பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    கோழி யழைப்பதன் முன்னம்*  குடைந்து நீராடுவான் போந்தோம்* 
    ஆழியஞ் செல்வன் எழுந்தான்*  அரவணை மேல்பள்ளி கொண்டாய்* 

    ஏழைமை யாற்றவும் பட்டோம்*  இனி என்றும் பொய்கைக்கு வாரோம்* 
    தோழியும் நானும் தொழுதோம்*  துகிலைப் பணித்து அருளாயே* (2)


    இது என் புகுந்தது இங்கு அந்தோ!*  இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்* 
    மதுவின் துழாய் முடிமாலே!*  மாயனே! எங்கள் அமுதே* 

    விதி இன்மையால் அது மாட்டோம்*  வித்தகப் பிள்ளாய்! விரையேல்* 
    குதிகொண்டு அரவில் நடித்தாய்!*  குருந்திடைக் கூறை பணியாய்*       


    எல்லே ஈது என்ன இளமை*  எம் அனைமார் காணில் ஒட்டார்* 
    பொல்லாங்கு ஈது என்று கருதாய்*  பூங்குருந்து ஏறி இருத்தி* 

    வில்லால் இலங்கை அழித்தாய்!*  வேண்டியது எல்லாம் தருவோம்* 
    பல்லாரும் காணாமே போவோம்*  பட்டைப் பணித்தருளாயே*


    பரக்க விழித்து எங்கும் நோக்கிப்*  பலர் குடைந்து ஆடும் சுனையில்* 
    அரக்க நில்லா கண்ண நீர்கள்*  அலமருகின்றவா பாராய்* 

    இரக்கமேல் ஒன்றும் இலாதாய்!*  இலங்கை அழித்த பிரானே* 
    குரக்கஅரசு ஆவது அறிந்தோம்*  குருந்திடைக் கூறை பணியாய்* 


    காலைக் கதுவிடுகின்ற*  கயலொடு வாளை விரவி* 
    வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில்*   என்ன விளையாட்டோ?* 

    கோலச் சிற்றாடை பலவும் கொண்டு*  நீ ஏறியிராதே* 
    கோலம் கரிய பிரானே!*  குருந்திடைக் கூறை பணியாய்*            


    தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தாள்கள் எம் காலைக் கதுவ* 
    விடத் தேள் எறிந்தாலே போல*  வேதனை ஆற்றவும் பட்டோம்* 

    குடத்தை எடுத்து ஏறவிட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே* 
    படிற்றை எல்லாம் தவிர்ந்து*  எங்கள் பட்டைப் பணித்தருளாயே*         


    நீரிலே நின்று அயர்க்கின்றோம்*  நீதி-அல்லாதன செய்தாய்* 
    ஊரகம் சாலவும் சேய்த்தால்*  ஊழி எல்லாம் உணர்வானே!* 

    ஆர்வம் உனக்கே உடையோம்*  அம்மனைமார் காணில் ஒட்டார்* 
    போர விடாய் எங்கள் பட்டைப்*  பூங்குருந்து ஏறியிராதே. *    


    மாமிமார் மக்களே அல்லோம்*  மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்* 
    தூமலர்க் கண்கள் வளரத்*  தொல்லை இராத் துயில்வானே* 

    சேமமேல் அன்று இது சால*  சிக்கென நாம் இது சொன்னோம்* 
    கோமள ஆயர் கொழுந்தே!*  குருந்திடைக் கூறை பணியாய்*     


    கஞ்சன் வலைவைத்த அன்று*  காரிருள் எல்லிற் பிழைத்து* 
    நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்*  நின்ற இக் கன்னியரோமை* 
     

    அஞ்ச உரப்பாள் அசோதை*  ஆணாட விட்டிட்டு இருக்கும்* 
    வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட*  மசிமையிலீ! கூறை தாராய்*.  


    கன்னியரோடு எங்கள் நம்பி*  கரிய பிரான் விளையாட்டைப்* 
    பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த*  புதுவையர்கோன் பட்டன் கோதை* 

    இன்னிசையால் சொன்ன மாலை*  ஈரைந்தும் வல்லவர் தாம் போய்* 
    மன்னிய மாதவனோடு*  வைகுந்தம் புக்கு இருப்பாரே*. (2)