விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருளும் புதல்வரும் பூமியும்*  பூங்குழலாரும் என்றே- 
    மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே!*  மற்றுளார்தரமோ- 
    இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே* 
    தெருளும் தெருள்தந்து*  இராமானுசன் செய்யும் சேமங்களே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருள் என்றும் - த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்;
புதல்வர் என்றும் - புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்;
பூமி என்றும் - க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி);
மருள் கொண்டு - அறிவு கெட்டு;
இளைக்கும் நமக்கு - வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு;

விளக்க உரை

உரை:1

எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார். நெஞ்சே! - அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ரதாரக்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்துகிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாகவரும் பாவங்களையும் தொலைத்தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்; இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும் க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக்கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று. மற்றுளார் தாமோ? என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்டக்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும் இப்படிப்பட்ட க்ஷேமங்கள் நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.

உரை:2

எனது உள்ளமே! நாம் செய்வது என்ன? மிகையான செல்வம், புத்திரர்கள், வசிப்பதற்குச் சிறந்த நிலம், மலர்கள் அலங்கரித்த மனைவி ஆகியவற்றை மட்டுமே விரும்பியபடி உள்ளோம். இவற்றையே மிகவும் உயர்ந்த பொருள்கள் என்று உணவையும் மறந்து, இளைத்து நிற்கிறோம் (இங்கு உணவு என்பது உண்ணும் உணவு, ஞானம் ஆகிய இரண்டையுமே குறிக்கும்). இதனைத் திருமங்கையாழ்வார் – தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் – என்றார் அல்லவோ? இப்படிப்பட்ட அஜ்ஞானம் மூலம் நமக்கு ஏற்படும் கொடூரமான துயரங்கள் அனைத்தையும் நீக்கி, தன்னுடைய மேன்மேலும் எல்லையற்றுப் பெருகியபடி உள்ள திருக்கல்யாண குணங்களை நமக்கு வெளிப்படுத்தியபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவர் நமக்காகச் செய்யும் ரக்ஷணங்கள் (நம்மைக் காப்பாற்றும் செயல்கள்) மற்றவர்களால் செய்யவும் இயலுமோ? அந்தக் கண்ணன் கூட – தூது செல்வது, தேர் ஓட்டுவது, கீதை உபதேசம் செய்வது – போன்ற பலவற்றையும் பாண்டவர்களுக்குகாக மட்டுமே, குறிப்பாக அவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்காக மட்டுமே செய்தான் அல்லவோ? ஆனால் எம்பெருமானார் அனைவருக்கும், அனைத்தையும் உபதேசித்தார் அன்றோ? ஆக இவர் போன்று நமக்கு அந்த மாயக்கண்ணனாலும் உதவ இயலவில்லை என்பது உண்மைதானே! இப்படி உள்ளபோது பொருள், புத்திரர்கள், மனைவி போன்றவையா நம்மைக் காக்கும் – என்று கருத்து.

English Translation

O Heart! You have exhausted yourself running after illusory wealth, children, property, and wife as sources real happiness. Ramanuja changed our life of darkness and despair and gave us the mind to understand his greatness. Is there anyone else to match his abiding grace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்