பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
    கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 

    ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
    நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)


    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 

    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  


    சேமமே வேண்டி தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி* 
    ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 

    காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
    நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.


    வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல்கணார் கலவியே கருதி* 
    நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*

    பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
    நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 


    கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்* 
    தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்* 

    உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர* 
    நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம்.       


    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 

    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      


    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 

    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 


    கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
    பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*

    செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
    நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.


    குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 

    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       


    மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
    செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*

    துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
    நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          


    வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
    மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*

    கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
    மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  


    உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
    மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
    வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*


    இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
    வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
    மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  


    பாவியாது செய்தாய்*  என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
    மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்*  விசும்பு ஏற வைக்கும் எந்தை* 

    கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்*  வேங்கட மலை ஆண்டு*
    வானவர் ஆவியாய் இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*         


    பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
    தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 

    எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
    அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    துவரி ஆடையர் மட்டையர்*  சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்* 
    தமரும் தாங்களுமே தடிக்க*  என் நெஞ்சம் என்பாய்* 

    கவரி மாக் கணம் சேரும்*  வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை* 
    அமர நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    தருக்கினால் சமண் செய்து*  சோறு தண் தயிரினால் திரளை*
    மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    மருள்கள் வண்டுகள் பாடும்*  வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* 
    வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*


    சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
    என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 

    வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
    ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 


    கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
    பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 

    ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
    வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  


    மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
    அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 

    கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
    இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 


    இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
    கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*

    இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
    செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   


    மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
    பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 

    பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
    தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 


    வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
    அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 

    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.


    மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
    கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*

    மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
    சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
    ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*

    வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       


    கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 

    வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        


    மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
    நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 

    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     


    விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 

    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  


    வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
    மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 

    கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
    சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       


    மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 

    மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)


    போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
    தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*

    மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
    தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 


    யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
    மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*

    மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
    தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         


    வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
    தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*

    ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
    தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 


    இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
    சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*

    எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
    சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     


    அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
    உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*

    தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
    திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  


    ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
    பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*

    சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
    சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   


    ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
    வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*

    ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.


    வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
    கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*

    ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.


    கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
    கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*

    வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
    செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   


    கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
    சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*

    கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    


    அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
    குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*

    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    


    கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
    பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*

    பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 


    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*

    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    


    வெற்பால் மாரி பழுது ஆக்கி*  விறல் வாள் அரக்கர் தலைவன் தன்* 
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்*  துணித்த வல் வில் இராமன் இடம்*

    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்*  கவின் ஆர் கூடம் மாளிகைகள்* 
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.  


    மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
    நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*

    செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
    பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    


    மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
    மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     


    குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
    சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*

    குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
    புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     


    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*

    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.


    துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
    அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*

    மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.


    கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
    பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*

    கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
    சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       


    வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
    தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*  அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!* 
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*  பெண் அமுது உண்ட எம் பெருமானே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல் 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்*  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்* 
    கலை தரு குழவியின் உருவினை ஆய்*  அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.        


    பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்*  சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்* 
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று*  அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல், 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்*  ஏர் கெழும் உலகமும் ஆகி*   முத
    லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்*  சீர் கெழு நான்மறை ஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*  இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்* 
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்*  இருக்கினில் இன் இசை ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    காதல் செய்து இளையவர் கலவி தரும்*  வேதனை வினை அது வெருவுதல் ஆம்* 
    ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!*  போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்*  காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்* 
    ஓதல் செய் நான்மறை ஆகி*  உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே!       


    பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
    காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 

    பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
    வாமனன் அடி*  இணை மருவுவரே* 


    கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
    மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*

    நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
    பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*


    வற்றா முதுநீரொடு*  மால் வரை ஏழும்* 
    துற்று ஆக முன் துற்றிய*  தொல் புகழோனே*

    அற்றேன் அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்* 
    பெற்றேன் அருள் தந்திடு*  என் எந்தை பிரானே!*  


    தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்* 
    ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

    கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி* 
    ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.       


    புள் வாய் பிளந்த*  புனிதா! என்று அழைக்க* 
    உள்ளே நின்று*  என் உள்ளம் குளிரும் ஒருவா!*

    கள்வா!*  கடல்மல்லைக் கிடந்த கரும்பே* 
    வள்ளால்! உன்னை*  எங்ஙனம் நான் மறக்கேனே*


    வில் ஏர் நுதல்*  நெடுங் கண்ணியும் நீயும்* 
    கல் ஆர் கடுங் கானம்*  திரிந்த களிறே*

    நல்லாய் நர நாரணனே!*  எங்கள் நம்பி* 
    சொல்லாய் உன்னை*  யான் வணங்கித் தொழும் ஆறே *


    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*

    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 


    கதியேல் இல்லை*  நின் அருள் அல்லது எனக்கு* 
    நிதியே!*  திருநீர்மலை நித்திலத் தொத்தே*

    பதியே பரவித் தொழும்*  தொண்டர் தமக்குக் 
    கதியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*     


    அத்தா! அரியே! என்று*  உன்னை அழைக்க *
    பித்தா என்று பேசுகின்றார்*  பிறர் என்னை*

    முத்தே!  மணி மாணிக்கமே!*  முளைக்கின்ற 
    வித்தே*  உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!* 


    தூயாய்! சுடர் மா மதிபோல்*  உயிர்க்கு எல்லாம்* 
    தாய் ஆய் அளிக்கின்ற*  தண் தாமரைக் கண்ணா!*

    ஆயா! அலை நீர் உலகு ஏழும்*  முன் உண்ட 
    வாயா*  உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*


    வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
    தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
    உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
     


    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*

    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*

    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*

    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 


    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*

    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*

    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*

    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!


    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*

    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    கொற்றப்புள் ஒன்றுஏறி*  மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்* 
    வெற்றிப்போர் இந்திரற்கும்*  இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*

    பெற்றக்கால் அவன்ஆகம்*  பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
    கற்றநூல் மறையாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*

    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*

    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)


    வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
    சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

    அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
    செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 


    கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
    துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

    குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
    திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே  


    வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,* 
    மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

    போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,* 
    சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
    பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

    ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
    சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.


    மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*
    பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*
    செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  


    மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-
    குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

    குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*
    செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,* 
    பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

    கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,* 
    தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 


    அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு- 
    பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,* 
    திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*
    மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,* 
    தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.


    கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,* 
    சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

    மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
    உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2) 


    ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
    வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*

    நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
    கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)


    பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
    மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*

    என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
    தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)


    வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
    பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*

    மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
    ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே


    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*

    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.


    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-

    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.


    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*

    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.


    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*

    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே


    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*

    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே


    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  


    பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
    கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*

    சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
    அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)


    குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
    அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-

    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
    தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)


    காரும் வார்பனிக்*  கடலும் அன்னவன்,* 
    தாரும் மார்வமும்*  கண்ட தண்டமோ,*

    சோரும் மாமுகில்*  துளியின் ஊடுவந்து,* 
    ஈர வாடைதான்*  ஈரும் என்னையே!


    சங்கும் மாமையும்*  தளரும் மேனிமேல்,* 
    திங்கள் வெம்கதிர்*  சீறும் என்செய்கேன்,*

    பொங்கு வெண்திரைப்*  புணரி வண்ணனார்,* 
    கொங்குஅலர்ந்ததார்*  கூவும் என்னையே!


    அங்குஓர் ஆய்க்குலத்துள்*  வளர்ந்து சென்று,* 
    அங்குஓர்*  தாய்உருஆகி வந்தவள்,*

    கொங்கை நஞ்சுஉண்ட*  கோயின்மை கொலோ,*
    திங்கள் வெம்கதிர்*  சீறுகின்றதே.


    அங்குஓர் ஆள்அரிஆய்,*  அவுணனை- 
    பங்கமா*  இருகூறு செய்தவன்,* 

    மங்குல் மாமதி*  வாங்கவே கொலோ* 
    பொங்கு மாகடல்*  புலம்பு கின்றதே!


    சென்றுவார்*  சிலை வளைத்து இலங்கையை- 
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,*

    முன்றில் பெண்ணைமேல்*  முளரிக் கூட்டகத்து,* 
    அன்றிலின் குரல்*  அடரும் என்னையே!


    பூவை வண்ணனார்*  புள்ளின் மேல்வர,* 
    மேவி நின்றுநான்*  கண்ட தண்டமோ,*

    வீவுஇல்ஐங்கணை*  வில்லி அம்புகோத்து,* 
    ஆவியே இலக்குஆக எய்வதே!


    மால் இனம்துழாய்*  வரும் என் நெஞ்சகம்,* 
    மாலின் அம்துழாய்*  வந்து என்உள்புக,*

    கோல வாடையும்*  கொண்டு வந்ததுஓர்* 
    ஆலி வந்ததால்*  அரிது காவலே!


    கெண்டை ஒண்கணும் துயிலும்,*  என்நிறம்- 
    பண்டு பண்டு போல்ஒக்கும்,*  மிக்கசீர்த்

    தொண்டர் இட்ட*  பூந்துளவின் வாசமே,* 
    வண்டு கொண்டு வந்து*  ஊதுமாகிலே


    அன்று பாரதத்து*  ஐவர் தூதனாய்ச்,* 
    சென்ற மாயனை*  செங்கண் மாலினை,*

    மன்றில்ஆர் புகழ்*  மங்கை வாள்கலி,*
    கன்றி சொல்வல்லார்க்கு*  அல்லல் இல்லையே  (2)