பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து* அன்று இணை அடி இமையவர் வணங்க*
தானவன் ஆகம் தரணியில் புரளத்* தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த* தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே. (2)
கானிடை உருவை சுடு சரம் துரந்து* கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்*
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப* உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்*
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்* சென்று சென்று இறைஞ்சிட*
பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்* இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்* கொழுஞ் சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்* வெண் துகில் கொடி என விரிந்து*
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!* தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்*
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்* பேர் அருளாளன் எம் பெருமான்*
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்* ஆரமும் வாரி வந்து*
அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்* பெரு முலை சுவைத்திட*
பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட* வளர்ந்த என் தலைவன்*
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த* செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,*
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,* வதரி ஆச்சிரமத்து உள்ளானே
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து* ஒரு மறத் தொழில் புரிந்து*
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த* பனி முகில் வண்ணன் எம் பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த* கரு வரை பிளவு எழக் குத்தி*
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்*
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்* எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க* ஆயிரம் முகத்தினால் அருளி*
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த* மன்னவன் பொன் நிறத்து உரவோன்*
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா* உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்*
தான் முனிந்து இட்ட* வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்* குரை கடல் உலகு உடன் அனைத்தும்*
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த* உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து* அங்கு அவனியாள் அலமரப்*
பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
காண்டாவனம் என்பது ஓர் காடு* அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து* அரியாய் நீண்டான்*
குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே*
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து* அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்*
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்* பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்*
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்* பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்*
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்* அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்*
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அமரில்*
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி* பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட*
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு* அணை கட்டி வரம்பு உருவ*
மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட* படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்* கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்*
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்* கடலும் சுடரும் இவை உண்டும்*
எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்* அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்* பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்*
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்* புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அவுணன்*
பகராதவன் ஆயிரம் நாமம்* அடிப் பணியாதவனை பணியால் அமரில்*
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பிச்சச் சிறு பீலி பிடித்து* உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்*
அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்* அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*
நச்சி நமனார் அடையாமை* நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு*
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பேசும் அளவு அன்று இது வம்மின்* நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்*
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்* அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்* மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்* சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து* முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* நின்மலன் தாள் அணைகிற்பீர்*
நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள* படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்* மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ* நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து* பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்* கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று* கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.
செங்கமலத்து அயன்அனைய மறையோர்* காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்* அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்* கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்* மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி* கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து* இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட* பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்* இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு* பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி* அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ* மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே*
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி* வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட* கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்* எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை* கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப* மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்*
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி* ஆடவரை மட மொழியார் முகத்து* இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்* அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன* இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்* மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்* பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு* மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த* குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு* திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நிலமடந்தைதனை இடந்து புல்கிக்* கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்*
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்* ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி* எண் திசையும் மண்டலமும் மண்டி*
அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்* முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து* ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்* கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி* சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*
உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே.
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பைகொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே.
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர
கொண்ட* ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்*
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்*
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்*
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய*
தானும்ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்* நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்* சேர் தென் அரங்கமே
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம்
மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிர*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து* நீர்
இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாதமுன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து* எம்மை
எம் கோலம் ஐயா!* என் இனிக் காண்பது? என்னாதமுன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாதமுன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
விலங்கும் கயலும்* வேலும் ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ்தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது என்று இகழாதமுன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றி சிரித்து* இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன்முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார்தம்மைக்*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாதமுன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாதமுன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* செல்வத்-
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* காண்மின் என் தலைமேலாரே*
அம் புருவ வரி நெடுங் கண்* அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனிமேல்* இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளைக்*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரின் பொலிகின்றாரே*
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலைஅதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்
தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*.
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* துணை இலேன் சொல்லுகின்றேன்*
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்* வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்*
மை விரியும் மணி வரைபோல்* மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடிவைச் சிந்தித்தேற்கு* என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்புதானே*.
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாதபாவங்கள் சேரா* மேலை-
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகி* கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என்கொலோ* விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
தள்ள தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே*.
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்* நும் துணைக் கையால் தொழுது நின்றே*.
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.! (2)
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்துஏத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
விண்ட மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*
வண்டு நறுந்துழாய்* வந்துஊதாய் கோல்தும்பீ!
நீர் மலிகின்றது ஓர்* மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருஆகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
ஏர்ஆர் மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
பார்ஆர் உலகம்* பரவ பெருங்கடலுள்,*
கார்ஆமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்ஆர் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
மார்வில் திருவன்* வலன்ஏந்து சக்கரத்தன்,*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
தாரில் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார்மன்னு* தாசரதிஆய தடமார்வன்,*
காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாம நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலர்எல்லாம்* ஊதாதே,* வாள்அரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
கொந்து நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
வண்டு அமரும் சோலை* வயல்ஆலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானைத்,*
தொண்டரோம் பாட* நினைந்துஊதாய் கோல்தும்பீ! (2)
காவார் மடல்பெண்ணை* அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2)
முன்னம் குறள்உருஆய்* மூவடிமண் கொண்டுஅளந்த,*
மன்னன் சரிதைக்கே* மால்ஆகி பொன்பயந்தேன்,*
பொன்னம் கழிக்கானல்* புள்இனங்காள்! புல்லாணி*
அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு* ஆங்குஇதனைச் செப்புமினே
வவ்வி துழாய்அதன்மேல்* சென்ற தனிநெஞ்சம்,*
செவ்வி அறியாது* நிற்கும்கொல் நித்திலங்கள்*
பவ்வத் திரைஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
தெய்வச் சிலையாற்கு* என் சிந்தைநோய் செப்புமினே.
பரிய இரணியனது ஆகம்* அணிஉகிரால்,*
அரிஉருஆய்க் கீண்டான் அருள்* தந்தவா! நமக்கு,*
பொருதிரைகள் போந்துஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
அரிமலர்க்கண் நீர்ததும்ப* அம்துகிலும் நில்லாவே.
வில்லால் இலங்கை மலங்க* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டுஇருந்தேனே (2)
சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்* தேரோடும் போய்மறைந்தான்,*
அழன்று கொடிதுஆகி* அம்சுடரோன் தான்அடுமால்,*
செழுந்தடம் பூஞ்சோலை சூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
இழந்திருந்தேன் என்தன்* எழில்நிறமும் சங்குமே.
கனைஆர் இடிகுரலின்* கார்மணியின் நாஆடல்,*
தினையேனும் நில்லாது* தீயில் கொடிதாலோ,*
புனைஆர் மணிமாடப்* புல்லாணி கைதொழுதேன்,*
வினையேன்மேல் வேலையும்* வெம்தழலே வீசுமே.
தூம்புஉடைக்கை வேழம்* வெருவ மருப்புஒசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெம்தழலே.
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதுஅலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே.
பொன்அலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு* வான்நாடும் முன்னுவரே (2)
சந்த மலர்க்குழல் தாழ* தான் உகந்துஓடி தனியே-
வந்து,* என் முலைத் தடம்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துஉண்ணும் அமுதே,*
எந்தை பெருமானே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே (2)
வங்க மறிகடல் வண்ணா!* மாமுகிலே ஒக்கும் நம்பீ*
செங்கண் நெடிய திருவே* செங்கமலம் புரை வாயா,*
கொங்கை சுரந்திட உன்னைக்* கூவியும் காணாது இருந்தேன்*
எங்குஇருந்து ஆயர்களோடும்* என் விளையாடுகின்றாயே
திருவில் பொலிந்த எழில்ஆர்* ஆயர்தம் பிள்ளைகளோடு*
தெருவில் திளைக்கின்ற நம்பீ* செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*
உருகிஎன் கொங்கையின் தீம்பால்* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,*
மருவிக் குடங்கால் இருந்து* வாய்முலை உண்ண நீ வாராய்
மக்கள் பெறுதவம் போலும்* வையத்து வாழும் மடவார்*
மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்* முதல்வா மதக்களிறுஅன்னாய்*
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி* நின் கையில் தருவன்*
ஒக்கலை மேல்இருந்து* அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
மைத்த கருங்குஞ்சி மைந்தா!* மாமருதுஊடு நடந்தாய்,*
வித்தகனே விரையாதே* வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*
இத்தனை போதுஅன்றி என்தன்* கொங்கை சுரந்து இருக்ககில்லா,*
உத்தமனே! அம்மம் உண்ணாய்* உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்
பிள்ளைகள் செய்வன செய்யாய்* பேசின் பெரிதும் வலியை*
கள்ளம் மனத்தில் உடையை* காணவே தீமைகள் செய்தி*
உள்ளம் உருகி என் கொங்கை* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற*
பள்ளிக் குறிப்புச் செய்யாதே* பால்அமுது உண்ணநீ வாராய்
தன்மகன்ஆக வன் பேய்ச்சி* தான்முலை உண்ணக் கொடுக்க*
வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி* முலைஉண்ட நம்பீ*
நன்மகள் ஆய்மகளோடு* நானில மங்கை மணாளா*
என்மகனே! அம்மம் உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே
உந்தம் அடிகள் முனிவர்* உன்னைநான் என்கையில் கோலால்*
நொந்திட மோதவும் கில்லேன்* நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*
வந்து புகுதரும் போது* வானிடைத் தெய்வங்கள் காண*
அந்திஅம் போது அங்கு நில்லேல்* ஆழிஅம் கையனே! வாராய்
பெற்றத் தலைவன் எம்கோமான்* பேர்அருளாளன் மதலாய்,*
சுற்றக் குழாத்து இளங்கோவே!* தோன்றிய தொல்புகழாளா,*
கற்றுஇனம் தோறும் மறித்து* கானம் திரிந்த களிறே*
எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே* எம்பெருமான் இருந்தாயே
இம்மை இடர்கெட வேண்டி* ஏந்துஎழில் தோள்கலி அன்றி*
செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த* விண்ணவர் ஆகலும்ஆமே (2)
நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன* அரண்ஆவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி* அகல் வான்உரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி* திசைமண்ணும் விண்ணும் உடனே*
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப* இமையோர்கள் நின்று கடைய,*
பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து* சுழலக் கிடந்து துயிலும்,*
அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன* திருமால் நமக்கு ஓர் அரணே.
தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்* உலகுஏழினோடும் உடனே,*
மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற* மலைஆறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்* ஒருபால் ஒடுங்க வளர்சேர்,*
ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி* அதுநம்மை ஆளும் அரசே.
தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க* எரிகான்றுஇரண்டு தறுகண்,*
அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று* பரியோன் சினங்கள் அவிழ,*
வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்* மதியாது சென்று ஓர்உகிரால்*
பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு* பெருநீரில் மும்மை பெரிதே.
வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி* அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர*
செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்* அடிமூன்று இரந்து பெறினும்,*
மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச* மலரோன் வணங்க வளர்சேர்,*
அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்* அது நம்மை ஆளும் அரசே.
இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்* ஒருநாலும் ஒன்றும் உடனே,*
செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க* மழுவாளில் வென்ற திறலோன்,*
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்* புலமங்கை கேள்வர் புகழ்சேர்,*
பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி* யவர் நம்மை ஆள்வர் பெரிதே.
இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன* இனம்ஆய மான்பின் எழில்சேர்*
அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு* ஓர்உருஆய மானை அமையா,*
கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை* பொடிஆக வென்றி அமருள்,*
சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமால் நமக்குஓர் அரணே.
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண* முதலோடு வீடும் அறியாது,*
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப* எழில் வேதம் இன்றி மறைய,*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,*
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த* அது நம்மை ஆளும் அரசே.
துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது* தொழுமின்கள் தொண்டர்! தொலைய*
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி* உகஉண்டு வெண்ணெய் மருவி,*
பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட* அதனோடும் ஓடி அடல்சேர்,*
இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்* வினைப் பற்றுஅறுக்கும் விதியே.
கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவர்ஆள்வர் உம்பர் உலகே. (2)
அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!* நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய்* ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு* என் விடு தூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன் வைக்கில்* வைப்புண்டால் என் செயுமோ? (2)
என் செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என் தூதாய்*
என் செய்யும் உரைத்தக்கால்?* இனக் குயில்காள் நீர் அலிரே?*
முன் செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன் செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே.
விதியினால் பெடை மணக்கும்* மென்நடைய அன்னங்காள்!*
மதியினால் குறள் மாணாய்* உலகு இரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல் வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
மதி எல்லாம் உள் கலங்கி* மயங்குமால் என்னீரே!
என் நீர்மை கண்டு இரங்கி* இது தகாது என்னாத*
என் நீல முகில் வண்ணற்கு* என் சொல்லி யான் சொல்லுகேனோ?*
நன் நீர்மை இனி அவர்கண்* தங்காது என்று ஒரு வாய்ச்சொல்*
நன் நீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ?
நல்கித் தான் காத்து அளிக்கும்* பொழில் ஏழும்; வினையேற்கே*
நல்கத் தான் ஆகாதோ?* நாரணனைக் கண்டக்கால்*
மல்கு நீர்ப் புனல் படப்பை* இரை தேர் வண் சிறு குருகே!*
மல்கு நீர்க் கண்ணேற்கு* ஓர் வாசகம் கொண்டு அருளாயே.
அருளாத நீர் அருளி* அவர் ஆவி துவராமுன்*
அருள் ஆழிப் புட்கடவீர்* அவர் வீதி ஒருநாள் என்று*
அருள் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
அருள் ஆழி வரி வண்டே!* யாமும் என் பிழைத்தோமே?
என்பு இழை கோப்பது போலப்* பனி வாடை ஈர்கின்றது*
என் பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என் பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங் கிளியே!* யான் வளர்த்த நீ அலையே?
நீயலையே ? சிறு பூவாய்!* நெடுமாலார்க்கு என் தூதாய்*
நோய் எனது நுவல் என்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணி மாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது-
வாய் அலகில் இன் அடிசில்* வைப்பாரை நாடாயே.
நாடாத மலர் நாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலர் அடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினை அற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனி வாடாய்!* உரைத்து ஈராய் எனது உடலே.
உடல் ஆழிப் பிறப்பு வீடு* உயிர் முதலா முற்றுமாய்க்*
கடல் ஆழி நீர் தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
அடல் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
விடல் ஆழி மட நெஞ்சே!* வினையோம் ஒன்றாம் அளவே.
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்* பெருமான் கண்ணனை*
வள வயல் சூழ் வண் குருகூர்ச்* சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப் பத்தின்*
வள உரையால் பெறலாகும்* வான் ஓங்கு பெரு வளமே. (2)