பிரபந்த தனியன்கள்
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.
பாசுரங்கள்
மண்ணுலகம் ஆளேனே* வானவர்க்கும் வானவனாய்,*
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,* - நண்ணித்-
திருமாலை* செங்கண் நெ.டியானை,* எங்கள்-
பெருமானை கைதொழுத பின்
பின்னால் அரு நரகம்* சேராமல் பேதுறுவீர்,*
முன்னால் வணங்க முயல்மினோ,* - பல் நூல்-
அளந்தானை* கார்க் கடல் சூழ் ஞாலத்தை,* எல்லாம்-
அளந்தான் அவன் சேவடி
அடியால் முன் கஞ்சனைச் செற்று,* அமரர் ஏத்தும்-
படியான்* கொடிமேல் புள் கொண்டான்,* - நெடியான் தன்-
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,* தாம் வேண்டும்-
காமமே காட்டும் கடிது.
கடிது கொடு நரகம்* பிற்காலும் செய்கை,*
கொடிது என்று அது கூடாமுன்னம்,* - வடி சங்கம்-
கொண்டானை* கூந்தல் வாய் கீண்டானை,* கொங்கை நஞ்சு-
உண்டானை* ஏத்துமினோ உற்று.
உற்று வணங்கித்* தொழுமின் உலகு ஏழும்*
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பு இடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.
என் நெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-
வல் நெஞ்சம்* கீண்ட மணி வண்ணன்,* முன்னம் சேய்-
ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகு ஏத்தும்-
ஆழியான்* அத்தியூரான்.
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணி மணியின்-
துத்தி சேர்* நாகத்தின்மேல் துயில்வான்,* - முத்தீ-
மறை ஆவான்* மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
இறை ஆவான் எங்கள் பிரான். (2)
எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ,*
செங்கண் நெடு மால் திருமார்பா,* - பொங்கு-
பட மூக்கின் ஆயிர வாய்ப்* பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,*
குடமூக்குக் கோயிலாக் கொண்டு.
கொண்டு வளர்க்க* குழவியாய்த் தான் வளர்ந்தது*
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,* - கொண்டு-
குடம் ஆடி* கோவலனாய் மேவி,* என் நெஞ்சம்-
இடமாகக் கொண்ட இறை.
இறை எம் பெருமான் அருள் என்று* இமையோர்-
முறை நின்று* மொய்ம் மலர்கள் தூவ,* - அறை கழல-
சேவடியான்* செங்கண் நெடியான்,* குறள் உருவாய்-
மாவடிவின்* மண் கொண்டான் மால். (2)
மாலே நெடியோனே!* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா!* வியன் துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின் காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என் தன்-
அளவு அன்றால்* யானுடைய அன்பு. (2)