பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
    இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 

    பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
    வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.


    முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
    விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 

    இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
    மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  


    உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
    நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 

    அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    


    பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
    தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 

    காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
    வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.


    பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
    உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 

    தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
    வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
    உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 

    அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
    மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    


    பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
    ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 

    செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
    வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            


    ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
    உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*

    நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
    வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
    கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 

    அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
    வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே


    வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
    கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 

    கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
    அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 


    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 

    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
    சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   


    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)


    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 

    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*

    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
    எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    


    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
    'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*

    சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           


    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.


    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 

    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)


    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 

    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      


    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
    தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*

    கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
    சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)


    வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
    ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

    கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
    சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  


    பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
    மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

    வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
    தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   


    பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
    எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

    அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
    திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  


    வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
    தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

    முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
    திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
    அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 

    உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
    தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
    உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

    வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
    தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  


    ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
    மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

    அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
    தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
    அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

    பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
    சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
    பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

    ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
    மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
    வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 

    ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
    தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 


    பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
    வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 

    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    


    பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 

    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.


    திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
    படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*

    திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 

    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  


    'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
    தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*

    தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 

    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.


    வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
    கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*

    செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 


    அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
    மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*

    தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்*  கார் முகிலே! என நினைந்திட்டு* 
    உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்*  உள்ளத்துள் ஊறிய தேனை*

    தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 

    ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
    மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.


    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*

    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.


    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          


    வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
    கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
    தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.


    வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
    காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*

    மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
    தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 


    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.


    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*

    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 


    ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
    வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
    தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.


    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 

    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.


    மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
    அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*

    நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
    எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 


    துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
    மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்

    பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
    திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 


    துறந்தேன் ஆர்வச் செற்றச்*  சுற்றம் துறந்தமையால்* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  அடிமை திருமாலே*

    அறம்தான் ஆய்த் திரிவாய்*  உன்னை என் மனத்து அகத்தே* 
    திறம்பாமல் கொண்டேன்*  திருவிண்ணகரானே.  


    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*

    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      


    சாந்து ஏந்து மென் முலையார்*  தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து 
    ஆழ்ந்தேன்*  அரு நரகத்து அழுந்தும்*  பயன் படைத்தேன்* 

    போந்தேன் புண்ணியனே!*  உன்னை எய்தி என் தீவினைகள் 
    தீர்ந்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகரானே      


    மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*  உன்னை என் மனத்து வைத்துப் 
    பெற்றேன்*  பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*

    வற்றா நீள் கடல் சூழ்*  இலங்கை இராவணனைச் 
    செற்றாய்*  கொற்றவனே!*  திருவிண்ணகரானே. 


    மை ஒண் கருங் கடலும்*  நிலனும் மணி வரையும்* 
    செய்ய சுடர் இரண்டும்*  இவை ஆய நின்னை*  நெஞ்சில்

    உய்யும் வகை உணர்ந்தேன்*  உண்மையால் இனி *  யாதும் மற்று ஓர் 
    தெய்வம் பிறிது அறியேன்*  திருவிண்ணகரானே.    


    வேறே கூறுவது உண்டு*  அடியேன் விரித்து உரைக்கும் 
    ஆறே*  நீ பணியாது அடை*  நின் திருமனத்து* 

    கூறேன் நெஞ்சு தன்னால்*  குணம் கொண்டு*  மற்று ஓர் தெய்வம் 
    தேறேன் உன்னை அல்லால்*  திருவிண்ணகரானே.


    முளிந்தீந்த வெம் கடத்து*  மூரிப் பெருங் களிற்றால்* 
    விளிந்தீந்த மா மரம்போல்*  வீழ்ந்தாரை நினையாதே* 

    அளிந்து ஓர்ந்த சிந்தை*  நின்பால் அடியேற்கு*  வான் உலகம் 
    தெளிந்தே என்று எய்துவது?*  திருவிண்ணகரானே.     


    சொல்லாய் திரு மார்வா!*  உனக்கு ஆகித் தொண்டு பட்ட 
    நல்லேனை*  வினைகள் நலியாமை*  நம்புநம்பீ*

    மல்லா! குடம் ஆடீ!*  மதுசூதனே*  உலகில் 
    செல்லா நல் இசையாய்!*  திருவிண்ணகரானே.


    தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
    சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 

    கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
    ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.


    சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
    மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*

    நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
    கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)


    தாய் நினைந்த கன்றே ஒக்க*  என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*  தான் எனக்கு 
    ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*  அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட

    வாயனை*  மகரக் குழைக் காதனை*  மைந்தனை மதிள் கோவல் இடைகழி 
    ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை*  என் அன்பனை அன்றி ஆதரியேனே.      


    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*

    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 


    உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
    இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி

    அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
    சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.


    ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
    தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*

    வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
    தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.


    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்

    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     


    பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற*  பாலை ஆகி இங்கே புகுந்து*  என் 
    கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*  கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*

    விண் உளார் பெருமானை எம்மானை*  வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் 
    வண்ணன்*  மா மணி வண்ணன் எம் அண்ணல்*  வண்ணமே அன்றி வாய் உரையாதே*


    இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்*  எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்*  அடும் 
    துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*  தோற்றத் தொல் நெறியை*  வையம் தொழப்படும்

    முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*  பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் 
    கனியை*  காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.


    தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
    நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-

    சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)


    கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
    திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
    வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)


    அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
    தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
    கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 


    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
    திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 

    மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
    புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.


    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.


    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.


    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*

    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)


    தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
    பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*

    என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
    புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 


    உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்*  நீழலில் முன்ஒருநாள்,*   

    பெருகுகா தன்மை என்உள்ளம்*  எய்தப் பிரிந்தான்இடம்,* 
    பொருதுமுந் நீர்கரைக்கே*  மணிஉந்து புல்லாணியே.     


    ஏது செய்தால் மறக்கேன்*  மனமே! தொழுதும் எழு,*
    தாது மல்கு தடம்சூழ் பொழில்*  தாழ்வர் தொடர்ந்து,*  பின்-

    பேதை நின்னைப் பிரியேன்இனி*  என்று அகன்றான்இடம்,* 
    போது நாளும் கமழும்*  பொழில்சூழ்ந்த புல்லாணியே.


    கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்*  கொடியேற்கு,*  முன்- 
    நங்கள்ஈசன்*  நமக்கே பணித்த மொழிசெய்திலன்*

    மங்கை நல்லாய்!  தொழுதும் எழு*  போய் அவன் மன்னும்ஊர்,* 
    பொங்கு முந்நீர் கரைக்கே*  மணி உந்து புல்லாணியே


    உணரில் உள்ளம் சுடுமால்*  வினையேன் தொழுதும் எழு,*
    துணரி நாழல் நறும்போது*  நம்சூழ் குழல்பெய்து,*  பின்- 

    தணரில் ஆவி தளரும்என*  அன்பு தந்தான்இடம்,* 
    புணரி ஓதம் பணில*  மணிஉந்து புல்லாணியே.  


    எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    வள்ளல் மாயன்*  மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*

    கள் அவிழும் மலர்க் காவியும்*  தூமடல் கைதையும்,* 
    புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த*  புல்லாணியே.   


    பரவி நெஞ்சே! தொழுதும்எழு*  போய் அவன் பாலம்ஆய்,*
    இரவும் நாளும் இனிகண் துயிலாது*  இருந்து என்பயன்?*

    விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,*  வெண்திரை*
    புரவி என்னப் புதம்செய்து*  வந்துஉந்து புல்லாணியே 


    அலமும் ஆழிப் படையும் உடையார்*  நமக்கு அன்பர்ஆய்,* 
    சலம்அதுஆகி தகவுஒன்று இலர்*  நாம் தொழுதும்எழு,*

    உலவு கால்நல் கழிஓங்கு*  தண்பைம் பொழிலூடு,*  இசை-
    புலவு கானல்*  களிவண்டுஇனம் பாடு புல்லாணியே. 


    ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,*  ஒளிமாமலர்ப்*
    பாதம் நாளும் பணிவோம்*  நமக்கே நலம்ஆதலின்,*

    ஆது தாரான்எனிலும் தரும்,*  அன்றியும் அன்பர்ஆய்ப்*
    போதும் மாதே! தொழுதும்*  அவன்மன்னு புல்லாணியே   


    இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
    புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*

    கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
    வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)


    ஏத்துகின்றோம் நாத்தழும்ப*  இராமன் திருநாமம்* 
    சோத்தம் நம்பீ சுக்கிரீவா!*  உம்மைத் தொழுகின்றோம்*

    வார்த்தை பேசீர் எம்மை*  உங்கள் வானரம் கொல்லாமே* 
    கூத்தர் போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே   (2)


    எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்றுஎன்று அலற்றாதே* 
    அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*

    நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
    கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  


    ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*
    காலன்ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி கருமுகில்போல்*

    நீலன் வாழ்க சுடேணன் வாழ்க*  அங்கதன் வாழ்கஎன்று*
    கோலம்ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 


    மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தைப்*
    புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற வரிசிலையால்*

    கணங்கள்உண்ண வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*
    குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே


    வென்றி தந்தோம் மானம் வேண்டோம்*  தானம் எமக்குஆக*
    இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்*  எம்பெருமான் தமர்காள்*

    நின்று காணீர் கண்கள்ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
    குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே      


    கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-
    அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*

    வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்*  வெம்கதிரோன் சிறுவா,* 
    கொல்ல வேண்டா ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  


    மாற்றம்ஆவது இத்தனையே*  வம்மின் அரக்கர்உள்ளீர்* 
    சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*

    ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்*  அநுமனை வாழ்கஎன்று* 
    கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர்எல்லாம்-
    துவள,*  வென்ற வென்றியாளன்*  தன்தமர் கொல்லாமே*

    தவள மாடம் நீடுஅயோத்தி*  காவலன் தன்சிறுவன்*
    குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்*  எங்கள் இராவணனார்-
    ஓடிப் போனார்,*  நாங்கள் எய்த்தோம்*  உய்வதுஓர் காரணத்தால்*

    சூடிப் போந்தோம் உங்கள் கோமான்*  ஆணை தொடரேல்மின்* 
    கூடிக்கூடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே.


    வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
    குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*

    கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
    ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)


    மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
    பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*

    தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
    என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)


    இருந்தான் என்னுள்ளத்து*  இறைவன், கறைசேர்*
    பருந்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த, செங்கண்*

    பெருந்தோள் நெடுமாலைப்*  பேர்பாடி ஆட*
    வருந்தாது என் கொங்கை*  ஒளிமன்னும் அன்னே! 


    அன்னே! இவரை*  அறிவன், மறைநான்கும்*
    முன்னே உரைத்த*  முனிவர் இவர்வந்து*

    பொன்னேய் வளைகவர்ந்து*  போகார் மனம்புகுந்து*
    என்னே இவரெண்ணும்*  எண்ணம் அறியோமே! 


    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*

    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?


    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுவார்க்கு,*
    தம்மையே ஒக்க*  அருள்செய்வர் ஆதலால்,*

    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுதிறைஞ்சி,*
    தம்மையே பற்றா*  மனத்தென்றும் வைத்தோமே. 


    வைத்தார் அடியார்*  மனத்தினில் வைத்து,*  இன்பம்-
    உற்றார் ஒளிவிசும்பி*  ஓரடிவைத்து,*  ஓரடிக்கும்-

    எய்த்தாது மண்ணென்று*  இமையோர் தொழுதிறைஞ்சி,*
    கைத்தாமரை குவிக்கும்*  கண்ணன் என் கண்ணனையே


    கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
    என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*

    பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
    அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.


    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே*  ஆயிரம் பேரானை? பேர்நினைந்து

    சூடோமே*  சூடும் துழாயலங்கல்? சூடி,*  நாம்
    கூடோமே கூடக்*  குறிப்பாகில்? நன்னெஞ்சே!


    நன்னெஞ்சே! நம்பெருமான்*  நாளும் இனிதமரும்,*
    அன்னம்சேர் கானல்*  அணியாலி கைதொழுது,*

    முன்னம்சேர் வல்வினைகள் போக*  முகில்வண்ணன்,*
    பொன்னம்சேர் சேவடிமேல்*  போதணியப் பெற்றோமே! 


    பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
    பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*

    கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
    உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)


    பிணக்கற அறுவகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 
    கணக்கு அறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*

    வணக்கு உடைத் தவநெறி*  வழிநின்று புறநெறி களைகட்டு* 
    உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.    


    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை* 
    உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*

    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   


    ஒன்று எனப் பல என*  அறிவு அரும்வடிவினுள் நின்ற* 
    நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*

    ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி நும் இரு பசை அறுத்து* 
    நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே.


    நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 
    மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*

    நாளும் நம் திரு உடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 
    மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே.


    வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,*  இடம்பெறத் துந்தித் 
    தலத்து எழு திசைமுகன் படைத்த*  நல் உலகமும் தானும்

    புலப்பட*  பின்னும் தன் உலகத்தில்*  அகத்தனன் தானே 
    சொலப் புகில்*  இவை பின்னும் வயிற்று உள;*  இவை அவன் துயக்கே.


    துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்*  அமரரைத் துயக்கும்* 
    மயக்கு உடை மாயைகள்*  வானிலும் பெரியன வல்லன்*

    புயல் கரு நிறத்தனன்;*  பெரு நிலங் கடந்த நல் அடிப் போது* 
    அயர்ப்பிலன் அலற்றுவன்*  தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.


    அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
    அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*

    அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
    அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)