பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
காசும் கறைஉடைக் கூறைக்கும்* அங்குஓர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்குஅவத்தப் பேர்இடும்* ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு* நீங்கள் தேனித்துஇருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள் (2)
அங்குஒருகூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*
மங்கிய மானிடசாதியின்* பேர்இடும் ஆதர்காள்!*
செங்கண்நெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*
பிச்சைபுக்குஆகிலும்* எம்பிரான் திருநாமமே-
நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*
மானிட சாதியின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*
மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
நாடும் நகரும் அறிய* மானிடப் பேர்இட்டு*
கூடிஅழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு-
எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*
கண்ணுக்குஇனிய* கருமுகில் வண்ணன் நாமமே-
நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்
நம்பி பிம்பிஎன்று* நாட்டு மானிடப் பேர்இட்டால்*
நம்பும் பிம்பும்எல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந்தாமரைக் கண்ணன்* பேர்இட்டுஅழைத்தக்கால்*
நம்பிகாள் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
ஊத்தைக்குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-
மூத்திரப்பிள்ளையை* என் முகில்வண்ணன் பேர் இட்டு*
கோத்துக் குழைத்துக்* குணாலம்ஆடித் திரிமினோ*
நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
சீர்அணி மால்* திருநாமமே இடத்தேற்றிய*
வீர்அணி தொல்புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்* ஒன்பதோடுஒன்றும் வல்லவர்*
பேர்அணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2)
தாஅளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே.
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்*
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்!*
துண் என மாற்றார்தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*
கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி*
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்*
கருத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
முனைமுகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* ஆங்கு
அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே*
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்*
கனை கழல் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
பட அரவு உச்சிதன்மேல்* பாய்ந்து பல் நடங்கள்செய்து*
மடவரல் மங்கைதன்னை* மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மல்லரை அட்டு மாள* கஞ்சனை மலைந்து கொன்று*
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்*
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய*
கல் அரண் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி*
மாத்தமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்*
பூத்தமர் சோலை ஓங்கி* புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்*
காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
ஏவிளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று*
காவளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*
பூவளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனே! களைகண் நீயே.
சந்தம் ஆய் சமயம் ஆகி* சமய ஐம் பூதம் ஆகி*
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்*
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கைக்*
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந் தெய்வம்,*
இசைப்பு இன்றி* நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
திசைப்பு இன்றியே* சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றே இல் பெறும் இது காண்மினே.
இது காண்மின் அன்னைமீர்!* இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மது வார் துழாய்முடி* மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,*
அதுவே இவள் உற்ற நோய்க்கும்* அரு மருந்து ஆகுமே.
மருந்து ஆகும் என்று அங்கு ஓர்* மாய வலவை சொல் கொண்டு,* நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்* களன் இழைத்து என் பயன்?*
ஒருங்காகவே உலகு ஏழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,*
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே.
இவளைப் பெறும்பரிசு* இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,*
குவளைத் தடங் கண்ணும்* கோவைச் செவ்வாயும் பயந்தனள்,*
கவளக் கடாக் களிறு அட்ட பிரான்* திருநாமத்தால்,*
தவளப் பொடிக்கொண்டு* நீர்இட்டிடுமின் தணியுமே.
தணியும் பொழுது இல்லை* நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இது அல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமர் அடி நீறுகொண்டு*
அணிய முயலின்* மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
அணங்குக்கு அரு மருந்து என்று* அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்*
துணங்கை எறிந்து* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
உணங்கல் கெடக்* கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வல்லாரையே.
வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
கீழ்மையினால் அங்கு ஓர்* கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,*
நாழ்மை பல சொல்லி* நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இந் நோய்க்கும் ஈதே மருந்து,*
ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்* அவனை அல்லால்,*
நும் இச்சை சொல்லி* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
மன்னப்படும் மறைவாணனை* வண் துவராபதி-
மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுது ஆடுமே.
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.