பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வியம்உடை விடைஇனம்* உடைதர மடமகள்*
குயம்மிடை தடவரை* அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்* இளையவர் நடைபயில்*
கயம்மிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
இணைமலி மருதுஇற* எருதினொடு இகல்செய்து*
துணைமலி முலையவள்* மணம்மிகு கலவியுள்*
மணம்மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம்மலி கணபுரம்* அடிகள்தம் இடமே.
புயல்உறு வரைமழை* பொழிதர மணிநிரை*
மயல்உற வரைகுடை* எடுவிய நெடியவர்*
முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*
கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே.
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய்து அமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதுஎழ*
அண்டமொடு அகல்இடம்* அளந்தவர் அமர்செய்து*
விண்டவர் பட* மதிள்இலங்கை முன்எரிஎழக்*
கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே.
மழுவுஇயல் படைஉடை* அவன்இடம் மழைமுகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*
கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*
எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*
எரிதியொடு எனஇன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
படிபுல்கும் அடிஇணை* பலர்தொழ மலர்வைகு*
கொடிபுல்கு தடவரை* அகலம்அது உடையவர்*
முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*
கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே
புலம்மனும் மலர்மிசை* மலர்மகள் புணரிய*
நிலமகள்என இன* மகளிர்கள் இவரொடும்*
வலம்மனு படையுடை* மணிவணர் நிதிகுவைக்*
கலம்மனு கணபுரம்* அடிகள்தம் இடமே.
மலிபுகழ் கணபுரம்உடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்* வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை* விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2)
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்அடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்துஓர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை* வாமனன்தான் புகுந்து* என்தன்
கருத்தைஉற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சுஆளும்*
திருந்தாத ஓர்ஐவரைத்* தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தரும்தான் அருள்தான்* இனியான் அறியேனே. (2)
அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்உள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுஅல்லால்*
பொருள் தான்எனில்* மூவுலகும் பொருளல்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.
மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமரர்க்கு* அரிஏறு எனதுஅம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதுஎன்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே.
திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து என்உள்-
திகழும்* மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்*
புகழும் புகழ்* மற்றுஎனக்கும் ஓர்பொருளே?
பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத்
தருமேல்* பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*
கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே.
செவ்வாய்உந்தி* வெண்பல் சுடர்க்குழை தம்மோடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுஉள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றுஅருளே.
அறியேன் மற்றருள்* என்னைஆளும் பிரானார்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*
சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்* தன்
நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே.
வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் எவரும்*
வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்* தம்
வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே.
வைத்தேன் மதியால்* எனதுஉள்ளத்துஅகத்தே*
எய்த்தே ஒழிவேன்அல்லேன்* என்றும் எப்போதும்*
மொய்த்துஏய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்துஏய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே
சுடர்ப்பாம்பணை நம்பரனை* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து* இப்பத்தும் சன்மம்
விடத்* தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே (2)