2 எண்ணிக்கை பாடல் பாட
ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,*
ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை-
இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்-
இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை-
ஒன்றிய ஈர்எயிற்று அழல்வாய் வாளியில்-
அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,*
முப்புரி நூலொடு மான்உரிஇலங்கு-
மார்வினில்,* இருபிறப்பு ஒருமாண்ஆகி,*
ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை,*
நால்திசை நடுங்க அம்சிறைப் பறவை-
ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி-
ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ-
நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
அகத்தினுள் செறித்து,* நான்குஉடன் அடக்கி-
முக்குணத்து இரண்டுஅவை அகற்றி,* ஒன்றினில்-
ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்புஅறுப்போர்-
அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்-
ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்-
அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,*
ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,*
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,*
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*
அறுபதம்முரலும் கூந்தல் காரணம்*
ஏழ்விடை அடங்கச் செற்றனை,* அறுவகைச்-
சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
ஓதியை ஆகத்து இருத்தினை,* அறம்முதல்-
நான்கு அவைஆய் மூர்த்தி மூன்றாய்*
இருவகைப் பயன்ஆய் ஒன்றுஆய் விரிந்து-
நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை-
வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்-
திகழ்வனம் உடுத்த,* கற்போர் புரிசைக் -
கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்-
இளம்பிறை துவக்கும்,* செல்வம் மல்கு தென்-
திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்-
வணங்க,* ஆடுஅரவுஅமளியில் அறிதுயில்-
அமர்ந்த பரம,* நின் அடிஇணை பணிவன்-
வரும்இடர் அகல மாற்றோ வினையே (2)