விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 
    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐந்து கணை - தனது) பஞ்சபாணங்களை
தெரிந்திட்டு - நன்றாக ஆராய்ந்து
ஏவலம் காட்டி - பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து
இப்படியே புகுந்து - என்மேல் நோக்கம் வைத்து
எய்திடா முன் - பிரயோகிப்பதற்கு முன்னமே

விளக்க உரை

இதுவரையிலும் கடலோசைகள் பலபல செவிப்பட்டிருந்தாலும் இப்போது செவிப்படும் கடலோசை அவைபோல்வதன்று; இதுஇன்று முடித்தே விடுமதாய்ப் பிரபலமாயிராநின்றதென்கை. ஸுக்ஜீவமஹாராஜா; ஸ்ரீராமபிரானை அண்டைகொண்டுவந்து வாலியின் மனைவாசலிலே சென்று அறை கூவினபோது அவருடைய மிடற்றோசைக்கு எப்படிப்பட்ட மிடுக்கு இருந்ததோ, அப்படிப்பட்ட மிடுக்கு இக்கடலோசைக்கு உண்டுபோலும். கடலோசை தனக்குப் பாதகாமாயிருப்பது போலவே மற்றையோர்க்கும் பாதகமாகவே யிருக்குமெனக் கருதி ‘கேண்மின்கள்’ என்கிறாள்; இக்கடலோசை உங்கள் காதில் படுகிறதில்லை போலும்; சிறிது உற்றுச் செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்; இது படுத்துகிறபாடு உங்களுக்கே தெரியவரும் என்கிறாள் போலும். இஃது ஒன்றையோ? இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் ஓசையும் வந்துஎன் உயிரை முடிக்குமளவிலே நிற்கின்றது பாரீர் என்கிறாள் ஆயன் கையாம்பல் வந்து என்னாவியளவுமணைந்து நிற்கும் என்று. ஆம்பல்-இலைக்குழல். அதற்குமேலே, ‘இவள் கடலோசைக்கும் குழலோசைக்கும் முடிந்தாளாக்கூடாது, நம்முடைய கையிலுள்ள அம்புகளாலே முடிந்தாளகவேணும்’ என்று கருதிய * கருப்புவில் மலர்க்கணைக் காமனானவன் பெண்களை வதை செய்யத்தகாதே என்றும் நோக்காமல் கண்ணற்று முடிக்கவல்ல சில அம்புகளை ஆராய்ந்து தொடுத்துத் தன்னுடைய பிரயோகஸாமர்த்தியத்தைக் காட்டுதற்கு முன்னே என்னைத் திருக்குறுங்குடியிற் கொண்டு சேர்த்திடுங்கள் என்கிறாள். ஏவலம் = ஏ-எய்வதில், வலம்-வல்லமை என்றபடி. இவனொருவன் = பெண்களைக் கொலை செய்ய வல்லவர்களை எண்ணத் தொடங்கினால் இவனை யெண்ணிப் பின்னை யெண்ணுதற்கு வேறு ஆளில்லாத அதிவிதீயன் என்றபடி. ‘இப்படியேபுகுந்து’ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிச் செய்வது;- “இதுக்கு இட்டுச் சொல்லலாவதொரு பாசுரமில்லை; புண்ணறைகளைக் காட்டுமித்தனை.” என்று “ஓர்மீனாய கொடி நெடுவேன் வலிசெய்ய மெலிவேனோ” என்றாள் கீழே திருவாலிப்பதிகத்திலும். ஆசை ஆதிகரித்துச் செல்லுவதையும், அதுகைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு. கோவலர்கூத்தன் குறிப்பறிந்து = தான் ஆடுகிற கூத்தின்; இனிமையாலே முரட்டாண்களான கோவலர்களையும் ஈடுபடுத்திக் கொள்பவன் என்பது ‘கோவலர்கூத்தன்’ என்றதன் உட்கருத்து. வன்னெஞ்சர்களான தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளைப் படுத்துகிறபாடே அதுவானால் அபலைகளான நமக்குச் சொல்ல வேணுமோ என்கை. அவனுடைய திருவுள்ளக் கருத்தையறிந்து அங்கே கொண்டு சேர்த்திடுங்கள் என்றதன் கருத்தாவது-அவன் வேணுமென்றிருந்தானாகில் அங்கே கொண்டுபோய்ப் பொகடுங்கோள்; வேண்டாவென்றிருந்தானாகில் இவ்விடத்தே முடித்திடுங்கோள் என்பதாம்.

English Translation

Pray head me, the roar of the sea is not alone! The cowherd;s flute melody already throttles my soul. And then this deft archer Madana, god of love, has his flower-arrows aimed at me. Before he comes in and shoots, know the cowherd dancer;s mind and carry me to his abode in kurungudi, now

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்