    குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்*  கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்* 
    கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு*  கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு* 

    என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*  கண்டறியேன் ஏடி! வந்து காணாய்* 
    ஒன்றும்நில்லா வளை கழன்று*  துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.* 


    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 

    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*


    சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்*  திருத்திய கோறம்பும் திருக்குழலும்* 
    அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்*  வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*

    அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை*  அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்* 
    பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*


    சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்*  தன் திருமேனிநின்று ஒளி திகழ* 
    நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 

    கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*  குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு- 
    ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*


    சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்*  திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்* 
    அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை*  அழகிய நேத்திரத்தால் அணிந்து* 

    இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன* 
    சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்*  துகிலொடு சரிவளை கழல்கின்றதே.


    வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து*  மல்லிகை வனமாலை மௌவல் மாலை* 
    சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்*  தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி* 

    அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
    விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.* 


    விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
    கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 

    வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
    பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  


    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)


    குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
    செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

    துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
    பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.


    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.


    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    


    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   


    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.


    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  


    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.


    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 


    காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
    தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

    கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
    பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.


    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 

    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)


    சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
    தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 

    என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
    நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)


    பறவையேறு பரமபுருடா!*  நீஎன்னைக் கைக்கொண்டபின்* 
    பிறவியென்னும் கடலும்வற்றிப்*  பெரும்பதம் ஆகின்றதால்* 

    இறவு செய்யும் பாவக்காடு*  தீக்கொளீஇவேகின்றதால்* 
    அறிவையென்னும் அமுதவாறு*  தலைப்பற்றி வாய்க்கொண்டதே.


    எம்மனா! என்குலதெய்வமே!*  என்னுடைய நாயகனே!* 
    நின்னுளேனாய்ப் பெற்றநன்மை*  இவ்வுலகினில் ஆர்பெறுவார்? 

    நம்மன்போலே வீழ்த்தமுக்கும்*  நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
    சும்மெனாதே கைவிட்டோடித்*  தூறுகள்பாய்ந்தனவே.


    கடல்கடைந்து அமுதம்கொண்டு *  கலசத்தைநிறைத்தாற்போல்* 
    உடலுருகிவாய்திறந்து*  மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்* 

    கொடுமை செய்யும்கூற்றமும்*  என்கோலாடிகுறுகப்பெறா* 
    தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!


    பொன்னைக்கொண்டு உரைகல்மீதே*  நிறமெழவுரைத்தாற்போல்* 
    உன்னைக்கொண்டு என்நாவகம்பால்*  மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*

    உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்*  என்னையும்உன்னிலிட்டேன்* 
    என்னப்பா! என்னிருடீகேசா!*  என்னுயிர்க்காவலனே!


    உன்னுடைய விக்கிரமம்*  ஒன்றோழியாமல் எல்லாம்* 
    என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்* 

    மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட*  இராமநம்பீ!* 
    என்னிடைவந்து எம்பெருமான்!*  இனியெங்குப்போகின்றதே? 


    பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
    திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 

    மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
    உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)


    அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து*  என்- 
    மனந்தனுள்ளே வந்துவைகி*  வாழச்செய்தாய்எம்பிரான்!* 

    நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்*  கண்கள் அசும்பொழுக* 
    நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்*  நேமி நெடியவனே!


    பனிக்கடலில் பள்ளிகோளைப்*  பழகவிட்டு ஓடிவந்துஎன்- 
    மனக்கடலில் வாழவல்ல*  மாயமணாளநம்பீ!*

    தனிக்கடலே!  தனிச்சுடரே!*  தனியுலகே என்றென்று* 
    உனக்கிடமாய்யிருக்க*  என்னை உனக்கு உரித்தாக்கினையே. 


    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*

    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)


    வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
    கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 

    ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
    சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)