பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
தன்முகத்துச் சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்*
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்* புழுதி அளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்* கூத்தினை இள மா மதீ!*
நின்முகம் கண்ணுள ஆகில்* நீ இங்கே நோக்கிப் போ (2)
என் சிறுக்குட்டன்* எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
தன் சிறுக்கைகளால்* காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணனோடு* ஆடல் ஆட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சுற்றும் ஒளிவட்டம்* சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
எத்தனை செய்யிலும்* என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்* உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிது ஓடி வா
சக்கரக் கையன்* தடங்கண்ணால் மலர விழித்து*
ஒக்கலைமேல் இருந்து* உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
தக்கது அறிதியேல்* சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட் பெறாத* மலடன் அல்லையேல் வா கண்டாய்
அழகிய வாயில்* அமுத ஊறல் தெளிவுற*
மழலை முற்றாத இளஞ்சொல்லால்* உன்னைக் கூகின்றான்*
குழகன் சிரீதரன்* கூவக் கூவ நீ போதியேல்*
புழையில ஆகாதே* நின்செவி புகர் மா மதீ!
தண்டொடு சக்கரம்* சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
கண் துயில்கொள்ளக் கருதிக்* கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப்பால் அறா கண்டாய்* உறங் காவிடில்*
விண்தனில் மன்னிய* மா மதீ! விரைந்து ஓடி வா
பாலகன் என்று* பரிபவம் செய்யேல்* பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த* சிறுக்கன் அவன் இவன்*
மேல் எழப் பாய்ந்து* பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
மாலை மதியாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை* இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை* மாவலியிடைச் சென்று கேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்* நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
நிறைமதீ! நெடுமால்* விரைந்து உன்னைக் கூகின்றான்
தாழியில் வெண்ணெய்* தடங்கை ஆர விழுங்கிய*
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்* உன்னைக் கூகின்றான்*
ஆழிகொண்டு உன்னை எறியும்* ஐயுறவு இல்லை காண்*
வாழ உறுதியேல்* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
மைத்தடங் கண்ணி* யசோதை தன்மகனுக்கு* இவை-
ஒத்தன சொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்* விரித்த தமிழ் இவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடர் இல்லையே (2)
கலையும் கரியும் பரிமாவும்* திரியும் கானம் கடந்துபோய்*
சிலையும் கணையும் துணையாகச்* சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி* மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்து உகந்தான்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
கடம் சூழ் கரியும் பரிமாவும்* ஒலி மாத் தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை* பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்* இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
உலவு திரையும் குல வரையும்* ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்*
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளையத்*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற* அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்*
விளங்கு சுடர் ஆழி* விண்ணோர் பெருமான் நண்ணார்முன்*
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்* கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாய் ஆய் வந்த பேய் உயிரும்* தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்*
தூய வரி உருவின் குறளாய்ச் சென்று* மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தா என்று* உலகு ஏழும் தாயான்*
காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்* அரி ஆய் பரிய இரணியனை*
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த* ஒருவன் தானே இரு சுடர் ஆய்*
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்* மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்*
தான் ஆய் தானும் ஆனான் தன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
வெந்தார் என்பும் சுடு நீறும்* மெய்யில் பூசி கையகத்து*
ஓர் சந்து ஆர் தலைகொண்டு* உலகு ஏழும் திரியும்* பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன* இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
சந்து ஆர் பொழில் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தொண்டு ஆம் இனமும் இமையோரும்* துணை நூல் மார்வின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று* அணையும் கோயில் அருகு எல்லாம்*
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத்*
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே*
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர் சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்துஆய் முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன் பெருமை* மாசூணாதோ? மாயோனே!
மா யோனிகளாய் நடை கற்ற* வானோர் பலரும் முனிவரும்*
நீ யோனிகளைப் படை என்று* நிறை நான்முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்* தான் ஓர் உருவனே.
தான் ஓர் உருவே தனிவித்தாய்* தன்னின் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மா மாயன்* வைகுந்தன் எம் பெருமானே.
மானேய் நோக்கி மடவாளை* மார்பில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டை வில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வான் ஆர் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே.
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனை சேர் ஆயர் குல முதலே!* மா மாயனே! மாதவா!*
சினை ஏய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய் இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே.
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடி சேர் தண் அம் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
செடி ஆர் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
உண்டாய் உலகு ஏழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்* உவலை ஆக்கை நிலை எய்தி*
மண் தான் சோர்ந்தது உண்டேலும்* மனிசர்க்கு ஆகும் பீர்* சிறிதும்-
அண்டாவண்ணம் மண் கரைய* நெய் ஊண் மருந்தோ? மாயோனே!
மாயோம் தீய அலவலைப்* பெரு மா வஞ்சப் பேய் வீயத்*
தூய குழவியாய் விடப் பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன் வானோர் தனித் தலைவன்* மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்-
தாயோன் தம்மான் என் அம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து* மாயப் பற்று அறுத்து*
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்* திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி* அகலம் கீழ் மேல் அளவு இறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே!
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.