பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட-
கள்வா! என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி என் தன்-
மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*.
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-
மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய்* என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*
அறியாது இருந்தறியேன் அடியேன்* அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு* நான் அடிமை
பூண்டேன்* என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நான்தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை
வந்தார்* என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே!* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது* தங்கள்-
கைப்போது கொண்டு இறைஞ்சி* கழல்மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஊன் நேர் ஆக்கைதன்னை* உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என்தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த
தேனே!* தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்-
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே. (2)
என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்*
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்* அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட* சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* என் மனம் போற்றி என்னாதே*
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்,*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்* கண்ணீர்மல்க இருக்கும்,*
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்* முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,*
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!* என்கொலோமுடிகின்றது இவட்கே?
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் சிந்தித்தாயே?
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!* அலை கடல் கடைந்த ஆர்அமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே!
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே! என்னும்* தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்* பாவியேன் செயற்பாலதுவே.
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* என்தீர்த்தனே என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே
கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,*
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே நோக்குகேன்? என்னும்,*
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என்செய்கேன் என்திருமகட்கே?
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே. (2)
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்* மூவுலகுஆளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,*
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்* வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (2)