விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்* 
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்*  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* 
    புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்*  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே* 
    பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்*  கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளின் வாய் கீண்டானை - பறவையுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை - கொடியனான இராவணனை முடித்து (அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய் - லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார் - நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்;

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் பிறந்து வளருமூரான் திருவாய்ப்பாடியிலே அவனையே பாடவேண்டியிருக்க அவனைவிட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும், அவனை மனத்துக்கினியானென்பதும் க்ருஷ்ண பக்தர்களுக்கு அஸஹ்யமாகையாலே ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது. உடனே சில பெரியார்கள் புகுந்து கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே யென்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம்பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள். புள்ளின் வாய்கீண்ட வரலாறு :- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான்மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக் கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பதாம்.

உரை:2

கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாயைப் பிளந்தவனை, பொல்லாத அரக்கனான கம்சனை கறிவேப்பிலையைக் கிள்ளுவது போல் கிள்ளிக் களைந்தவனை, அவனது புகழை எல்லாம் பாடிக் கொண்டு எல்லா பெண்பிள்ளைகளும் பாவை நோன்பு நோற்கும் களத்தில் நுழைந்துவிட்டார்கள்!
வானத்தில் விடிவெள்ளி எழுந்துவிட்டது! வியாழ கிரகம் மறைந்துவிட்டது! பறவைகளும் பேசத் தொடங்கிவிட்டன! பூவில் அலையும் வண்டினைப் போன்ற அழகான கண்கள் உடையவளே! உடலும் மனமும் நினைவுகளும் குளிர்ந்து போகும் படி நன்கு குடைந்து நீராடாமல் இன்னும் படுத்துக் கொண்டிருக்கிறாயே?! மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் அல்லவா இன்று? தனியாகச் சென்று இறைவனை வணங்கலாம் என்ற கள்ள எண்ணத்தைத் தவிர்த்து விட்டு இறையடியார்கள் எல்லோருடனும் கலந்து இறைவனை வணங்கலாம் வா!

English Translation

All the little ones have reached the place of worship singing the praise of the Lord who killed the demon Ravana and ripped the beaks of the demon bird Bakasura. The morning star has risen and the evening star has set. O Maiden with eyes that excel the lotus bud, do you still lie in bed instead of immersing yourself in the cool waters on this auspicious day? Give up your shamelessness and join us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்