பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து* நீர்
இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாதமுன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து* எம்மை
எம் கோலம் ஐயா!* என் இனிக் காண்பது? என்னாதமுன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாதமுன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
விலங்கும் கயலும்* வேலும் ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ்தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது என்று இகழாதமுன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றி சிரித்து* இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன்முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார்தம்மைக்*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாதமுன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாதமுன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்* குன்றம் ஒன்று ஏந்தியதும்*
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும் பல*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் நன் பகலும் தவிர்கிலன்* என்ன குறை எனக்கே?
கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்* கெண்டை ஒண்கண்*
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்* மணந்ததும் மற்றும்பல,*
மாயக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ் உலகம் நிகரே?
நிகர் இல் மல்லரைச் செற்றதும்* நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,*
சிகர மா களிறு அட்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*
புகர்கொள் சோதிப் பிரான்தன்* செய்கை நினைந்து புலம்பி என்றும்*
நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே?
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்*
சாவப் பால் உண்டதும்* ஊர் சகடம் இறச் சாடியதும்,*
தேவக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என் இனி வேண்டுவதே?
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்* வீங்கு இருள்வாய்-
பூண்டு* அன்று அன்னைப் புலம்ப போய்* அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்*
காண்டல் இன்றி வளர்ந்து* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்* எனக்கு என்ன இகல் உளதே?
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்* இமில் ஏறுகள் செற்றதுவும்,*
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்* உட்பட மற்றும்பல,*
அகல் கொள் வையம் அளந்த மாயன்* என்னப்பன் தன் மாயங்களே,*
பகல் இராப் பரவப் பெற்றேன்* எனக்கு என்ன மனப் பரிப்பே?
மனப் பரிப்போடு அழுக்கு* மானிட சாதியில் தான்பிறந்து,*
தனக்கு வேண்டு உருக்கொண்டு* தான் தன சீற்றத்தினை முடிக்கும்,*
புனத் துழாய் முடி மாலை மார்பன்* என் அப்பன் தன் மாயங்களே,*
நினைக்கும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
நீள் நிலத்தொடு வான் வியப்ப* நிறை பெரும் போர்கள் செய்து*
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்* உட்பட மற்றும்பல,*
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்* என் அப்பன் தன் மாயங்களே*
காணும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?
கலக்க ஏழ் கடல் ஏழ்* மலை உலகு ஏழும் கழியக் கடாய்*
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்* உட்பட மற்றும் பல,*
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்* இவை உடை மால்வண்ணனை,*
மலக்கும் நா உடையேற்கு* மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க* ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி,* மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட* நூற்றிட்டுப் போய்,*
விண்மிசைத் தன தாமமேபுக* மேவிய சோதிதன்தாள்,*
நண்ணி நான் வணங்கப்பெற்றேன்* எனக்கு ஆர்பிறர் நாயகரே?
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்* முழு ஏழ் உலகும்,* தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து* அவை ஆய் அவை அல்லனும் ஆம்,*
கேசவன் அடி இணைமிசைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆவர் துவள் இன்றியே.