பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை* பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்-
தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை* பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை* அமுதம் பொதிஇன் சுவைக்*
கரும்பினை கனியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்* மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை*
மைந்நிறக்கடலை கடல் வண்ணனை* மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலை பகலை இற்றை நாளினை* நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலை கரும்பினிடைத் தேறலை* கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை* வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனைப்* பங்கில் வைத்து உகந்தான் தன்னை* பான்மையை பனி மா மதியம் தவழ்*
மங்குலை சுடரை வடமாமலை- உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை* தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல்இடைகழி* மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை* இம்மையை மறுமைக்கு மருந்தினை,*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* கையில்ஆழி ஒன்றுஏந்திய
கூற்றினை* குரு மாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினை புனலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை* சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை* திருமங்கை மணாளனை* தேவனை திகழும் பவளத்துஒளி
ஒப்பனை* உலகுஏழினை ஊழியை* ஆழிஏந்திய கையனை அந்தணர்
கற்பினை* கழுநீர் மலரும் வயல்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
திருத்தனை திசை நான்முகன் தந்தையை* தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை* விளங்கும் சுடர்ச் சோதியை* விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை* அரியை பரிகீறிய அப்பனை* அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற
கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்* கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-
துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை* தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை* பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை* மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை* வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்* மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில்- கற்கலாம்* கவியின் பொருள் தானே* (2)
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி* அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*
ஆகும்பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழக் கூடும்கொலோ!
கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!
வாய்க்கும்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்* வயல் சூழ் திருவாறன்விளை,*
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்* வடமதுரைப் பிறந்த,*
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்* மலர் அடிப்போதுகளே.
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்* இருத்தி வணங்க,*
பலர் அடியார் முன்பு அருளிய* பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
உலகம் மலி புகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்* தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை* அணி நெடும் தோள் புணர்ந்தான்,*
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்ற பிரான்,*
நின்ற அணி திருவாறன்விளை என்னும்* நீள் நகரம் அதுவே.
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்* திருவாறன்விளை,*
நீள் நகரத்து உறைகின்ற பிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய* வெம் போர்கள் செய்து.,*
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்* சரண் அன்றி மற்று ஒன்று இலமே.
அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று* அகல் இரும் பொய்கையின்வாய்,*
நின்று தன் நீள் கழல் ஏத்திய* ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*
சென்று அங்கு இனிது உறைகின்ற* செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி* தெளி விசும்பு ஏறலுற்றால்,*
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்* அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வந்து வணங்கும் பொழில்* திருவாறன்விளை அதனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்* என்னும் என் சிந்தனையே.
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவபிரான் அறியும்,*
சிந்தையினால் செய்வ தான் அறியாதன* மாயங்கள் ஒன்றும் இல்லை,*
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத்தேவர் குழுவணங்கும்,*
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை* தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களைத்,* தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2)