விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திறம்பேல்மின் கண்டீர்*  திருவடிதன் நாமம்* 
    மறந்தும் புரம்தொழா மாந்தர்*  இறைஞ்சியும்
    சாதுவராய்ப்*  போதுமின்கள் என்றான்*  நமனும்தன் 
    தூதுவரைக் கூவிச் செவிக்கு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூவி - அழைத்து
செவிக்கு - (அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன் - ஸர்வேச்வரனுடைய
நாமம் - திருநாமத்தை
மறந்தும் - மறந்தொழிந்தாலும்

விளக்க உரை

யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செலுத்தப் புறப்படும்போது யமன் அத்தூதர்களை யழைத்து, ரஹஸ்யங்கள் சொல்லுமாபோலே காதோடே ஒரு வார்த்தை சொன்னான், அஃதென்னென்னில், ‘ஓ தூதர்களே! நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரஞ் செலுத்த வேண்டா, அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து பரமஸாத்விகர்களாய் விலகுங்கோள்‘ என்றானாம். இதனால் பாகவதர்கட்கு யமபயப்ரஸக்தியே யில்லையென்றதாம். “அவன்தம ரெவ்வினையராகிலும் எங்கோனவன் தமரே யென்றொழிவதல்லால் – நமன் தமராலாராயப் பட்டறியார்கண்டீர் அரவணைமேற் பேராயற் காட்பட்டார்பேர்“ என்றார் பொய்கையாழ்வார், “கெடுமிடராயவெல்லாம் கேசவா வென்ன நாளுங்கொடுவினை செய்யுங் கூற்றின்தமர்களுங்குறுக கில்லார்“ என்றார் நம்மாழ்வார். “மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்னாமங்கற்ற, ஆவலிப்புடைமைகண்டாய் – நாவலிட்டுழிதாகின்றோம் நமன்றமர் தலைகள்மீதே“ என்றார் தொண்டரடிப்பொடி யாழ்வார். “எத்தியுன் சேவடி யெண்ணியிருப்பாரைப் பார்த்திருந்தங்கு நமன்றமர் பற்றாமல், சோத்தம் நாமஞ்சுதுமென்று தொடாமை நீ, காத்திபோய்க் கண்ணபுரத்துறை யம்மானே!“ என்றார் திருமங்கையாழ்வார். யமன் தூதர்க்குச் சொல்லத் தொடங்கும்போதே “திறம்பேல்மின் கண்டீர்” என்கையாலே ஒருகால் அத்தூதர் ஞாபகப் பிசகினால் பாகவதர்களிடத்தில் தம் அதிகாரத்தைச் செலுத்தினால் தனக்கு மஹத்தான அநர்த்தம் விளைந்திடுமென்கிற அச்சமுள்ளமை வெளிப்படும். கண்டீர் – முன்னிலையசை. திருவடிதன்னாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – ‘அடி‘ என்றும். ‘அடிகள்‘ என்றும் ‘திருவடி‘ என்றும் ஸ்வாமிக்கு வாசகம். ஸர்வஸ்வாமியான எம்பெருமானுடைய திருநாமத்தை..... என்றபடி. “மறந்தும் புறந்தொழா மாந்தர்“ என்னுமிந்த ஸ்ரீஸூக்தியின் போக்யத்தை ஆழ்ந்து ஆநுபவிக்கத்தக்கது. எம்பெருமானுக்கு அடிமைப் பட்டிருந்தாலும் இருக்கலாம். இல்லாமற்போனாலும் போகலாம், தேவதாந்தரங்களிடத்தில் பற்றில்லாமையே முக்கியம், ஒருத்தி தன் கணவனிடத்தில் அன்புகொள்ளாதிருக்கினு மிருக்கலாம், நாளடைவில் ஆநுகூல்ய மேற்படக்கூடும், வேறு புருஷனிடத்தில் அன்புகொண்டால் அவத்யமாகுமே, அது போலவென்க. முமுக்ஷுப்படியில் உகாரார்த்தம் விவரிக்குமிடத்து “அந்யசேஷத்வம் கழிகையே ப்ரதாநம், தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய்க்கிடுமாபோலே ஈச்வரசேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை. பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம், ‘மறந்தும் புற்தொழா மாந்தர்‘ என் கையாலே“ என்றருளிச் செய்த ஸ்ரீஸூக்திகள் இங்குக் குறிக்கொள்ளத்தக்கன.

English Translation

Even Yama the god of death called his messengers aside and whispered, "Make no mistake. The Lord's devotees may even forget his names, but they will never stoop to worship godlings. If you, "See them bow to them with courtesy and leave".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்