விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*
    இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*
     
    எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*
    தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கம்பம் - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற;
மதம் யானை - மதங்கொண்ட யானையினது;
கழுத்து அகத்தின் மேல் இருந்து - கழுத்தின் மீது வீற்றிருந்து;
இன்பு அமரும் - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான;
செல்வமும் - ஐசுவர்யத்தையும்;

விளக்க உரை

உரை:1

செண்பகமரமாய்ப் பிறந்தால் திருமலைக்கு வருகிற மஹாப்ரபுக்கள் யாராவது இதனை விரும்பித் தம் வீட்டிற்கொண்டு போய் நாட்டக் கருதிப் பெயர்த்துக் கொண்டு போகக்கூடும். அப்படி உண்டோவெனில், ” கற்பகக்காவுகருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில், நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள், உய்த்தவன் ” என்றபடி - ஸத்யபாமைப் பிராட்டியின் விருப்பத்திற்கிணங்கிய கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த கற்பகத்தருவை ஸத்யபாமையின மாளிகைத் திரு முற்றத்திலே கொணர்ந்து நட்டானே. அவ்வாறு யாரேனுமொருவர் சண்பகமரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் வாழ்ச்சி இழந்ததாமே எனக் கருதி, அங்ஙனம் மஹாப்ரபுக்களின் விருப்பத்திற்குக் காரணமாகக் கூடாததொரு தம்பகமாய் நிற்க விரும்புகிறார் இப்பாட்டில். கம்பம் - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை. அன்றி, மதங்கொண்டதாதலால் வெளியே விட வொண்ணாதபடி கம்பத்திலேயே கட்டப்பட்டு நிற்கின்ற யானை யென்றும், அசையுமியல்பையுடைய மதயானை என்றும் பொருளாம்.

உரை:2

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.

English Translation

I do not desire to ride on the high seat of a canopied elephant, and enjoy the wealth of this kingdom. On the glorious Venkatam hill, in his temple there, I wish to stand by a pillar and do penance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்