கோவில் திருவாய்மொழி



    கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
    பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

    நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 



      நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
      மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

      தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
      பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*



        திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
        கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

        பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
        உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*



          நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
          புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

          அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
          தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

           



            நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
            நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
            செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
            அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


              இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
              நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
              குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
              என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


                கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
                பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*
                எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
                ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


                  அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*
                  அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*
                  அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 
                  அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


                    மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*
                    நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*
                    தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 
                    புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


                      பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
                      செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
                      குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
                      முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


                        அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
                        அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
                        அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
                        நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)