பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
திருவுக்கும் திருஆகிய செல்வா!* தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!* உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்* உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* (2)
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி* பாவை பூமகள் தன்னொடும் உடனே-
வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்* மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!* சாமவேதியனே! நெடுமாலே*
அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள்உடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்* சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்* போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்*
ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்* பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்-
வரனே! மாதவனே! மதுசூதா!* மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
நரனே! நாரணனே! திருநறையூர்!* நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்-
அரனே* ஆதிவராகம் முன்ஆனாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்* பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்* பண்பாளா! பரனே! பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை* கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-
தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்- தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
சேயாய்* கிரேத திரேத துவாபர- கலியுகம்* இவை நான்கும் முன்ஆனாய்*
ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!* கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!* எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
நெடியானே! கடிஆர் கலிநம்பீ!* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்*
கடிஆர் காளையர்ஐவர் புகுந்து* காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்* கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி*
அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி* கூறை சோறு இவை தா என்று குமைத்து-
போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே*
தீவாய் நாகணையில் துயில்வானே!* திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி- ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகுஆண்டு* மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே* (2)
ஏழையர் ஆவிஉண்ணும்* இணைக் கூற்றம்கொலோ அறியேன்,*
ஆழிஅம் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2)
ஆட்டியும் தூற்றியும் நின்று* அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?*
மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*
ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.
வாலியதுஓர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*
நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுள்எல்லாம்* வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே.
இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,* மதனன்
தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,*
என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே
என்றும் நின்றேதிகழும்* செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்ஆவிஅடும்* அணி முத்தம்கொலோ? அறியேன்,*
குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதுஆவிஅடும்*
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே
உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்புஅணையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றும்இன்றி* அடுகின்றன காண்மின்களே
காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,*
நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*
சேண்மன்னு நால்தடம்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*
கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே
கோள்இழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,.*
கோள்இழைத் தண் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோள்இழையாஉடைய* கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன்,
கோள்இழை வாள் முகமாய்* கொடியேன் உயிர் கொள்கின்றதே?
கொள்கின்ற கோள் இருளைச்* சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,*
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?* அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தண்துழாய்* விரை நாற வந்து என் உயிரைக்,*
கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே.
நிற்றி முற்றத்துள் என்று* நெரித்த கையர் ஆய்*
என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*
முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே,*
ஒற்றுமை கொண்டது உள்ளம்* அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?
கட்கு அரிய பிரமன் சிவன்* இந்திரன் என்று இவர்க்கும்,*
கட்கு அரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்* இவையும் ஒரு பத்தும் வல்லார்,*
உட்கு உடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)