பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மாணிக்கம் கட்டி* வயிரம் இடை கட்டி*
ஆணிப் பொன்னால் செய்த* வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி உனக்குப்* பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே தாலேலோ*
வையம் அளந்தானே தாலேலோ (2)
உடையார் கனமணியோடு* ஒண் மாதுளம்பூ*
இடை விரவிக் கோத்த* எழிற் தெழ்கினோடும்*
விடை ஏறு காபாலி* ஈசன் விடுதந்தான்*
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ*
உலகம் அளந்தானே! தாலேலோ
என்தம்பிரானார்* எழிற் திருமார்வற்குச்*
சந்தம் அழகிய* தாமரைத் தாளற்கு*
இந்திரன் தானும்* எழில் உடைக் கிண்கிணி*
தந்து உவனாய் நின்றான் தாலேலோ*
தாமரைக் கண்ணனே! தாலேலோ
சங்கின் வலம்புரியும்* சேவடிக் கிண்கிணியும்*
அங்கைச் சரிவளையும்* நாணும் அரைத்தொடரும்*
அங்கண் விசும்பில்* அமரர்கள் போத்தந்தார்*
செங்கண் கருமுகிலே! தாலேலோ*
தேவகி சிங்கமே! தாலேலோ
எழில் ஆர் திருமார்வுக்கு* ஏற்கும் இவை என்று*
அழகிய ஐம்படையும்* ஆரமும் கொண்டு*
வழு இல் கொடையான்* வயிச்சிரவணன்*
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ*
தூமணி வண்ணனே தாலேலோ
ஓதக் கடலின்* ஒளிமுத்தின் ஆரமும்*
சாதிப் பவளமும்* சந்தச் சரிவளையும்*
மா தக்க என்று* வருணன் விடுதந்தான்*
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ*
சுந்தரத் தோளனே! தாலேலோ
கானார் நறுந்துழாய்* கைசெய்த கண்ணியும்*
வானார் செழுஞ்சோலைக்* கற்பகத்தின் வாசிகையும்*
தேனார் மலர்மேல்* திருமங்கை போத்தந்தாள்*
கோனே! அழேல் அழேல் தாலேலோ*
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ
கச்சொடு பொற்சுரிகை* காம்பு கனகவளை*
உச்சி மணிச்சுட்டி* ஒண்தாள் நிரைப் பொற்பூ*
அச்சுதனுக்கு என்று* அவனியாள் போத்தந்தாள்*
நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
நாராயணா! அழேல் தாலேலோ
மெய் திமிரும் நானப்* பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங்கண்ணுக்கு* அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* கொண்டு உவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ*
அரங்கத்து அணையானே! தாலேலோ
வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லை இடர்தானே (2)
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து* அன்று இணை அடி இமையவர் வணங்க*
தானவன் ஆகம் தரணியில் புரளத்* தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த* தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே. (2)
கானிடை உருவை சுடு சரம் துரந்து* கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்*
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப* உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்*
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்* சென்று சென்று இறைஞ்சிட*
பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்* இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்* கொழுஞ் சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்* வெண் துகில் கொடி என விரிந்து*
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!* தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்*
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்* பேர் அருளாளன் எம் பெருமான்*
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்* ஆரமும் வாரி வந்து*
அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்* பெரு முலை சுவைத்திட*
பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட* வளர்ந்த என் தலைவன்*
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த* செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,*
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,* வதரி ஆச்சிரமத்து உள்ளானே
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து* ஒரு மறத் தொழில் புரிந்து*
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த* பனி முகில் வண்ணன் எம் பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த* கரு வரை பிளவு எழக் குத்தி*
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்*
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்* எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க* ஆயிரம் முகத்தினால் அருளி*
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த* மன்னவன் பொன் நிறத்து உரவோன்*
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா* உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்*
தான் முனிந்து இட்ட* வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்* குரை கடல் உலகு உடன் அனைத்தும்*
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த* உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து* அங்கு அவனியாள் அலமரப்*
பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!* நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய்* ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு* என் விடு தூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன் வைக்கில்* வைப்புண்டால் என் செயுமோ? (2)
என் செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என் தூதாய்*
என் செய்யும் உரைத்தக்கால்?* இனக் குயில்காள் நீர் அலிரே?*
முன் செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன் செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே.
விதியினால் பெடை மணக்கும்* மென்நடைய அன்னங்காள்!*
மதியினால் குறள் மாணாய்* உலகு இரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல் வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
மதி எல்லாம் உள் கலங்கி* மயங்குமால் என்னீரே!
என் நீர்மை கண்டு இரங்கி* இது தகாது என்னாத*
என் நீல முகில் வண்ணற்கு* என் சொல்லி யான் சொல்லுகேனோ?*
நன் நீர்மை இனி அவர்கண்* தங்காது என்று ஒரு வாய்ச்சொல்*
நன் நீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ?
நல்கித் தான் காத்து அளிக்கும்* பொழில் ஏழும்; வினையேற்கே*
நல்கத் தான் ஆகாதோ?* நாரணனைக் கண்டக்கால்*
மல்கு நீர்ப் புனல் படப்பை* இரை தேர் வண் சிறு குருகே!*
மல்கு நீர்க் கண்ணேற்கு* ஓர் வாசகம் கொண்டு அருளாயே.
அருளாத நீர் அருளி* அவர் ஆவி துவராமுன்*
அருள் ஆழிப் புட்கடவீர்* அவர் வீதி ஒருநாள் என்று*
அருள் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
அருள் ஆழி வரி வண்டே!* யாமும் என் பிழைத்தோமே?
என்பு இழை கோப்பது போலப்* பனி வாடை ஈர்கின்றது*
என் பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என் பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங் கிளியே!* யான் வளர்த்த நீ அலையே?
நீயலையே ? சிறு பூவாய்!* நெடுமாலார்க்கு என் தூதாய்*
நோய் எனது நுவல் என்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணி மாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது-
வாய் அலகில் இன் அடிசில்* வைப்பாரை நாடாயே.
நாடாத மலர் நாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலர் அடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினை அற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனி வாடாய்!* உரைத்து ஈராய் எனது உடலே.
உடல் ஆழிப் பிறப்பு வீடு* உயிர் முதலா முற்றுமாய்க்*
கடல் ஆழி நீர் தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
அடல் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
விடல் ஆழி மட நெஞ்சே!* வினையோம் ஒன்றாம் அளவே.
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்* பெருமான் கண்ணனை*
வள வயல் சூழ் வண் குருகூர்ச்* சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப் பத்தின்*
வள உரையால் பெறலாகும்* வான் ஓங்கு பெரு வளமே. (2)