பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட* வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்துள்*
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை* அகடு உற முகடு ஏறி*
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய* அரு வரை அணை கட்டி*
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்* இருந்த நல் இமயத்து*
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன* வேழங்கள் துயர்கூர*
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று* இளங்கொடிதிறத்து ஆயர்*
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்* இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்* மணி அறைமிசை வேழம்*
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர* ஒருவனது அகல் மார்வம் திறந்து*
வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்துள்*
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்* கிடந்து அருகு எரி வீசும்*
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரை செய் மாக் கடல் கிடந்தவன்* கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த*
அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்த நல் இமயத்து*
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை* அளை மிகு தேன் தோய்த்துப்*
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்* பரமா என்று*
இணங்கி வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்து*
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற* நிமிர்ந்து அவை முகில் பற்றிப்*
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய* கறி வளர் கொடி துன்னிப்*
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய* பூம் பொழில் இமயத்துள்*
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து* இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை* இரும் பசி அது கூர*
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய* அருவரை இமயத்து*
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று* எண்ணி நின்று இமையோர்கள்*
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறு துயர் அடையாமல்*
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை* இருந்த நல் இமயத்து*
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல் புரை எழில் நோக்கி*
பேதை வண்டுகள் எரி என வெருவரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரிய மா முகில் படலங்கள் கிடந்து* அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு* பிரிதி எம் பெருமானை*
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்* கலியனது ஒலி மாலை*
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு* அரு வினை அடையாவே* (2)
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.
அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.
பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை உள்ளில் ஒடுங்கே.
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும் பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.
எண் பெருக்கு அந் நலத்து* ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்* திண் கழல் சேரே.
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)