பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்* பொரு திறற் கஞ்சன் கடியன்*
காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னை தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!* கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த*
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்* அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி* மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப*
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத* நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற்கு அரிய பிரானே* திரியை எரியாமே காதுக்கு இடுவன்*
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய* கனகக் கடிப்பும் இவையாம்!
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்* மகரக்குழை கொண்டுவைத்தேன்*
வெய்யவே காதில் திரியை இடுவன்* நீ வேண்டிய தெல்லாம் தருவன்*
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய* ஒண்சுடர் ஆயர்கொழுந்தே*
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து* மாதவனே! இங்கே வாராய்
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு* வார்காது தாழப் பெருக்கிக்*
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்* கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்* இனிய பலாப்பழம் தந்து*
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்* சுரிகுழலாரொடு நீ போய்க்*
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்* குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்* பிரானே! திரியிட ஒட்டில்*
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்* விட்டுவே! நீ இங்கே வாராய்
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!* உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி*
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி* மதுசூதனே என்று இருந்தேன்*
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்* பொறுத்து இறைப் போது இரு நம்பீ!
கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா* காவலனே! முலை உணாயே
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி* நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்* பசுநிரை மேய்த்தாய்*
சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!* திரு ஆயர்பாடிப் பிரானே!*
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே* விட்டிட்டேன் குற்றமே அன்றே?
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்* என்னை நான் மண் உண்டேனாக*
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்* அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*
வன் புற்று அரவின் பகைக் கொடி* வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்*
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்* தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று*
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்* காணவே கட்டிற்றிலையே?*
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்* சிரீதரா! உன்காது தூரும்*
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற* காரிகையார் சிரியாமே
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்* காதுகள் வீங்கி எரியில்?*
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று* விட்டிட்டேன் குற்றமே அன்றே?*
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்* திரியவும் காண்டி*
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட* இருடிகேசா! என்தன் கண்ணே!
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்* கடிகமழ் பூங்குழலார்கள்*
எண்ணத்துள் என்றும் இருந்து* தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே*
உண்ணக் கனிகள் தருவன்* கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்*
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட* பற்பநாபா இங்கே வாராய்
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து* வலியவே காதிற் கடிப்பை*
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?* காதுகள் நொந்திடும் கில்லேன்*
நாவற் பழம் கொண்டுவைத்தேன்* இவை காணாய் நம்பீ* முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட* தாமோதரா இங்கே வாராய்
வார் காது தாழப் பெருக்கி அமைத்து* மகரக்குழை இட வேண்டிச்*
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்* சிந்தையுள் நின்று திகழப்*
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்* பன்னிரு நாமத்தால் சொன்ன*
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்* அச்சுதனுக்கு அடியாரே (2)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
வஞ்சனை செய்யத் தாய்உருஆகி* வந்த பேய் அலறிமண் சேர*
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்துதி செய்ய பெண்உருஆகி*
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திட தளர்ந்து*
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்* எம் பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவிதனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி* வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
எந்தை தந்தை தம்மானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது* 'எம் பெருமான் அருள்!' என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த*
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை*
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)
ஊனில் வாழ் உயிரே* நல்லை போ உன்னைப் பெற்று,*
வான் உளார் பெருமான்* மதுசூதன் என் அம்மான்,*
தானும் யானும் எல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதும் ஒத்தே.
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,* என்னைப் பெற்ற-
அத் தாய் ஆய் தந்தை ஆய்* அறியாதன அறிவித்து,*
அத்தா, நீ செய்தன* அடியேன் அறியேனே.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மா மாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்* நிலம் மாவலி மூவடி என்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனது ஆவியுள் கலந்தே.
எனது ஆவியுள் கலந்த* பெரு நல் உதவிக் கைம்மாறு,*
எனது ஆவி தந்தொழிந்தேன்,* இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ* பொழில் ஏழும் உண்ட எந்தாய்,*
எனது ஆவி யார்? யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.
இனி யார் ஞானங்களால்* எடுக்கல் எழாத எந்தாய்,*
கனிவார் வீட்டு இன்பமே* என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே* பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,*
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்* நுன பாதம் சேர்ந்தேனே.
சேர்ந்தார் தீவினைகட்கு* அரு நஞ்சை திண் மதியை,*
தீர்ந்தார் தம் மனத்துப்* பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை* அரக்கியை மூக்கு-
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல் முன்னமே.
முன் நல் யாழ் பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பல் நலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார் முகிலே என் கண்ணா,*
நின் அலால் இலேன்காண்* என்னை நீ குறிக்கொள்ளே.
குறிக்கொள் ஞானங்களால்* எனை ஊழி செய் தவமும்,*
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்* ஒளித்து உண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்* பிறவித் துயர் கடிந்தே.
கடி வார் தண் அம் துழாய்க்* கண்ணன் விண்ணவர் பெருமான்,*
படி வானம் இறந்த* பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட* படிந்து குடைந்து ஆடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.
களிப்பும் கவர்வும் அற்று* பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடர் ஆழி சங்கு ஏந்தி,*
அளிக்கின்ற மாயப் பிரான்* அடியார்கள் குழாங்களையே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.