பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட* திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று*
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட* ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)
தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற்கன்றியும்* மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)
கருளுடைய பொழில்மருதும்* கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்*
உருளுடைய சகடரையும் மல்லரையும்* உடையவிட்டு ஓசைகேட்டான்*
இருளகற்றும் எறிகதிரோன்* மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி*
அருள்கொடுத்திட்டு அடியவரை* ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்*
அதில் நாயகராகி வீற்றிருந்த* மணவாளர் மன்னுகோயில்*
புதுநான் மலர்க்கமலம்* எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்*
பொதுநாயகம் பாவித்து* இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*
சேமமுடை நாரதனார்* சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்*
பூமருவிப் புள்ளினங்கள்* புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.
மைத்துனன்மார் காதலியை* மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட* உயிராளன் உறையும்கோயில்*
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்*
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்* திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.
குறட்பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி*
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை* கொடுத்துகந்த எம்மான்கோயில்*
எறிப்புடைய மணிவரைமேல்* இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.
உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி*
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்* தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.
தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அறியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்*
சேவலொடு பெடையன்னம்* செங்கமல மலரேறி ஊசடிலாப்*
பூவணைமேல் துதைந்தெழு* செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச்செய்யும் நாந்தகமென்னும்*
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கையாளன்*
இரவாளன் பகலாளன் எனையாளன்* ஏழுலகப் பெரும் புரவாளன்*
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.
கைந்நாகத்திடர் கடிந்த* கனலாழிப் படையுயான் கருதும்கோயில்*
தென்நாடும் வடநாடும் தொழநின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்* விரித்ததமிழ் உரைக்கவல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்* இணைபிரியாது இருப்பர் தாமே.(2)
நும்மைத் தொழுதோம்* நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!* மருவினிய
மைந்தா* அம் தண் ஆலி மாலே!* சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ* என்
எந்தாய்! இந்தளூராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்
பேசுகின்றது இதுவே* வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்*
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்*
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே!
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு
தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர்! இந்தளூரீர்!* வாழ்ந்தே போம் நீரே!
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும்*
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்* இந்தளூரீரே!
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா*
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும்தம் அடிக்கள் காட்டில்* உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலைநின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே!
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே.
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானைக்*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
சாம் ஆறும் கெடும் ஆறும்* தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடந்து அலற்றும்* இவை என்ன உலகு இயற்கை?,*
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்* அரவு அணையாய்! அம்மானே,*
கூமாறே விரைகண்டாய்* அடியேனை குறிக்கொண்டே.
கொண்டாட்டும் குலம் புனைவும்* தமர் உற்றார் விழு நிதியும்,*
வண்டு ஆர் பூங் குழலாளும்,* மனை ஒழிய உயிர் மாய்தல்,*
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை* கடல்வண்ணா! அடியேனைப்*
பண்டேபோல் கருதாது* உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.
கொள் என்று கிளர்ந்து எழுந்த* பெரும் செல்வம் நெருப்பு ஆக,*
கொள் என்று தமம் மூடும்* இவை என்ன உலகு இயற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேனை* உனது அருளால் வாங்காயே.
வாங்கு நீர் மலர் உலகில்* நிற்பனவும் திரிவனவும்,*
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்* பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கு இதன்மேல் வெம் நரகம்* இவை என்ன உலகு இயற்கை?*
வாங்கு எனை நீ மணிவண்ணா!* அடியேனை மறுக்கேலே.
மறுக்கி வல் வலைப்படுத்தி* குமைத்திட்டு கொன்று உண்பர்,*
அறப்பொருளை அறிந்து ஓரார்* இவை என்ன உலகு இயற்கை?*
வெறித் துளவ முடியானே!* வினையேனை உனக்கு அடிமை-
அறக்கொண்டாய்,* இனி என் ஆர் அமுதே!* கூயருளாயே.
ஆயே! இவ் உலகத்து* நிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்று ஒரு பொருளும்* இன்றி நீ நின்றமையால்,*
நோயே மூப்பு இறப்பு பிறப்பு* பிணியே என்று இவை ஒழிய,*
கூயேகொள் அடியேனை* கொடு உலகம் காட்டேலே.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
கூட்டுதி நின் குரை கழல்கள்* இமையோரும் தொழாவகைசெய்து,*
ஆட்டுதி நீ அரவு அணையாய்!* அடியேனும் அஃது அறிவன்,*
வேட்கை எல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* கூட்டினை நான் கண்டேனே.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்* ஐங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
ஒண் தொடியாள் திருமகளும்* நீயுமே நிலாநிற்ப,*
கண்ட சதிர் கண்டொழிந்தேன்* அடைந்தேன் உன் திருவடியே.
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)