பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    வாரண மாயிரம்*  சூழ வலம் செய்து* 
    நாரண நம்பி*  நடக்கின்றான் என்றூ எதிர்* 

    பூரண பொற்குடம்*  வைத்துப் புறமெங்கும்* 
    தோரணம் நாட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்* (2)


    நாளை வதுவை*  மணமென்று நாளிட்டு* 
    பாளை கமுகு*  பரிசுடைப் பந்தற்கீழ்* 

    கோளரி மாதவன்*  கோவிந்தனென்பான் ஓர்* 
    காளை புகுத*  கனாக்கண்டேன் தோழீ! நான்*


    இந்திரன் உள்ளிட்ட*  தேவர் குழாமெல்லாம்* 
    வந்திருந்து  என்னை* மகட்பேசி மந்திரித்து* 

    மந்திரக்கோடி யுடுத்தி*  மணமாலை* 
    அந்தரி சூட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்*


    நால் திசைத் தீர்த்தம்*  கொணர்ந்து நனி நல்கி* 
    பார்ப்பனச் சிட்டர்கள்*  பல்லார் எடுத்து ஏத்தி* 

    பூப் புனை கண்ணிப்*  புனிதனோடு என்தன்னைக்* 
    காப்பு நாண் கட்டக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*  


    கதிர் ஒளித் தீபம்*  கலசம் உடன் ஏந்திச்* 
    சதிர் இள மங்கையர்*  தாம் வந்து எதிர்கொள்ள* 

    மதுரையார் மன்னன்*  அடிநிலை தொட்டு* 
    எங்கும் அதிரப் புகுதக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*       


    மத்தளம் கொட்ட*  வரி சங்கம் நின்று ஊத* 
    முத்து உடைத் தாமம்*  நிரை தாழ்ந்த பந்தற் கீழ்* 

    மைத்துனன் நம்பி*  மதுசூதன் வந்து* 
    என்னைக் கைத்தலம் பற்றக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*  


    வாய் நல்லார்*  நல்ல மறை ஓதி மந்திரத்தால்* 
    பாசிலை நாணல் படுத்துப்*  பரிதி வைத்து* 

    காய் சின மா களிறு*  அன்னான் என் கைப்பற்றி* 
    தீ வலஞ் செய்யக்*  கனாக் கண்டேன் தோழீ நான்*      


    இம்மைக்கும்*  ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்* 
    நம்மை உடையவன்*  நாராயணன் நம்பி* 

    செம்மை உடைய*  திருக்கையால் தாள் பற்றி* 
    அம்மி மிதிக்கக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*   


    வரிசிலை வாள் முகத்து*  என்னைமார் தாம் வந்திட்டு* 
    எரிமுகம் பாரித்து*  என்னை முன்னே நிறுத்தி* 

    அரிமுகன் அச்சுதன்*  கைம்மேல் என் கை வைத்துப்* 
    பொரிமுகந்து அட்டக்* கனாக் கண்டேன் தோழீ நான்*             


    குங்குமம் அப்பிக்*  குளிர் சாந்தம் மட்டித்து* 
    மங்கல வீதி*  வலஞ் செய்து மா மண நீர்* 

    அங்கு அவனோடும் உடன் சென்று*  அங்கு ஆனைமேல்* 
    மஞ்சனம் ஆட்டக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*     


    ஆயனுக்காகத்*  தான் கண்ட கனாவினை* 
    வேயர் புகழ்*  வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்* 

    தூய தமிழ்மாலை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாயும் நன் மக்களைப் பெற்று*  மகிழ்வரே* (2)