திவ்யதேச பாசுரங்கள்
-
2315.
திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம். அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம். “கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.
அன்று இவ்உலகம்* அளந்த அசைவேகொல்,*
நின்றுஇருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
கிடந்தானை* கேடுஇல்சீரானை,* முன் கஞ்சைக்
கடந்தானை* நெஞ்சமே! காண்.