பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரைத்*
தோளும் தலையும் துணிவு எய்தச்* சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேல்கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே.
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்ப* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங்காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்*
புள் ஆர் புறவில் பூங் காவி* பொலன் கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே.
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே.
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட* விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே.
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்* வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க* சங்கம் வாய் வைத்தான்*
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே.
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல் அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்ற* கற்பு வான் இடறி,*
சேரும் நல் வளம்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போரும் கொல் உரையீர்* கொடியேன் கொடி பூவைகளே!
பூவை பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,*
யாவையும் திருமால்* திருநாமங்களே கூவி எழும்,* என்
பாவை போய் இனித்* தண் பழனத் திருக்கோளூர்க்கே,*
கோவை வாய் துடிப்ப* மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?
கொல்லை என்பர்கொலோ* குணம் மிக்கனள் என்பர்கொலோ,*
சில்லை வாய்ப் பெண்டுகள்* அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோளூர்க்கே,*
மேல் இடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்* என் சிறுத்-
தேவிபோய்,* இனித்தன் திருமால்* திருக்கோளூரில்,*
பூ இயல் பொழிலும்* தடமும் அவன் கோயிலும் கண்டு,*
ஆவி உள் குளிர* எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?
இன்று எனக்கு உதவாது அகன்ற* இளமான் இனிப்போய்,*
தென் திசைத் திலதம் அனைய* திருக்கோளூர்க்கே
சென்று,* தன் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*
நின்று நின்று நையும்* நெடும் கண்கள் பனி மல்கவே.
மல்கு நீர்க் கண்ணொடு* மையல் உற்ற மனத்தினளாய்,*
அல்லும் நன் பகலும்* நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,*
செல்வம் மல்கி அவன் கிடந்த* திருக்கோளுர்க்கே,*
ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?
ஒசிந்த நுண் இடைமேல்* கையை வைத்து நொந்து நொந்து,*
கசிந்த நெஞ்சினளாய்* கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,*
ஒசிந்த ஒண் மலராள்* கொழுநன் திருக்கோளூர்க்கே,*
கசிந்த நெஞ்சினளாய்* எம்மை நீத்த எம் காரிகையே?
காரியம் நல்லனகள்* அவை காணில் என் கண்ணனுக்கு என்று,*
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்* கிடக்க இனிப் போய்,*
சேரி பல் பழி தூஉய் இரைப்ப* திருக்கோளூர்க்கே,*
நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைந்திலளே.
நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடும் கண் இளமான் இனிப்போய்*
அனைத்து உலகும் உடைய* அரவிந்தலோசனனைத்,*
தினைத்தனையும் விடாள்* அவன் சேர் திருக்கோளூர்க்கே,*
மனைக்கு வான் பழியும் நினையாள்* செல்ல வைத்தனளே.
வைத்த மா நிதியாம்* மதுசூதனையே அலற்றி,*
கொத்து அலர் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்து உரைப்பார்* திகழ் பொன் உலகு ஆள்வாரே.