விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்*  இணையடிப்போது- 
    அடங்கும் இதயத்து இராமானுசன்,*  அம்பொற் பாதமென்றும்-
    கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யா* 
    திடங்கொண்ட ஞானியர்க்கே*  அடியேன் அன்பு செய்வதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இடம் கொண்ட கீர்த்தி - பூமியெங்கும் வியாபித்த கீர்த்தியையுடையரான;
மழிசைக்கு இறைவன் - திருமழிசைப் பிரானாடைய;
இணை அடி போது - உபயபாதாரவிந்தங்கள்;
அடங்கும் - குடிகொண்டிருக்கப் பெற்ற;
இதயத்து - திருவுள்ளத்தை யுடையரான;
 

விளக்க உரை

உரை:1

உலகமெங்கும் பரவின புகழையுடையரான திருமழிசைப்பிரானாடைய பாதாரவிந்தங்கள் அடங்கியிருக்கப்பெற்ற திருவுள்ளத்தை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை ஸ்வரூப ப்ராப்தத்வ புத்தியோடே அநவரதம் ஆச்ரயிக்கின்ற மஹாபாகவதர்கட்குத் தவிர வேறொருவர்க்கும் விதேயப்படாத மாஞானிகளுக்கே அடியேன் அன்பனாயிருப்பன் என்கிறார் இப்பாட்டால், ‘ஸ்ரீராமாநுஜ பக்த பக்தன் அடியேன், என்றாராயிற்று. கடங் கொண்டு - கடமையாகக்கொண்டு

உரை:2

"இந்தப் பூமி எங்கும் தனது புகழ் பரவி, உயர்ந்த குணங்களுடன் உள்ளவர் திருமழிசை ஆழ்வார் ஆவார். அவருடைய இணைந்த தாமரை போன்ற அழகான திருவடிகள் என்றும் எம்பெருமானாரின் நெஞ்சத்தில் உள்ளன. இப்படிப்பட்ட உடையவரின் அழகான, அழகிற்கே இருப்பிடமான திருவடிகளை அனைத்துக் காலங்களிலும், தாங்கள் இந்த மனிதப்பிறவி எடுத்தது இந்தத் திருவடிகளை அடைவதற்கே என்றபடி சிந்தித்து சிலர் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளின் தொடர்பை மட்டுமே உயர்வாகக் கொண்டு, அதனையே தங்கள் மனதில் வைத்தபடி உள்ள ஞானிகள் உள்ளனர். அந்த ஞானிகள் மற்ற விஷயங்கள் மீது ஈடுபாடு இல்லாமல், எம்பெருமானார் விஷயத்தில் மட்டுமே ஈடுபாட்டுடன் உள்ளனர். அவர்களுக்கு அல்லவோ நான் அன்புடன் தொண்டு செய்வேன்?

இவ்வாறு எம்பெருமானார் விஷயத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் எம்பெருமானைக் கூட இரண்டாவது பக்ஷமாகக் கருதுவதும் உண்டு. இதற்கு இரண்டு செயல்கள் காண்போம். ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்தின் அருகே நம்பெருமாள் திருவீதி உலா வந்தான். அப்போது அனைவரும் அவனை வணங்கியபடி நிற்க, இராமாநுசரின் சீடரான வடுகநம்பி என்பவர் மட்டும் வரவில்லை. ஏன் என்று காரணம் வினவ அவர், “நான் அங்கு வந்தால் இங்கு உமக்காக (இராமாநுசர்) அடுப்பில் காய்ச்சிக் கொண்டிருந்த பால பொங்கி விடுமே”, என்றார்.

இது போன்று , கிருமிகண்டன் என்ற அரசனின் நிபந்தனையால் ஸ்ரீரங்கத்தை விட்டு எம்பெருமானார் மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம் சென்று விடுகிறார். அப்போது அவருடன் இருந்த கூரத்தாழ்வானுக்கு பெரியபெருமாளை க் காணவேண்டும் என்ற ஆசை மேலிட, ஸ்ரீரங்கம் வந்தார். நகரக்காப்பாளர்கள் அவரிடம், “இராமானுசருடன் தொடர்புடையவர்கள் உள்ளே புக அனுமதியில்லை”, என்றனர். உடனே அங்கிருந்தவர்கள், “இவர் ஞானம் உடையவர், இவரை உள்ளே விடுங்கள்”, என்று கூறினார்கள். இதனைக் கேட்ட கூரத்தாழ்வான், “எம்பெருமானார் தொடர்புக்கு மீறி உள்ள ஞானமும், அதனால் ஏற்படும் பெரியபெருமாள் தரிசனமும் எனக்குத் தேவை அற்றது”, என்று கூறி பெரியபெருமாளைத் தரிசிக்காமலேயே புறப்பட்டுவிட்டார்."

English Translation

The world famous Tirumalisai Alvar's lotus feet were contained in Ramanuja's heart-space. Those who worship the devotees of Ramanajua and always praise his golden feet are my beloved master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்