பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
முதுகு பற்றிக் கைத்தலத்தால்* முன் ஒரு கோல் ஊன்றி*
விதிர் விதிர்த்து கண் சுழன்று* மேல் கிளைகொண்டு இருமி*
இது என் அப்பர் மூத்த ஆறு என்று* இளையவர் ஏசாமுன்*
மது உண் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து* ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி*
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று* நடுங்காமுன்*
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்* ஆயிரம் நாமம் சொலி*
வெறி கொள் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
பீளை சோரக் கண் இடுங்கி* பித்து எழ மூத்து இருமி*
தாள்கள் நோவத் தம்மில் முட்டி* தள்ளி நடவாமுன்*
காளை ஆகி கன்று மேய்த்து* குன்று எடுத்து அன்று நின்றான*
வாளை பாயும் தண் தடம் சூழ்* வதரி வணங்குதுமே.
பண்டு காமர் ஆன ஆறும்* பாவையர் வாய் அமுதம்*
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி*
தண்டு காலா ஊன்றி ஊன்றி* தள்ளி நடவாமுன்*
வண்டு பாடும் தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி* இருமி இளைத்து*
உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்* பேசி அயராமுன்*
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி* ஆழ் கடலைக் கடைந்த*
மைத்த சோதி எம்பெருமான்* வதரி வணங்குதுமே.
பப்ப அப்பர் மூத்த ஆறு* பாழ்ப்பது சீத் திரளை*
ஒப்ப ஐக்கள் போத உந்த* உன் தமர் காண்மின் என்று*
செப்பு நேர் மென் கொங்கை நல்லார்* தாம் சிரியாத முன்னம்*
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்* வதரி வணங்குதுமே.
ஈசி போமின் ஈங்கு இரேல்மின்* இருமி இளைத்தீர்*
உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்* குவளை அம் கண்ணியர்பால்*
நாசம் ஆன பாசம் விட்டு* நல் நெறி நோக்கல் உறில்*
வாசம் மல்கு தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
புலன்கள் நைய மெய்யில் மூத்து* போந்து இருந்து உள்ளம் எள்கி*
கலங்க ஐக்கள் போத உந்தி* கண்ட பிதற்றாமுன்*
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு* ஆயிரம் நாமம் சொலி*
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்* வதரி வணங்குதுமே
வண்டு தண் தேன் உண்டு வாழும்* வதரி நெடு மாலைக்*
கண்டல் வேலி மங்கை வேந்தன்* கலியன் ஒலி மாலை*
கொண்டு தொண்டர் பாடி ஆடக்* கூடிடில் நீள் விசும்பில்*
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு* ஓர் ஆட்சி அறியோமே.
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
வஞ்சனை செய்யத் தாய்உருஆகி* வந்த பேய் அலறிமண் சேர*
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்துதி செய்ய பெண்உருஆகி*
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திட தளர்ந்து*
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்* எம் பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவிதனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி* வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
எந்தை தந்தை தம்மானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது* 'எம் பெருமான் அருள்!' என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த*
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை*
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே. (2)
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்*
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்து உள்ளானே .(2)
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே.
பொங்கி அமரில் ஒருகால்* பொன்பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்*
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன்மருவார்*
ஊன்அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார்மேல்* சாரா தீவினை தானே. (2)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவைதன்னை*
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர்கோனை* கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்* செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை* பங்கயத்து அயன் அவன் அனைய*
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்*
தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே*
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
மல்லை மா முந்நீர் அதர்பட* மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை*
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்* வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை* கரு முகில் திரு நிறத்தவனை*
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
அன்றிய வாணன் ஆயிரம்* தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திருவெள்ளறை நின்றானே.
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி* முன்பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின்வாய*
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண்தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திருவெள்ளறை நின்றானே.
மான வேல் ஒண் கண் மடவரல்* மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண்முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே.
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திருவெள்ளறை நின்றானே.
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே,
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல்இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* மாஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திருவெள்ளறை நின்றானே.
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* நின் உருவம்
மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது* யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* நின்
திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே. (2)
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே*
அறம்தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!* திருநறையூர்த்
தேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே
சாந்து ஏந்து மென் முலையார்* தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன்* அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே!* உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன்* பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்
செற்றாய்* கொற்றவனே!* திருவிண்ணகரானே.
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே.
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே* நீ பணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே.
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே.
சொல்லாய் திரு மார்வா!* உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை* வினைகள் நலியாமை* நம்புநம்பீ*
மல்லா! குடம் ஆடீ!* மதுசூதனே* உலகில்
செல்லா நல் இசையாய்!* திருவிண்ணகரானே.
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானைக்*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே.
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்* செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு* என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை* நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து* தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை* அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை* மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்* அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து* தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை* குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?*
உரங்களால் இயன்ற மன்னர் மாள* பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்* எம்பிரானை* வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி* என் மனம் தாழ்ந்து நில்லாதே*.
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது* அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு* தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை* உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
வேங்கடத்து அரியை பரி கீறியை* வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை* தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே*.
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்* தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை* கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை* பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து* என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்* கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை* வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன்* மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே*
இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்* எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்* அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்* தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை* பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை* காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* திரு ஆலி-
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்* நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்* தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*
தெரிவுஅரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வரிஅரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*
கரிவெருவ மருப்புஒசித்தாற்கு* இழந்தேன்என் கனவளையே.
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை, போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடைஅடர்த்து* பனிமதிகோள் விடுத்துஉகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
கணம்மருவும் மயில்அகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகின்,*
திணம்மருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
மணம்மருவு தோள்ஆய்ச்சி* ஆர்க்கபோய், உரலோடும்*
புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே.
வாய்எடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*
தீஎடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய்எடுத்த சிறுகோலுக்கு* உளைந்துஓடி தயிர்உண்ட,*
வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே.
மடல்எடுத்த நெடுந்தாழை* மருங்குஎல்லாம் வளர்பவளம்,*
திடல்எடுத்து சுடர்இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
அடல்அடர்த்து அன்று இரணியனை* முரண்அழிய அணிஉகிரால்,*
உடல்எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
வண்டுஅமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*
தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
எண்திசையும் எழுகடலும்* இருநிலனும் பெருவிசும்பும்,*
உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
கொங்குமலி கருங்குவளை* கண்ஆகத் தெண்கயங்கள்*
செங்கமலம் முகம்அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வங்கம்மலி தடங்கடலுள்* வரிஅரவின் அணைத்துயின்ற,*
செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
வார்ஆளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
சீர்ஆளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவுஅணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே.
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுஉரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினைஆய நண்ணாவே. (2)
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகுஆய புல்லாணியே. (2)
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்* நீழலில் முன்ஒருநாள்,*
பெருகுகா தன்மை என்உள்ளம்* எய்தப் பிரிந்தான்இடம்,*
பொருதுமுந் நீர்கரைக்கே* மணிஉந்து புல்லாணியே.
ஏது செய்தால் மறக்கேன்* மனமே! தொழுதும் எழு,*
தாது மல்கு தடம்சூழ் பொழில்* தாழ்வர் தொடர்ந்து,* பின்-
பேதை நின்னைப் பிரியேன்இனி* என்று அகன்றான்இடம்,*
போது நாளும் கமழும்* பொழில்சூழ்ந்த புல்லாணியே.
கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்* கொடியேற்கு,* முன்-
நங்கள்ஈசன்* நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
மங்கை நல்லாய்! தொழுதும் எழு* போய் அவன் மன்னும்ஊர்,*
பொங்கு முந்நீர் கரைக்கே* மணி உந்து புல்லாணியே
உணரில் உள்ளம் சுடுமால்* வினையேன் தொழுதும் எழு,*
துணரி நாழல் நறும்போது* நம்சூழ் குழல்பெய்து,* பின்-
தணரில் ஆவி தளரும்என* அன்பு தந்தான்இடம்,*
புணரி ஓதம் பணில* மணிஉந்து புல்லாணியே.
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
வள்ளல் மாயன்* மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*
கள் அவிழும் மலர்க் காவியும்* தூமடல் கைதையும்,*
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த* புல்லாணியே.
பரவி நெஞ்சே! தொழுதும்எழு* போய் அவன் பாலம்ஆய்,*
இரவும் நாளும் இனிகண் துயிலாது* இருந்து என்பயன்?*
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,* வெண்திரை*
புரவி என்னப் புதம்செய்து* வந்துஉந்து புல்லாணியே
அலமும் ஆழிப் படையும் உடையார்* நமக்கு அன்பர்ஆய்,*
சலம்அதுஆகி தகவுஒன்று இலர்* நாம் தொழுதும்எழு,*
உலவு கால்நல் கழிஓங்கு* தண்பைம் பொழிலூடு,* இசை-
புலவு கானல்* களிவண்டுஇனம் பாடு புல்லாணியே.
ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,* ஒளிமாமலர்ப்*
பாதம் நாளும் பணிவோம்* நமக்கே நலம்ஆதலின்,*
ஆது தாரான்எனிலும் தரும்,* அன்றியும் அன்பர்ஆய்ப்*
போதும் மாதே! தொழுதும்* அவன்மன்னு புல்லாணியே
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த* அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது* பாடுஇல் வைகுந்தமே (2)
ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)
எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றுஎன்று அலற்றாதே*
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!* அங்கதனே! நளனே*
கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே
ஞாலம் ஆளும் உங்கள் கோமான்* எங்கள் இராவணற்குக்*
காலன்ஆகி வந்தவா* கண்டு அஞ்சி கருமுகில்போல்*
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க* அங்கதன் வாழ்கஎன்று*
கோலம்ஆக ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மணங்கள் நாறும் வார்குழலார்* மாதர்கள் ஆதரத்தைப்*
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்* பொன்ற வரிசிலையால்*
கணங்கள்உண்ண வாளிஆண்ட* காவலனுக்கு இளையோன்*
குணங்கள் பாடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே
வென்றி தந்தோம் மானம் வேண்டோம்* தானம் எமக்குஆக*
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்* எம்பெருமான் தமர்காள்*
நின்று காணீர் கண்கள்ஆர* நீர் எம்மைக் கொல்லாதே*
குன்று போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே
கல்லின் முந்நீர் மாற்றி வந்து* காவல் கடந்து,* இலங்கை-
அல்லல் செய்தான் உங்கள் கோமான்* எம்மை அமர்க்களத்து*
வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்* வெம்கதிரோன் சிறுவா,*
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மாற்றம்ஆவது இத்தனையே* வம்மின் அரக்கர்உள்ளீர்*
சீற்றம் நும்மேல் தீர வேண்டின்* சேவகம் பேசாதே*
ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்* அநுமனை வாழ்கஎன்று*
கூற்றம் அன்னார் காண ஆடீர்* குழமணி தூரமே.
கவள யானை பாய்புரவி* தேரொடு அரக்கர்எல்லாம்-
துவள,* வென்ற வென்றியாளன்* தன்தமர் கொல்லாமே*
தவள மாடம் நீடுஅயோத்தி* காவலன் தன்சிறுவன்*
குவளை வண்ணன் காண ஆடீர்* குழமணி தூரமே.
ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்* எங்கள் இராவணனார்-
ஓடிப் போனார்,* நாங்கள் எய்த்தோம்* உய்வதுஓர் காரணத்தால்*
சூடிப் போந்தோம் உங்கள் கோமான்* ஆணை தொடரேல்மின்*
கூடிக்கூடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே.
வென்ற தொல்சீர்த் தென்இலங்கை* வெம்சமத்து* அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே (2)
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே!. (2)
இருந்தான் என்னுள்ளத்து* இறைவன், கறைசேர்*
பருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த, செங்கண்*
பெருந்தோள் நெடுமாலைப்* பேர்பாடி ஆட*
வருந்தாது என் கொங்கை* ஒளிமன்னும் அன்னே!
அன்னே! இவரை* அறிவன், மறைநான்கும்*
முன்னே உரைத்த* முனிவர் இவர்வந்து*
பொன்னேய் வளைகவர்ந்து* போகார் மனம்புகுந்து*
என்னே இவரெண்ணும்* எண்ணம் அறியோமே!
அறியோமே என்று* உரைக்கலாமே எமக்கு,*
வெறியார் பொழில்சூழ்* வியன்குடந்தை மேவி,*
சிறியான் ஓர் பிள்ளையாய்* மெள்ள நடந்திட்டு*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தார் தம்மையே?
தம்மையே நாளும்* வணங்கித் தொழுவார்க்கு,*
தம்மையே ஒக்க* அருள்செய்வர் ஆதலால்,*
தம்மையே நாளும்* வணங்கித் தொழுதிறைஞ்சி,*
தம்மையே பற்றா* மனத்தென்றும் வைத்தோமே.
வைத்தார் அடியார்* மனத்தினில் வைத்து,* இன்பம்-
உற்றார் ஒளிவிசும்பி* ஓரடிவைத்து,* ஓரடிக்கும்-
எய்த்தாது மண்ணென்று* இமையோர் தொழுதிறைஞ்சி,*
கைத்தாமரை குவிக்கும்* கண்ணன் என் கண்ணனையே
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?* இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,* அவன்மேய,-
அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே.
பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே* ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே* சூடும் துழாயலங்கல்? சூடி,* நாம்
கூடோமே கூடக்* குறிப்பாகில்? நன்னெஞ்சே!
நன்னெஞ்சே! நம்பெருமான்* நாளும் இனிதமரும்,*
அன்னம்சேர் கானல்* அணியாலி கைதொழுது,*
முன்னம்சேர் வல்வினைகள் போக* முகில்வண்ணன்,*
பொன்னம்சேர் சேவடிமேல்* போதணியப் பெற்றோமே!
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2)
பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறி உள்ளி உரைத்த*
கணக்கு அறு நலத்தனன்* அந்தம் இல் ஆதி அம் பகவன்*
வணக்கு உடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின், பசை அற!* அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று* உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை*
உணர்ந்து உணர்ந்து உணரிலும்* இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* அரி அயன் அரன் என்னும் இவரை*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.
ஒன்று எனப் பல என* அறிவு அரும்வடிவினுள் நின்ற*
நன்று எழில் நாரணன்* நான்முகன் அரன் என்னும் இவரை*
ஒன்ற நும் மனத்து வைத்து* உள்ளி நும் இரு பசை அறுத்து*
நன்று என நலம் செய்வது* அவனிடை நம்முடை நாளே.
நாளும் நின்று அடு நம பழமை* அம் கொடுவினை உடனே
மாளும்* ஓர் குறைவு இல்லை;* மனன் அகம் மலம் அறக் கழுவி*
நாளும் நம் திரு உடை அடிகள் தம்* நலம் கழல் வணங்கி*
மாளும் ஓர் இடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த* நல் உலகமும் தானும்
புலப்பட* பின்னும் தன் உலகத்தில்* அகத்தனன் தானே
சொலப் புகில்* இவை பின்னும் வயிற்று உள;* இவை அவன் துயக்கே.
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
மயக்கு உடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
புயல் கரு நிறத்தனன்;* பெரு நிலங் கடந்த நல் அடிப் போது*
அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.
அமரர்கள் தொழுது எழ* அலை கடல் கடைந்தவன் தன்னை*
அமர் பொழில் வளங் குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில் சென்று* அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)