பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
    நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*

    வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
    நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 


    மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
    நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*

    தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    


    கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
    என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*

    குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
    அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
    நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 

    நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
    அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
    துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*

    செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
    புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 

    விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
    அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            


    தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
    பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*

    கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
    அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
    ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 

    கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
    ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
    மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 

    கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
    அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
    விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*

    திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
    பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 


    சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
    நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*

    பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
    மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     


    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          


    உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
    வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
    பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   


    அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
    எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 


    தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
    முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
    பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.


    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   


    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            


    குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
    மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
    படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     


    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 


    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 

    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        


    சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
    நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*

    சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
    வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)


    திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
    இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 

    எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
    மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*

    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
    தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
    மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       


    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,

    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
    திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
    வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*  வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்* 
    உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை*  உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*

    இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்*  ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்* 
    வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! 


    ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
    கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
    மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   


    வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
    எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
    மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*

    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)


    நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
    இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 

    எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
    நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       


    சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
    மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*

    நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
    எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்


    பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
    மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*

    உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
    அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!


    ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
    தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*

    காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
    வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             


    தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
    ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*

    தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
    கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!


    சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
    எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*

    நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
    எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!


    மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
    வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*

    காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
    நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  


    முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
    பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 

    பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
    இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!


    எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
    வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*

    சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
    இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     


    ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*

    சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
    ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)


    கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
    பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*

    செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      


    வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
    அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*

    திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
    ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*

    பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
    கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.


    ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
    ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 

    தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
    வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.


    வக்கரன் வாய் முன் கீண்ட*  மாயனே என்று வானோர் 
    புக்கு*  அரண் தந்தருளாய் என்ன*  பொன் ஆகத்தானை* 

    நக்கு அரி உருவம் ஆகி*  நகம் கிளர்ந்து இடந்து உகந்த* 
    சக்கரச் செல்வன் தென்பேர்த்*  தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.


    விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
    இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*

    நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
    மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.


    வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
    கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*

    திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
    வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.


    அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
    கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 

    செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
    எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
    மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 

    சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
    சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.


    வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
    கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*

    திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
    கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       


    பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
    மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*

    முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
    இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 


    கழி ஆரும் கன சங்கம்*  கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
    வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*

    பழி ஆரும் விறல் அரக்கன்*  பரு முடிகள்அவை சிதற* 
    அழல் ஆரும் சரம் துரந்தான்*  அடிஇணையே அடை நெஞ்சே!     


    சுளை கொண்ட பலங்கனிகள்*  தேன் பாய*  கதலிகளின் 
    திளை கொண்ட பழம் கெழுமித்*  திகழ் சோலைத் திருநறையூர்*

    வளை கொண்ட வண்ணத்தன்*  பின் தோன்றல்*  மூவுலகோடு 
    அளை வெண்ணெய் உண்டான் தன்*  அடிஇணையே அடை நெஞ்சே!


    துன்று ஒளித் துகில் படலம்*  துன்னி எங்கும் மாளிகைமேல்* 
    நின்று ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்*

    மன்று ஆரக் குடம் ஆடி*  வரை எடுத்து மழை தடுத்த* 
    குன்று ஆரும் திரள் தோளன்*  குரை கழலே அடை நெஞ்சே!    


    அகில் குறடும் சந்தனமும்*  அம் பொன்னும் அணி முத்தும்* 
    மிகக் கொணர்ந்து திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்*

    பகல் கரந்த சுடர் ஆழிப்*  படையான் இவ் உலகு ஏழும்* 
    புகக் கரந்த திரு வயிற்றன்*  பொன்அடியே அடை நெஞ்சே !            


    பொன் முத்தும் அரி உகிரும்*  புழைக் கை மா கரிக் கோடும்* 
    மின்னத் தண் திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்* 

    மின் ஒத்த நுண் மருங்குல்*  மெல்இயலைத்*  திரு மார்வில் 
    மன்ன தான் வைத்து உகந்தான்*  மலர் அடியே அடை நெஞ்சே!    


    சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்*  செங் கமலத்து இடை இடையில்*
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்*  பயன் விளைக்கும் திருநறையூர்*

    கார் தழைத்த திரு உருவன்*  கண்ணபிரான் விண்ணவர்கோன்* 
    தார் தழைத்த துழாய் முடியன்*  தளிர் அடியே அடை நெஞ்சே!      


    குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
    தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*

    மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
    நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         


    மறை ஆரும் பெரு வேள்விக்*  கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்* 
    நிறை ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்* 

    பிறை ஆரும் சடையானும்*  பிரமனும் முன் தொழுது ஏத்த* 
    இறை ஆகி நின்றான் தன்*  இணைஅடியே அடை நெஞ்சே!         


    திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
    வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*

    பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
    விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      


    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)


    தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
    மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

    திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே


    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 


    வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
    தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

    தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
    ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*


    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  


    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 


    சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
    மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

    தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
    தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)


    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 

    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 


    கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
    பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

    திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)


    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)


    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 

    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)


    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*

    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 


    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*

    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    


    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*

    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)


    வந்தாய் என்மனத்தே*  வந்துநீ புகுந்தபின்னை,* 
    எந்தாய்! போய்அறியாய்*  இதுவே அமையாதோ*

    கொந்துஆர் பைம்பொழில்சூழ்*  குடந்தைக் கிடந்துஉகந்த-
    மைந்தா,*  உன்னைஎன்றும்*  மறவாமை பெற்றேனே. 


    எஞ்சா வெம்நரகத்து*  அழுந்தி நடுங்குகின்றேற்கு*
    அஞ்சேல்என்று அடியேனை*  ஆட்கொள்ள வல்லானை*

    நெஞ்சே! நீநினையாது*  இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
    மஞ்சுஆர் மாளிகைசூழ்*  வயல்ஆலி மைந்தனையே.


    பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
    உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*

    முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
    எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!


    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*

    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.


    கண்ணார் கண்ணபுரம்*  கடிகை கடிகமழும்*
    தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*

    விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
    கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?


    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*

    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)


    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*

    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)


    புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
    முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*

    சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
    கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  


    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 

    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   


    சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
    பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*

    திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   


    தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
    வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*

    தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
    வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!


    நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
    வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*

    தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)


    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*

    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 


    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*

    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!


    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*

    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)


    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*

    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  


    புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
    ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*

    கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
    பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)


    மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி*  மால்விடை ஏழும் அடர்த்து,*  ஆயர்-
    அன்று நடுங்க ஆநிரை காத்த*  ஆண்மை  கொலோ அறியேன் நான்,*

    நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!*  நீஇவள் தன்னை நின் கோயில்,*
    முன்றில் எழுந்த முருங்கையில் தேனா*  முன் கைவளை கவர்ந்தாயே. 


    ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி*  ஆற்றலை ஆற்றல் மிகுத்து,* 
    கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்*  கடந்தநின் கடுந்திறல் தானோ,*

    நேர்இழை மாதை நித்திலத் தொத்தை*   நெடுங் கடல் அமுதுஅனை யாளை,* 
    ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே.    


    மல்கிய தோளும் மான்உரி அதளும்*  உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
    நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த*  கரதலத்து அமைதியின் கருத்தோ?*

    அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,* 
    சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்*  தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே. 


    செருஅழியாத மன்னர்கள் மாள*  தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
    அருவழி வானம் அதர்படக் கண்ட*  ஆண்மைகொலோ? அறியேன் நான்,*

    திருமொழி எங்கள் தேமலர்க் கோதை*  சீர்மையை நினைந்திலை அந்தோ,* 
    பெருவழி நாவல் கனியினும் எளியள்*  இவள்எனப் பேசுகின்றாயே


    அரக்கியர் ஆகம் புல்என வில்லால்*  அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
    செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற*  சேவகமோ? செய்ததுஇன்று*

    முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்*  கொண்டு முன்னே நின்று போகாய்,* 
    எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்*   என்செய்வது? எந்தை பிரானே!  


    ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச*  அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
    பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ*  படைமழுப் பற்றிய வலியோ?*

    மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,*
    கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!*  குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!


    பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற*  வள்உகிரால் பிளந்து,*  அன்று- 
    பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த*  பெருமைகொலோ செய்தது இன்று,*

    பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை*  பெருமையை நினைந்திலை பேசில்,* 
    கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே


    நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்*  நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
    சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று*  அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*

    பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை*  பாவையைப் பாவம் செய்தேனுக்கு,* 
    ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக*  நின் மனத்து வைத்தாயே


    வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
    வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*

    தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
    பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 


    இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
    எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*

    அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
    சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.


    சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
    கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*

    வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
    ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.


    அருகல் இலாய பெரும் சீர்*  அமரர்கள் ஆதி முதல்வன்,* 
    கருகிய நீல நன் மேனி வண்ணன்*  செந்தாமரைக் கண்ணன்,* 

    பொரு சிறைப் புள் உவந்து ஏறும்*  பூமகளார் தனிக் கேள்வன்,* 
    ஒருகதியின் சுவை தந்திட்டு*  ஒழிவு இலன் என்னோடு உடனே


    நாவினுள் நின்று மலரும்*  ஞானக் கலைகளுக்கு எல்லாம்,* 
    ஆவியும் ஆக்கையும் தானே*  அழிப்போடு அளிப்பவன் தானே,*

    பூ இயல் நால் தடம் தோளன்*  பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,* 
    காவி நன் மேனிக் கமலக்*  கண்ணன் என் கண்ணின் உளானே.


    கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்*  காண்பன் அவன் கண்களாலே,* 
    அமலங்கள் ஆக விழிக்கும்*  ஐம்புலனும் அவன் மூர்த்தி,*

    கமலத்து அயன் நம்பி தன்னைக்*  கண்ணுதலானொடும் தோற்றி* 
    அமலத் தெய்வத்தொடு உலகம்*  ஆக்கி என் நெற்றி உளானே.


    நெற்றியுள் நின்று என்னை ஆளும்*  நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,* 
    கற்றைத் துழாய் முடிக் கோலக்*  கண்ண பிரானைத் தொழுவார்,* 

    ஒற்றைப் பிறை அணிந்தானும்*  நான்முகனும் இந்திரனும்,* 
    மற்றை அமரரும் எல்லாம் வந்து*  எனது உச்சியுளானே.


    உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
    இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*

    இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே.