பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
புள்உருஆகி நள்இருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2)
மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி* மால்விடை ஏழும் அடர்த்து,* ஆயர்-
அன்று நடுங்க ஆநிரை காத்த* ஆண்மை கொலோ அறியேன் நான்,*
நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!* நீஇவள் தன்னை நின் கோயில்,*
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா* முன் கைவளை கவர்ந்தாயே.
ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி* ஆற்றலை ஆற்றல் மிகுத்து,*
கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்* கடந்தநின் கடுந்திறல் தானோ,*
நேர்இழை மாதை நித்திலத் தொத்தை* நெடுங் கடல் அமுதுஅனை யாளை,*
ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்* இவள்எனக் கருதுகின்றாயே.
மல்கிய தோளும் மான்உரி அதளும்* உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த* கரதலத்து அமைதியின் கருத்தோ?*
அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்* தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே.
செருஅழியாத மன்னர்கள் மாள* தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
அருவழி வானம் அதர்படக் கண்ட* ஆண்மைகொலோ? அறியேன் நான்,*
திருமொழி எங்கள் தேமலர்க் கோதை* சீர்மையை நினைந்திலை அந்தோ,*
பெருவழி நாவல் கனியினும் எளியள்* இவள்எனப் பேசுகின்றாயே
அரக்கியர் ஆகம் புல்என வில்லால்* அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற* சேவகமோ? செய்ததுஇன்று*
முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்* கொண்டு முன்னே நின்று போகாய்,*
எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்* என்செய்வது? எந்தை பிரானே!
ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச* அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ* படைமழுப் பற்றிய வலியோ?*
மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!* குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!
பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற* வள்உகிரால் பிளந்து,* அன்று-
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த* பெருமைகொலோ செய்தது இன்று,*
பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை* பெருமையை நினைந்திலை பேசில்,*
கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்* இவள்எனக் கருதுகின்றாயே
நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்* நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று* அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*
பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை* பாவையைப் பாவம் செய்தேனுக்கு,*
ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக* நின் மனத்து வைத்தாயே
வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி* மெய்ம்மையே நின்று எம்பெருமானை,*
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்* சித்தமும் திருவொடு மிகுமே (2)
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரைக்* கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளம்ஏந்திய என்அப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
நாரணன் தமரைக் கண்டுஉகந்து* நல்நீர்முகில்*
பூரண பொன்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றுஆர்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர்உலகே.
தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-
பொழிவனர்* பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்* முனிவர்கள்*
வழிஇது வைகுந்தர்க்கு என்று* வந்து எதிரே.
எதிர்எதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவர்அவரவர்* கைந்நிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்குஒத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே.
மாதவன் தமர்என்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதுஇடம்* புகுதுக என்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*
வேதநல் வாயவர்* வேள்விஉள் மடுத்தே.
வேள்விஉள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*
ஆள்மின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாள்ஒண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே.
மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடந்த எம்கேசவன்* கிளர்ஒளி மணிமுடி*
குடந்தை எம்கோவலன்* குடிஅடி யார்க்கே
குடிஅடியார் இவர்* கோவிந்தன் தனக்குஎன்று*
முடிஉடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடிஅணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*
வடிவுஉடை மாதவன்* வைகுந்தம் புகவே.
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதுஇடம் புகுதஎன்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே.
விதிவகை புகுந்தனர்என்று* நல்வேதியர்*
பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நல்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*
மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே.
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே. (2)