பிரபந்த தனியன்கள்
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.
பாசுரங்கள்
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்,*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,* - தமர் உள்ளும்-
மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே,*
ஏ வல்ல எந்தைக்கு இடம்.
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப,* எரி கான்று-
அடங்கார்* ஒடுங்குவித்தது ஆழி,* - விடம் காலும்-
தீ வாய் அரவு அணைமேல்* தோன்றல் திசை அளப்பான்,*
பூ ஆர் அடி நிமிர்த்த போது.
போது அறிந்து வானரங்கள்* பூஞ்சுனை புக்கு,* ஆங்கு அலர்ந்த-
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது,* உள்ளம் போதும்-
மணி வேங்கடவன்* மலர் அடிக்கே செல்ல,*
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்* ஆதி நடு அந்திவாய்,*
வாய்ந்த மலர் தூவி வைகலும்,* - ஏய்ந்த-
பிறைக் கோட்டுச் செங்கண் * கரி விடுத்த பெம்மான்*
இறைக்கு ஆட்படத் துணிந்த யான்.
யானே தவம் செய்தேன்* ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,*
யானே தவம் உடையேன் எம் பெருமான்,* - யானே-
இருந் தமிழ் நல் மாலை* இணை அடிக்கே சொன்னேன்,*
பெருந் தமிழன் நல்லேன் பெருகு.
பெருகு மத வேழம்* மாப் பிடிக்கு முன் நின்று,*
இரு கண் இள மூங்கில் வாங்கி,* - அருகு இருந்த-
தேன் கலந்து நீட்டும்* திருவேங்கடம் கண்டீர்,*
வான் கலந்த வண்ணன் வரை.
வரைச் சந்தனக் குழம்பும்* வான் கலனும் பட்டும்,*
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு*
ஆதிக்கண் நின்ற* அறிவன் அடி இணையே*
ஓதிப் பணிவது உறும் .
உறும் கண்டாய் நல் நெஞ்சே!* உத்தமன் நல் பாதம்,*
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்,* - உறும் கண்டாய்-
ஏத்திப் பணிந்து அவன் பேர்* ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்,*
சாத்தி உரைத்தல் தவம்.
தவம் செய்து* நான் முகனே பெற்றான்,* தரணி-
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்,* - சிவந்த தன்-
கை அனைத்தும்* ஆரக் கழுவினான்,* கங்கை நீர்-
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்.
பின் நின்று தாய் இரப்ப கேளான்,* பெரும் பணைத் தோள்-
முன் நின்று தான் இரப்பாள்* மொய்ம் மலராள்* - சொல் நின்ற-
தோள் நலத்தான்* நேர் இல்லாத் தோன்றல்,* அவன் அளந்த-
நீள் நிலம் தான்* அத்தனைக்கும் நேர்.
நேர்ந்தேன் அடிமை* நினைந்தேன் அது ஒண் கமலம்,*
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,* - ஆர்ந்த-
அடிக் கோலம்* கண்டவர்க்கு என்கொலோ,* முன்னைப்-
படிக் கோலம் கண்ட பகல்?
பகல் கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* - கனவில்-
மிகக் கண்டேன்* மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்*
ஊன் திகழும் நேமி* ஒளி திகழும் சேவடியான்,*
வான் திகழும் சோதி வடிவு.
வடிக் கோல வாள் நெடுங் கண்* மா மலராள்,* செவ்விப்-
படிக் கோலம்* கண்டு அகலாள் பல்நாள்,* - அடிக்கோலி-
ஞாலத்தாள் பின்னும்* நலம் புரிந்தது என்கொலோ,*
கோலத்தால் இல்லை குறை.
குறையாக வெம் சொற்கள்* கூறினேன் கூறி,*
மறை ஆங்கு என உரைத்த மாலை,* - இறையேனும்-
ஈயும்கொல் என்றே* இருந்தேன் எனைப் பகலும்,*
மாயன்கண் சென்ற வரம்.
வரம் கருதி தன்னை* வணங்காத வன்மை,*
உரம் கருதி மூர்க்கத்தவனை,* - நரம் கலந்த-
சிங்கமாய்க் கீண்ட* திருவன் அடி இணையே,*
அம் கண் மா ஞாலத்து அமுது.
அமுது என்றும் தேன் என்றும்* ஆழியான் என்றும்,*
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்,* - அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித்* தொழுதேன் சொலப்பட்ட,*
நல் மாலை ஏத்தி நவின்று.
நவின்று உரைத்த நாவலர்கள்* நாள் மலர் கொண்டு,* ஆங்கே-
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்,* - பயின்றார் தம்-
மெய்த் தவத்தால்* காண்பு அரிய மேக மணி வண்ணனை,* யான்-
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?
இன்றா அறிகின்றேன் அல்லேன்* இரு நிலத்தைச்-
சென்று ஆங்கு அளந்த திருவடியை.* - அன்று-
கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*
திருக்கோட்டி எந்தை திறம்.
திறம்பிற்று இனி அறிந்தேன்* தென் அரங்கத்து எந்தை,*
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,* - திறம்பாச்-
செடி நரகை நீக்கி* தாம் செல்வதன் முன்,* வானோர்-
கடி நகர வாசல் கதவு.
கதவி கதம் சிறந்த* கஞ்சனை முன் காய்ந்து,*
அதவி போர் யானை ஒசித்து,* - பதவியாய்ப்-
பாணியால் நீர் ஏற்று* பண்டு ஒருகால் மாவலியை,*
மாணியாய்க் கொண்டிலையே மண்.
மண்ணுலகம் ஆளேனே* வானவர்க்கும் வானவனாய்,*
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,* - நண்ணித்-
திருமாலை* செங்கண் நெ.டியானை,* எங்கள்-
பெருமானை கைதொழுத பின்
பின்னால் அரு நரகம்* சேராமல் பேதுறுவீர்,*
முன்னால் வணங்க முயல்மினோ,* - பல் நூல்-
அளந்தானை* கார்க் கடல் சூழ் ஞாலத்தை,* எல்லாம்-
அளந்தான் அவன் சேவடி
அடியால் முன் கஞ்சனைச் செற்று,* அமரர் ஏத்தும்-
படியான்* கொடிமேல் புள் கொண்டான்,* - நெடியான் தன்-
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,* தாம் வேண்டும்-
காமமே காட்டும் கடிது.
கடிது கொடு நரகம்* பிற்காலும் செய்கை,*
கொடிது என்று அது கூடாமுன்னம்,* - வடி சங்கம்-
கொண்டானை* கூந்தல் வாய் கீண்டானை,* கொங்கை நஞ்சு-
உண்டானை* ஏத்துமினோ உற்று.
உற்று வணங்கித்* தொழுமின் உலகு ஏழும்*
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பு இடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.
என் நெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-
வல் நெஞ்சம்* கீண்ட மணி வண்ணன்,* முன்னம் சேய்-
ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகு ஏத்தும்-
ஆழியான்* அத்தியூரான்.
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணி மணியின்-
துத்தி சேர்* நாகத்தின்மேல் துயில்வான்,* - முத்தீ-
மறை ஆவான்* மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
இறை ஆவான் எங்கள் பிரான். (2)
எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ,*
செங்கண் நெடு மால் திருமார்பா,* - பொங்கு-
பட மூக்கின் ஆயிர வாய்ப்* பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,*
குடமூக்குக் கோயிலாக் கொண்டு.
கொண்டு வளர்க்க* குழவியாய்த் தான் வளர்ந்தது*
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,* - கொண்டு-
குடம் ஆடி* கோவலனாய் மேவி,* என் நெஞ்சம்-
இடமாகக் கொண்ட இறை.
இறை எம் பெருமான் அருள் என்று* இமையோர்-
முறை நின்று* மொய்ம் மலர்கள் தூவ,* - அறை கழல-
சேவடியான்* செங்கண் நெடியான்,* குறள் உருவாய்-
மாவடிவின்* மண் கொண்டான் மால். (2)
மாலே நெடியோனே!* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா!* வியன் துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின் காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என் தன்-
அளவு அன்றால்* யானுடைய அன்பு. (2)