பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
    மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 

    தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
    நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)


    உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    மெய்யின் அளவே அமுதுசெய்ய வல*  ஐயன்அவன் மேவும் நகர்தான்*

    மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு*  மலர் கிண்டி அதன்மேல்* 
    நைவளம் நவிற்று பொழில்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.     


    உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*  தட மார்வர் தகை சேர்*

    வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி*  கங்குல் வயல் சூழ்* 
    நம்பன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.


    பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என*  வந்த அசுரர்* 
    இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல*  நின்ற பெருமான்*

    சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*  அடிகொள் நெடு மா* 
    நறைசெய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என*  வந்த அசுரர்* 
    தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக*  நொடி ஆம் அளவு எய்தான்*

    வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்*  இவை அம்கை உடையான்* 
    நாளும் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     


    தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்*  துணை ஆக முன நாள்* 
    வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்*  இனிது மேவும் நகர்தான்*

    கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்*  எழில் ஆர் புறவு சேர்* 
    நம்பி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்*  நந்தன் மதலை* 
    எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ*  நின்ற நகர்தான்*

    மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்*  மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
    நந்தி பணிசெய்த நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.   


    எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று*  முனியாளர் திரு ஆர்* 
    பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு*  கூட எழில் ஆர்*

    மண்ணில் இதுபோல நகர் இல்லை என*  வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
    நண்ணி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.           


    வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக*  மிக்க பெருநீர்* 
    அங்கம் அழியார் அவனது ஆணை*  தலை சூடும் அடியார் அறிதியேல்*

    பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி*  எங்கும் உளதால்* 
    நங்கள் பெருமான் உறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   


    நறை செய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்* 
    உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்*  அவை அம் கை உடையானை*  ஒளி சேர் 

    கறை வளரும் வேல் வல்ல*  கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்* 
    முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்*  முழுது அகலுமே.    


    பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்*  பெரிய பாரதம் கைசெய்து*  ஐவர்க்குத்-
    திறங்கள் காட்டியிட்டுச்*  செய்து போன மாயங்களும்* 

    நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை*  நின்று நின்று உருக்கி உண்கின்ற*  இச்- 
    சிறந்தவான் சுடரே!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)


    வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்*  மாய மாவினை வாய் பிளந்ததும்* 
    மதுவை வார் குழலார்*  குரவை பிணைந்த குழகும்* 

    அது இது உது என்னலாவன அல்ல*  என்னை உன் செய்கை நைவிக்கும்* 
    முது வைய முதல்வா!*  உன்னை என்று தலைப்பெய்வனே?* 


    பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட*  பிள்ளைத் தேற்றமும்*  பேர்ந்து ஓர் சாடு இறச்- 
    செய்ய பாதம் ஒன்றால்*  செய்த நின் சிறுச் சேவகமும்* 

    நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள*  நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க* 
    பையவே நிலையும் வந்து*  என் நெஞ்சை உருக்குங்களே*


    கள்ள வேடத்தைக் கொண்டு போய்*  புரம்புக்க ஆறும்*  கலந்து அசுரரை- 
    உள்ளம் பேதம் செய்திட்டு*  உயிர் உண்ட உபாயங்களும்* 

    வெள்ள நீர்ச் சடையானும்*  நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்* 
    உள்ளம் உள் குடைந்து*  என் உயிரை உருக்கி உண்ணுமே*.   


    உண்ண வானவர் கோனுக்கு*  ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்* 
    வண்ண மால் வரையை எடுத்து*  மழை காத்தலும்* 

    மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து*  கடந்து இடந்து மணந்த மாயங்கள்* 
    எண்ணும்தோறும் என் நெஞ்சு*  எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.


    நின்ற ஆறும் இருந்த ஆறும்/*  கிடந்த ஆறும் நினைப்பு அரியன* 
    ஒன்று அலா உருவு ஆய்*  அருவு ஆய நின் மாயங்கள்* 

    நின்று நின்று நினைக்கின்றேன்*  உன்னை எங்ஙனம் நினைகிற்பன்*  பாவியேற்கு- 
    ஒன்று நன்கு உரையாய்*  உலகம் உண்ட ஒண் சுடரே!*      


    ஒண் சுடரோடு இருளுமாய்*  நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து*  என்- 
    கண் கொளாவகை*  நீ கரந்து என்னைச் செய்கின்றன* 

    எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்*  என் கரிய மாணிக்கமே!*  என் கண்கட்குத்- 
    திண் கொள்ள ஒரு நாள்*  அருளாய் உன் திரு உருவே*.


    திரு உருவு கிடந்த ஆறும்*  கொப்பூழ்ச் செந்தாமரைமேல்*  திசைமுகன்- 
    கருவுள் வீற்றிருந்து*  படைத்திட்ட கருமங்களும்* 

    பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின்று நெக்கு* 
    அருவி சோரும் கண்ணீர்*  என் செய்கேன் அடியேனே!*     


    அடியை மூன்றை இரந்த ஆறும்*  அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்- 
    முடிய*  ஈர் அடியால்*  முடித்துக்கொண்ட முக்கியமும் *

    நொடியுமாறு அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்* 
    கொடிய வல்வினையேன்*  உன்னை என்றுகொல் கூடுவதே?*    


    கூடி நீரைக் கடைந்த ஆறும்*  அமுதம் தேவர் உண்ண*  அசுரரை- 
    வீடும் வண்ணங்களே*  செய்து போன வித்தகமும்* 

    ஊடு புக்கு எனது ஆவியை*  உருக்கி உண்டிடுகின்ற*  நின் தன்னை- 
    நாடும் வண்ணம் சொல்லாய்*  நச்சு நாகு அணையானே!*


    நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
    ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 

    ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
    மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.