பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)
எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றுஎன்று அலற்றாதே*
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!* அங்கதனே! நளனே*
கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே
ஞாலம் ஆளும் உங்கள் கோமான்* எங்கள் இராவணற்குக்*
காலன்ஆகி வந்தவா* கண்டு அஞ்சி கருமுகில்போல்*
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க* அங்கதன் வாழ்கஎன்று*
கோலம்ஆக ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மணங்கள் நாறும் வார்குழலார்* மாதர்கள் ஆதரத்தைப்*
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்* பொன்ற வரிசிலையால்*
கணங்கள்உண்ண வாளிஆண்ட* காவலனுக்கு இளையோன்*
குணங்கள் பாடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே
வென்றி தந்தோம் மானம் வேண்டோம்* தானம் எமக்குஆக*
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்* எம்பெருமான் தமர்காள்*
நின்று காணீர் கண்கள்ஆர* நீர் எம்மைக் கொல்லாதே*
குன்று போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே
கல்லின் முந்நீர் மாற்றி வந்து* காவல் கடந்து,* இலங்கை-
அல்லல் செய்தான் உங்கள் கோமான்* எம்மை அமர்க்களத்து*
வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்* வெம்கதிரோன் சிறுவா,*
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மாற்றம்ஆவது இத்தனையே* வம்மின் அரக்கர்உள்ளீர்*
சீற்றம் நும்மேல் தீர வேண்டின்* சேவகம் பேசாதே*
ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்* அநுமனை வாழ்கஎன்று*
கூற்றம் அன்னார் காண ஆடீர்* குழமணி தூரமே.
கவள யானை பாய்புரவி* தேரொடு அரக்கர்எல்லாம்-
துவள,* வென்ற வென்றியாளன்* தன்தமர் கொல்லாமே*
தவள மாடம் நீடுஅயோத்தி* காவலன் தன்சிறுவன்*
குவளை வண்ணன் காண ஆடீர்* குழமணி தூரமே.
ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்* எங்கள் இராவணனார்-
ஓடிப் போனார்,* நாங்கள் எய்த்தோம்* உய்வதுஓர் காரணத்தால்*
சூடிப் போந்தோம் உங்கள் கோமான்* ஆணை தொடரேல்மின்*
கூடிக்கூடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே.
வென்ற தொல்சீர்த் தென்இலங்கை* வெம்சமத்து* அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே (2)
வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!* மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்*
காமரு குயில்களும் கூவும் ஆலோ!* கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு* ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!* தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2)
தகவிலை தகவிலையே நீ கண்ணா!* தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்*
சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்- சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*
அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு* ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ*
மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்* வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்*
யாவரும் துணைஇல்லை யான் இருந்து* உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்* பொருகயல் கண்இணை நீரும் நில்லா*
சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த* இத் தொழுத்தையோம் தனிமை தானே.
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி* துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*
பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்* பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு-
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்* பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*
பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ* பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*
மணிமிகு மார்பினில் முல்லைப் போது* என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணிமிகு தாமரைக் கையை அந்தோ!* அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்* ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்*
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
வடித்தடம் கண்இணை நீரும் நில்லா* மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே.
வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு* வெள்வளை மேகலை கழன்று வீழ*
தூமலர்க் கண்இணை முத்தம் சோர* துணைமுலை பயந்து என தோள்கள் வாட*
மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ண* மெல் மலரடி நோவ நீபோய்*
ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு* அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று* ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்*
கசிகையும் வேட்கையும் உள்கலந்து* கலவியும் நலியும் என்கை கழியேல்*
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்* கைகளும் பீதக உடையும் காட்டி*
ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ* உகக்கும் நல்லவரொடும் உழிதராயே
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்* திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்-
வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்* எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*
மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு* நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ*
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே* அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!
அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!* அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ*
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-
உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று- ஊடுற என்னுடை ஆவி வேமால்*
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி* செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே!
செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு* அத்திருவடி திருவடிமேல்* பொருநல்-
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்* வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை* அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்- உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2)